ஒளி வீசுவோம்
Sat Jan 20, 2018 10:24 am
ஒளி வீசுவோம்
மத்தேயு 5 : 14-16
“உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக் கடவது.” – மத்தேயு 5 : 16
இயேசு பிறந்தபோது வானில் அரிய நட்சத்திரம் ஒன்று தோன்றி ஒளிவீசியது. இதை ஆய்வு செய்த வானியல் ஆய்வாளர்கள் மேற்கத்திய நாடுகள் ஒன்றில் சிறப்புமிக்க அரசர் பிறந்திருக்கிறார் என்று கணித்தார்கள். அரசனைக் காண காணிக்கைகளோடு புறப்பட்டார்கள். இவர்கள் தேடிவந்த அரசனை மாட்டுத் தொழுவத்தில் கண்டார்கள். பணிந்து கொண்டார்கள். காணிக்கை படைத்தார்கள்.
கிழக்கிலிருந்து ஒளிவீசிய நட்சத்திரத்தை பார்த்து வந்து இயேசுவை பணிந்து கொண்டது இன்றைய தினமாகும். பிற நாட்டவர் இயேசுவின் மகிமையை கண்ட இந்த நாள் மகிமை விளங்கின
பண்டிகையாக ஆசரிக்கப்பட்டு வருகிறது. சூரியனிலிருந்து ஒளியைப் பெற்ற சந்திரன் அந்த ஒளியை உலகத்தின் மீது விசுகிறது. இயேசு கிறிஸ்துவாகிய நீதியின் சூரியனிடமிருந்து ஒளி பெற்றிருக்கிற கடவுளின் பிள்ளைகள் அதை உலகின் மீது வீச வேண்டும் என்கிறது தியான வசனம்.
இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் இயேசுவில் ஒளியேற்றப்பட்டவர்கள். இவர்கள் விளக்குக் கம்பத்தில் ஏற்றிவைக்கப்பட்ட விளக்காக சித்தரிக்கப்படுகிறார்கள். துன்பங்களுக்குப் பயந்து ஒதுங்கிய நிலையில் யாரும் இயேசுவின் சீடர்களாக வாழவே முடியாது. ஒளியேற்றப்பட்ட விளக்கு, விளக்குத் தண்டில் பொருத்தப்பட்ட வேண்டுமே தவிர அதை மரக்காலால் மூடி வைப்பது மடமையே ஆகும்.
அப்படியே கிறிஸ்தவ வாழ்வும் ஒளி கொடுத்தால் மட்டுமே உண்மை கிறிஸ்தவ வாழ்வாகும். ஒளி கொடாமல் வாழ்வது மரக்காலால் மூடப்பட்ட வாழ்வாகும். விளக்கு மரக்காலினுள் காற்று இல்லாமல் அணைந்து போவது போல நம் வாழ்வும் அணைந்து இருளடைந்து விடும்.
இருளடைந்த உலகிற்கு ஒளியாயிருப்பது இயேசுவின் சீடர்களின் இயல்பு. இந்த ஒளி கடவுளின் பிள்ளைகளுக்கு புகழ் தரும் ஒளியல்ல மாறாக அது காணப்படாத பரலோகத்திற்கு புகழ் ஈட்டும் வாழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலய வழிபாடுகளினால் கடவுளுக்கு புகழீட்ட முடியாது. வாழ்க்கை முழுவதையும் இறையரசுக்குரிய பணிகளில் செலவிடுவதால் மட்டுமே நாம் கடவுளுக்குப் புகழ் அல்லது மகிமை உண்டாக்க இயலும். ஒளி பெற்றிருக்கிற நாம் ஒளி வீசுவோம். இறையரசை நிறுவுவோம்.
விண்ணகத் தந்தையே! உமது நேசகுமாரனால் பெற்ற ஒளியைப் பகிர்ந்தளிக்கிற மக்களாக எங்களை மாற்றும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|