ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
Tue Sep 13, 2016 7:10 am
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
கர்த்தரை துதியுடன் பாடி கொண்டாடுங்கள். நம்முடைய தேவனை சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள் சங்கீதம் 147:7
‘தேவன் ஆவியாயிருக்கிறார். அவரை தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரை தொழுது கொள்ள வேண்டும்’ (யோவான் 4:24) என்று இயேசுகிறிஸ்து கூறியதாக பார்க்கிறோம். பரிசுத்த அலங்காரத்தோடே அவரை தொழுது கொள்ள வேண்டும் என்று வசனம் நமக்கு அறிவுறுத்துகிறது.
இந்நாட்களில் முன்பு என்றும் இல்லாத அளவில் ஆராதனையை குறித்து சபைகளில் போதிக்கப்படுகிறது. அநேக சபைகளில் துதியும் ஆராதனையும் நடைபெறுகின்றன. கர்த்தர் நம்மை ஏற்படுத்தியதின் முக்கிய நோக்கங்களில் ஒன்று அவரை ஆராதிப்பது. 'இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன். இவர்கள் என் துதியை சொல்லி வருவார்கள்' என ஏசாயா 43:21ல் வாசிக்கிறோம். பரலோகத்திலும் நாம் செய்ய இருக்கும் முக்கிய காரியம் தேவனை ஆராதிப்பதே.
இந்த ஆராதனை என்ற பதத்திற்கு எபிரேய மொழியில் உள்ள வார்த்தை ‘பிராஸ்கினியோ’ என்பதாகும். அதற்கு அர்த்தம் ‘கொடுப்பது' என்பதாகும். என்ன கொடுப்பது? தேவன் நமக்கு பாராட்டியிருக்கிற கிருபைகள் ஏராளம் ஏராளமாகும், அதற்கு பதிலாக அவர் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது, நமக்கிருக்கிற சிறந்ததை அவருக்கு கொடுப்பதே. நம் இருதயத்தின் ஆழத்திலிருந்த வருகிற துதியும் ஆராதனையுமே நாம் அவருக்கு கொடுக்க முடியும். நம்மையும் நம் இருதயத்தையும் அவருக்கு ஒப்புக் கொடுத்து துதிப்பதையே அவர் விரும்புகிறார். துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது என்று நீதிமொழிகள் 21:27ல் பார்க்கிறோம். சுத்த இருதயத்திலிருந்து வரும் துதி ஸ்தோத்திரங்களையே தேவன் விரும்புகிறார்.
ஒரு நல்ல ஜெப வீரன் ஜெபிக்கும்போது கர்த்தரிடத்திலிருந்து நல்ல பதிலை பெற்றுக் கொள்கிறான். ஒரு நல்ல பிரசங்கம் செய்பவர், கர்த்தரிடத்திலிருந்து ஒரு நல்ல செய்தியை கொண்டு வருகிறார், ஆனால் துதிப்பவனோ, தேவனுடைய பிரசன்னத்தையே தன் மத்தியில் கொண்டு வருகிறான்.. தேவ பிரசன்னம் வரும்போது, அங்கு நம்மை தேவன் ஆசீர்வதிக்கிறார்.. அநேகர் ஆராதனை வேளையில்தான் ஜெபிப்பார்கள். தேவனே எனக்கு அது செய்யும், இதை செய்யும் என்று. அது அல்ல ஆராதனை, ஆராதனை வேளையில், தேவனே நீர் பெரியவர், நீர் வல்லவர், நீர் பரிசுத்தர் என்று அவருடைய மகத்துவங்களையும் குணாதிசயங்ளையும் புகழ்வதே துதியாகும், தேவன் செய்த நன்மைகளை சொல்லி துதிப்பது நன்றி பலியாகும். நம்முடைய ஆராதனை வேளையில் தேவனை துதிக்கவும் வேண்டும், நன்றி செலுத்தி துதிக்கவும் வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் நமது ஜெப விண்ணப்பங்களை ஏறெடுக்கக் கூடாது. ஜெப விண்ணப்ப பாடல்களை பாடவும் கூடாது. நம்மால் இயன்ற வரை அவருக்கு நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து அவரை உயர்த்தி அவரை துதித்து போற்ற வேண்டும்;.
நாம் மனம் திரும்பி, ஞானஸ்நானம் பெற்று, இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றுக் கொண்டபின், பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே வாசம் பண்ணுகிறார். அவர் நம்மை விட்டு விலகுவதுமில்லை, நம்மை கைவிடுவதுமில்லை என்று வாக்குதத்தம் பண்ணியிருக்கிறார். ஆகவே நாமாக அவரை துக்கப்படுத்தி அவரை தள்ளினாலொழிய ஆவியானவர் நமக்குள்ளேயே எப்போதும் வாசம் பண்ணுகிறவராயிருக்கிறார். அப்படியிருக்கும்போது ஒவ்வொரு முறையும், நாம் சபையாக கூடி வரும்போது, இறங்கி வாரும் பரிசுத்த ஆவியானவரே என்று பாடும்போது, ஆவியானவர் நமக்குள்ளே இல்லாததினால், நாம் அவரை வருந்தி அழைப்பதுப்போல விசுவாசமில்லாதவர்களாக நாம் பாடுகிறோம். ஆரம்ப நிலையிலுள்ள சபைகள் மட்டுமல்லாது நன்கு வளர்ந்த சபைகளும் இந்த மாதிரி பாடல்களை பாடி பரிசுத்த ஆவியானவரை வரவேற்கிறோம் என்று பலமாக கைகளை தட்டி வரவேற்கிறார்கள். ஆவியானவர் உங்களுக்குள்ளே இருக்கும்போது நீங்கள் ஏன் அவரை புதிதாக வந்தவரை வரவேற்பதுபோல் வரவேற்க வேண்டும்?
மட்டுமல்ல, சில நேரங்களில் பாடின ஒரு வரியை திரும்ப திரும்ப பாடி, அதுவும் வேகமாக பாடி, அப்போதுதான் ஆவியானவர் அவர்கள் மத்தியில் வருகிறார் என பலமாக கைளை தட்டி பாடுகிறோம். அந்த நேரம் மக்கள் பரவசம் அடைந்து, உணர்ச்சிகளின் உச்சக் கட்டத்திற்கு செல்கிறார்கள். அப்படி செல்லும்போது, பரிசுத்த ஆவியானவர் பலமாக இறங்கி வந்தார் என்று சொல்லுகிறவர்களும் உண்டு. பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள்ளேயே இருக்கிறார் என்பதையே மறந்து விடுகிறோம். ஆனால் அதே நேரத்தில், கைகளை உயர்த்தி, அல்லது இருதயத்தின் ஆழத்திலிருந்து, தேவனே, நீர் எத்தனை நல்லவர், இப்படியெல்லாம் வழிநடத்தினீரே என்று துதிக்கும்போதும், அந்நிய பாஷையில் அவரை துதிக்கும்போதும் மிகவும் சத்தமில்லாமல், அவரை ஆராதிக்கும்போது, நம் கண்களில் கண்ணீர் வருவதை காண்பீர்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களை துதிக்கும்படியாக அந்நிய பாஷைகளை கொடுத்து, பிதாவோடுகூட உறவாட உதவிசெய்வார். ஆனால் அதே நேரத்தில் கைகளை தட்டி சத்தமாக அந்நிய பாஷைகளை பேசி ஆர்ப்பரிக்கும்போது, ஆவியானவர் மெல்லிய குரலில் பேசும் சத்தம் நமக்கு கேட்காமலேயே போய் விடும் வாய்ப்பு உண்டு. நான் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்திற்கும், அந்நிய பாஷைக்கும் எதிரி அல்ல. ஆனால் எல்லாம் ஒழுங்கின்படி நடக்க வேண்டும். நம் தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், ஒழுங்கின் தேவனாயிருக்கிறார்.
சிலர் அமைதியாக தொழுது கொள்வதால் பரிசுத்த ஆவியானவரின் கிரியை அவர்களிடம் இல்லை என்ற கருத்து தவறானது. கர்த்தரை தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும் என்று வேதம் நமக்கு கூறுகிறது. வெளியே பரபரப்போடு நாம் தொழுது கொண்டுவிட்டு கருத்தோடும், உண்மையோடும் தொழுது கொள்ளாவிட்டால் நாம் தொழுது கொள்வதினால் எந்த பயனுமில்லை.
கர்த்தரை ஆராதிப்போம், கருத்தோடு ஆராதிப்போம். உண்மையோடு ஆராதிப்போம். அவர் நாமம் மகிமைபடும்படியாக ஆராதிப்போம், நம்மையும் நமக்குள்ள யாவற்றையும் அவருக்கு அர்ப்பணித்து அவரை ஆராதிப்போம். உள்ளத்தின் ஆழத்திலிருந்து அவரை ஆராதிப்போம். தேவன் நம்மை ஏற்படுத்தியதன் நோக்கத்தை நிறைவேற்றுவோம். ஆமென் அல்லேலூயா!
ஆராதனை நாயகன் நீரே இயேசுவே
ஆராதனை வேந்தனும் நீரே
ஆயுள் முழுவதுமே
உம்மை தொழுதிடுவேன்
ஜெபம்: எங்கள் ஆராதனைக்கும் துதிகளுக்கும் பாத்திரரான நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். ஆவியோடும் உண்மையோடும் உம்மை தொழுது கொள்ள எங்கள் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்யும். உள்ளத்தின் ஆழத்திலிருந்து உம்மை நேசித்து உம்மை ஆராதிக்க கிருபை செய்யும். உம்மை ஆராதிக்கும்படியாக எங்களை படைத்தீரே, அதை உணர்ந்து உண்மையாக உம்மை துதிக்கவும் ஆராதிக்கவும் கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|