கசப்பான உண்மைகள்
Mon Jun 29, 2015 6:06 am
(படித்ததில் சிந்திக்க வைத்தது) முதலாளி தனது நண்பருடன் தொழிற்சாலைக்குள் சுற்றிவந்தார். வழியில் ஒரு எந்திரத்தின் முன் நின்றுகொண்டிருந்த தொழிலாளியை நெருங்கி ஏதோ சொன்னவர் மறுபடியும் நண்பருடன் இணைந்து நடக்கலானார்.
“அந்தத் தொழிலாளிகிட்ட என்ன சொன்னாய்?” கேட்டார் நண்பர்.
“வேலையை வேகமா செய்யணும்னு சொன்னேன்.” சொன்னார் முதலாளி.
“அவருக்கு எவ்வளவு சம்பளம் தர்ற?” கேட்டார் நண்பர்.
“மாசம் ஆறாயிரம் ரூபாய் தர்றேன்.” சொன்னார் முதலாளி.
“அவருக்குக் கொடுக்கிற சம்பளப்பணம் உனக்கு எப்படிக் கிடைக்குது?” கேட்டார் நண்பர்.
“பொருள்களை விற்பதால் கிடைக்குது.” சொன்னார் முதலாளி.
“அந்தப் பொருள்களைச் செஞ்சு கொடுக்கிறது யாரு?” கேட்டார் நண்பர்.
“அந்தத் தொழிலாளிதான்.” சொன்னார் முதலாளி.
“அவரு ஒரு நாளைக்கு எந்த அளவுக்கு பொருள்கள் செஞ்சு கொடுப்பாரு?” கேட்டார் நண்பர்.
“ஆயிரம் ரூபாய் இருக்கும்...” சொன்னார் முதலாளி.
“அப்படின்னா மாசம் முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை அவரு செஞ்சுகொடுக்கிறாரு. ஆனா அவரு செய்ற வேலைக்கு நீ அவருக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறதுக்கு பதிலா, ‘வேகமா வேலை செய்யணும்’-னு நீ தினமும் சொல்றதுக்காக அவருதான் உனக்கு மாசம் இருபத்து நாலாயிரம் ரூபாய் கொடுக்கிறாரு, இல்லையா?” கேட்டார் நண்பர்.
“ம்...” என்று சொன்ன முதலாளி உடனே சுதாரித்துக்கொண்டு, ”ஆனா இந்த மெஷின்லாம் என்னோடதாச்சே,” என்றார்.
“இந்த மெஷின்களை நீ எப்படி வாங்கின?” கேட்டார் நண்பர்.
“பொருள்களை வித்து அதிலே கிடைச்ச பணத்திலேதான் வாங்கினேன்.” சொன்னார் முதலாளி.
“அந்தப் பொருள்களைச் செஞ்சது யாரு?” கேட்டார் நண்பர்.
இப்போது முதலாளி சொன்ன பதில்: “வாயை மூடிட்டு வா... அவன் காதிலே விழப்போவுது...”
<<<< கசப்பான உண்மைகள் >>
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|