பரலோகத்திலா, பாதாளத்திலா?
Fri Jul 17, 2015 9:47 pm
ஒரு அழகான வாலிபன், ஒரு குப்பைத் தொட்டிக்குள் கையை விட்டு அதிலிருந்த எச்சில் இலையில் இருந்த உணவை எடுத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். அவனது உடைகளைப் பார்த்தாலே அவன் ஒரு பெரிய வீட்டுப் பிள்ளை என்பது தெரிந்தது. ஆனால் அந்த வழியாகப் போன யாருமே அவனது கோலத்தைக் கண்டு வருத்தப்படவில்லை. ஒரு சிலரோ அதைக் கண்டு புன்னகைத்தபடியே சென்றனர். மிகுந்த வேதனையுடன் நண்பரைப் பார்த்தேன்.
அவர் என் மனதில் இருப்பதைப் புரிந்துகொண்டு பதிலளித்தார். அந்த இளைஞனின் தந்தை அந்த ஊரையே ஆட்டிப் படைத்தவராம். அடாவடியாக சொத்துக்களை எழுதி வாங்குவது, அழகிய பெண்களைத் தூக்கிச் செல்வது, எதிர்க்கும் யாரையும் ஈவிரக்கமின்றி வெட்டிப் புதைப்பது என்று அவர் செய்த அநியாயங்கள் ஏராளம்.
ஊரில் பல குடும்பங்கள் அவரால் நாசமானது. யாராலும் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. யாருடைய சாபமோ அவருடைய பிள்ளைகள் பிறந்த சில நாட்களிலேயே இறந்து போக, சாகாமல் பிழைத்த ஒரே பிள்ளை அவன் மட்டுமே. பத்து வயது வரை நன்றாக இருந்த அவன் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பைத்தியமானான். அவன் அப்பாவும் திடீரென இறந்தார். அம்மாவும், ஒரு சில வேலையாட்களும் அவனைக் கவனித்துக் கொண்டாலும் சில சமயங்களில் இது போல ஓடி வந்து விடுவான். இதில் கொடுமை என்னவென்றால், அவன் அச்சு அசல் தனது அப்பாவைப் போலவே இருந்ததால் மக்களின் வெறுப்பு அவன் மீது திரும்பியது.
அவன் சாக்கடையில் புரளுவதையும், எச்சில் இலையில் சாப்பிடுவதையும் பார்த்து, அவனது தகப்பனே அப்படியெல்லாம் கேவலப் படுவதாக நினைத்து மகிழ்ந்தார்கள். ரசித்தார்கள். எனவேதான் யாருமே அவனுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. நண்பர் சொன்ன கதையைக் கேட்டதும் எனக்கு ஒரு விஷயம் சவுக்கடி மாதிரி மனதில் பட்டது. தகப்பனின் சாயலில் இருந்த ஒரே காரணத்துக்காக அவன் அசிங்கப் படுவதை ஒரு ஊரே ரசிக்கிறது.
தேவ சாயலில் இருக்கும் நாம் அசுத்தமான காரியங்கள் செய்யும்போது , தேவனே அசிங்கப் படுவதாகப் பிசாசு களிகூருவானல்லவா? மனிதன் போதையில் விழுந்து கிடக்கும் போதும், திருடும் போதும் இன்னும் எண்ணற்ற பாவங்கள் செய்யும்போதும் நம்மிடம் இருக்கிற தேவ சாயலைக் கண்டு பாதாளத்தில் ஆர்ப்பரிப்பு உண்டாகாமல் இருக்குமா? இதனால்தானே சத்துரு மனிதன் போகும் வழியெங்கும் பாவத்தைக் கடை பரப்பி வைத்திருக்கிறான்? நாம் செய்யும் ஒவ்வொரு பாவத்திலும் கடவுளே தோற்றுப் போனதாய்க் குதூகலப் படுவான்.
செல்லமே! நமது நடக்கைகள் இனி எங்கே மகிழ்ச்சியை உண்டாக்கும்?
செல்லமே! நமது நடக்கைகள் இனி எங்கே மகிழ்ச்சியை உண்டாக்கும்?
பரலோகத்திலா?
பாதாளத்திலா?
ஜான் சரவணன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|