சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பை மத்திய அரசு வெளியிட்டது
Sat Jul 04, 2015 11:02 pm
புதுடெல்லி,
சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதில் கிராமப்புறங்களில் மாத ஊதியம் பெறுவோர் 10 சதவீதம் அளவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
640 மாவட்டங்கள்
கடந்த 1932–ம் ஆண்டு சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. குறிப்பிட்ட பிராந்தியம், இனம், சாதி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் குடும்பங்களின் வளர்ச்சி குறித்து வெளியிடப்படும் இத்தகைய கணக்கெடுப்பு அதற்குப்பின் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 80 ஆண்டுகளில் முதல் முறையாக நேற்று சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மந்திரி சவுத்ரி பிரேந்திர சிங் ஆகியோர் இணைந்து இதை வெளியிட்டனர்.
இதில் இந்தியா முழுவதும் உள்ள 640 மாவட்டங்களில் வசித்து வரும் குடும்பங்களில், கடந்த 2011–ம் ஆண்டில் எடுக்கப்பட்ட பல்வேறு விவரங்கள் இடம் பெற்று உள்ளன.
17.91 கோடி குடும்பங்கள்
இந்த கணக்கெடுப்பு படி, இந்தியாவில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் 24.39 கோடி குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் 17.91 கோடி குடும்பத்தினர் (73 சதவீதம்) கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர். இதில் 18.5 சதவீத தலித்துகளும், 11 சதவீத பழங்குடியின மக்களும் அடங்குவர்.
கிராமப்புறங்களில் வாழ்வோரில் கணிசமான குடும்பத்தினர் மிகவும் குறைந்த வருவாய் பெற்று வருவது கண்டறியப்பட்டு உள்ளது. அதன்படி 7.05 கோடி (39.39 சதவீதம்) குடும்பத்தினர் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் மாத வருமானம் பெறாதவர்கள் ஆவர். இவர்களிடம் வாகனங்கள், மீன்பிடி படகுகள் மற்றும் வேளாண் கடன் அட்டை போன்ற எதுவும் இல்லை.
தினக்கூலிகள்
30.10 சதவீத கிராமப்புற குடும்பங்கள் (5.39 கோடி) வேளாண் தொழிலை நம்பியும், 9.14 கோடி குடும்பத்தினர் (51.14 சதவீதம்) தினக்கூலியாளர்களாகவும் இருக்கின்றனர். சுமார் 44.84 லட்சம் குடும்பத்தினர் வீட்டு வேலைக்காரர்களாகவும், 6.68 லட்சம் குடும்பத்தினர் பிச்சைக்காரர்களாகவும் வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.
நேற்று வெளியிடப்பட்ட கணக்கெடுப்பு படி கிராமப்புறங்களில் மாத ஊதியம் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதமாக உள்ளது. இவர்களில் 5 சதவீதம் பேர் அரசு ஊழியர்களாகவும், 3.57 சதவீதத்தினர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களாகவும், 1.11 சதவீதத்தினர் பொதுத்துறை நிறுவன ஊழியர்களாகவும் உள்ளனர்.
வருமான வரி செலுத்துவோர்
கிராமப்புறங்களில் வாழ்வோரில் 4.6 சதவீத குடும்பத்தினர் வருமான வரி செலுத்துகின்றனர். எனினும் கிராமப்புற தலித் இன மக்களில் வருமான வரி செலுத்துவோர் 3.49 சதவீதமாகவும், பழங்குடியினரில் 3.34 சதவீதத்தினர் மட்டுமே வருமான வரி செலுத்துவோர் எனவும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கிராமப்புற குடும்பத்தினரில் 94 சதவீதம் பேர் சொந்த வீடு வைத்துள்ளனர். ஒட்டுமொத்த கிராமப்புற மக்கள் தொகையில் 56 சதவீத குடும்பத்தினர் நிலமற்ற ஏழைகளாக வசித்து வருகின்றனர். தலித் இனத்தை பொறுத்தவரையில் 70 சதவீதம் பேரும், பழங்குடியினர் 50 சதவீதத்தினரும் நிலமற்றவர்களாக இருந்து வருகின்றனர்.
இந்தியாவின் உண்மை நிலை
இந்த கணக்கெடுப்பை வெளியிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி, ‘இந்தியாவின் உண்மை நிலையை இந்த ஆவணங்கள் எதிரொலிக்கின்றன. மத்தியிலும், மாநிலத்திலும் சிறந்த இலக்கை நோக்கிய கொள்கைகளை வகுப்பதற்கு அரசுக்கு இந்த விவரங்கள் உதவிகரமாக இருக்கும்’ என்று கூறினார்.
இந்த ஆவணத்தின் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக உயர்மட்டக்குழுக்கள் ஆலோசனை நடத்தியதாக கூறிய அவர், நாடு முழுவதும் உள்ள பல்வேறு குடும்பங்கள் தொடர்பான தெளிவான நிலையை அரசுக்கு இந்த அறிக்கை வழங்கி உள்ளது என்று தெரிவித்தார்.
இந்த அறிக்கையை தொடர்ந்து கிராமங்களில் வறுமையை விரட்ட, கிராம பஞ்சாயத்துகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, மாநில அரசுகளுடன் மத்திய ஊரக மேம்பாடு அமைச்சகம் ஆலோசித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|