உன் திராணிக்கு மேலாக
Fri Jul 17, 2015 10:28 pm
குரு பூனை ஒன்று இருந்தது. அதனிடம் பல சிஷ்யன் பூனைகள் பயின்று வந்தன. எல்லாப் பூனைகளும் தங்களுக்கு வருகிற சந்தேகங்களை குருவிடம் கேட்டுத் தெளிவு படுத்திக் கொள்வது வழக்கம்.
ஒரு நாள் ஒரு சிஷ்யன் பூனை வேதனையுடனும் , குழப்பத்துடனும் காணப்பட்டது. குரு பூனை அதைப் பரிவுடன் பார்த்து அதன் குழப்பத்திற்கான காரணத்தைக் கேட்டது. சிஷ்யன் பூனை சொன்னது,
" குருவே! நான் எப்போதும் சாலைகளிலும் , சுவர்களிலும் நடந்து போகிறேன். வழியில் எத்தனையோ வாகனங்கள், மிருகங்கள் எதிர்ப்படுகின்றன. நான் கவனமாக முன்னே சென்று விடுகிறேன். ஆனால் இந்த வால்? இது என் பின்னால் வந்துகொண்டுதான் இருக்கிறதா? இது எதிலாவது சிக்கிக் கொள்ளுமா ? வேறு மிருகமோ , வாகனமோ சிதைத்து விடுமா என்ற கவலையும், பயமும் என்னை வாட்டி வதைக்கின்றன குருவே! இந்த வாலைப் பிடித்துக் கையில் வைத்துக் கொண்டால் எந்தக் குழப்பமும் இல்லாமல் நடமாடுவேன். உதவி செய்ய முடியுமா குருவே? " என்றது. குரு சொன்னது,
" அட மூடனே! பூனை இனம் பிறந்தது முதற்கொண்டே வாலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பூனைகள் நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றன. வாலும் பின்னால் சென்று கொண்டேதான் இருக்கிறது. நீயும் எதையும் குறித்து குழப்பிக் கொள்ளாமல் போ. வால் உன் பின்னாலேயே தொடர்ந்து வரும் " என்றது.
செல்லமே! தேவையற்ற குழப்பமும், பயமும் எதையுமே சாதிக்கப் போவதில்லை. உன் திராணிக்கு மேலான எதுவுமே உனக்கு நேரப்போவதுமில்லை. கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்து விட்டுக் குழப்பமில்லாமல் உன் வழியில் ஒழுங்காய் நட. வால் பிரச்சனையில்லாமல் உன் பின்னாலேயே வரும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|