நடமாடும் கோவிலாக வாழ்வோம்
Sat Aug 08, 2015 5:48 pm
ஒரு துறவி புனிதத்தலம் ஒன்றிற்கு புனித பயணம் மேற்கொண்டார். நீண்ட நாட்கள் கால்நடையாய் நடந்து வந்ததால் உடல் சோர்ந்து ஒரு மரத்தின் நிழலில் கால்களை நீட்டிப் படுத்து சற்று இளைப்பாறினார். இளைப்பாறியவர் கொஞ்ச நேரத்தில் அப்படியே கண் அயர்ந்து தூங்கிவிட்டார்.
அப்போது புனித தலத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒருவர், துறவி தூங்குவதைப் பார்த்துவிட்டு துறவியிடம் வந்து, “சாமி, ஏன் இப்படி கோயில் இருக்கும் திசையைப் பார்த்து கால்களை நீட்டிக்கொண்டு தூங்குகிறீர்கள். கால்களை அந்தப் பக்கமாகப் போட்டுத் தூங்குங்கள்” என்றார். அதற்கு துறவி அவனிடம், “கடவுள் இல்லாத திசையைக் காட்டு, அந்தப் பக்கம் காலை நீட்டித் தூங்குகிறேன்” என்றாராம்.
கடவுள் எங்கும் நிறைந்து இருப்பவர், அவருக்கு குறிப்பிட்ட இடம் என்பது கிடையாது. ஆனாலும் கோவிலில் அவர் சிறப்பாக இருக்கின்றார் என்பது எல்லாராலும் நம்பக்கூடிய உண்மை. ஆண்டவர் தம் திருக்கோவிலில் வீற்றிருக்கிறார் என்று விவிலியம் சொல்கிறது. (அபக்கூக்கு 2;2௦). எனவே கடவுள் வாழும் திருக்கோவிலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது நமது கடமை.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு திருக்கோவிலில் வாணிகம் செய்துகொண்டிருந்தவர்களை விரட்டி அடிக்கிறார். தந்தையின் இல்லத்தை சந்தையாக்காதீர்கள் என்கிறார்.
பொதுவாக இந்தியர்களாகிய நமது வாழ்வு கோவிலைச் சுற்றி அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகது. நமது முன்னோர்கள் கூட கோவில் இல்லாத ஊரில் குடி இருக்கக்கூடாது, ஆலயம் தொழுவது சாலமும் நன்று என்று கோவிலின் முக்கியத்துவத்தை நமக்குச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்றனர். அதனால் தான் கோவிலையும் நமது வாழ்வையும் பிரிக்க முடியாது என்று சொல்கிறேன்.
இஸ்ராயேல் மக்களும் நம்மைப் போன்று கோவிலுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தனர். கோவிலை இறைவன் வாழும் இடமாக எண்ணி அதற்கு உரிய மரியாதை கொடுத்து வந்தனர். ஆனால் காலப்போக்கில் எருசலேம் ஆலயம் வியாபாரத்தலமாக மாறிப்போனதுதான் வேடிக்கையான ஒன்று.
எருசலேம் திருக்கோவிலில் தலைமை குருவாக வருபவர் பணம் கொடுத்து அந்தப் பதவியை பெற்றனர். கோவிலில் காலையிலும் மாலையிலும் நடக்கும் பலிகளுக்கு தேவைப்படும் விலங்குகளை அங்கே இருந்தவர்கள் அதிக விலைக்கு விற்றனர். ஆண்டுதோறும் யூதர்கள் கொண்டாடும் பாஸ்கா விழா, கூடார விழா, அறுவடைப் பெருவிழாவிற்கு உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வருபவர்கள் அந்த நாட்டின் நாணயத்தை உள்நாட்டு நாணயமாக மாற்றும்போது நாணயம் மாற்றுபவர்கள் ஆறுக்கு ஒரு பங்கை எடுத்துக் கொண்டார்கள். இப்படிப் பல்வேறு காரியங்கள் எருசலேம் ஆலயம் வியாபாரக்கூடமாக மாறிப்போனதால் இயேசு சாட்டி எடுத்து அவர்களை விரட்டி அடிக்கிறார், நாணயம் மாற்றுவோரின் மேசைகளைப் புரட்டிப் போடுகிறார்.
கோவில் என்பது இறைவனை வழிபடும் இடம், அங்கே இறைவனுக்கு முதல் இடம் தரப்பட வேண்டும் பணத்திற்கு அல்ல என்பதை இயேசு இங்கே தெளிவு படுத்துகிறார். இயேசு இங்கே தன் உடலாக கோவிலைப் பற்றியும் சுட்டிக்காட்டுகிறார் என்பது கண்கூடு (யோவா 2:21).
கோவில்கள் இரண்டு வகை. ஒன்று கல், மண் இவற்றால் கட்டப்பட்ட கோவில்; இன்னொன்று கடவுளால் கட்டப்பட்ட கோவில் அதாவது மனிதர்களாகிய நாம். நீங்கள் கடவுள் வாழும் கோவில் என்கிறார் பவுல் (1கொரி 3:16) திருமூலரோ, “உள்ளமென்னும் கோவில், ஊனுடம்பு ஆலயம்” என்பார். நாம் கல்லால், மண்ணால் கட்டப்பட்ட கோவிலுக்கு மட்டும் மதிப்பளிப்பதோடு அல்லாமல் கடவுளால் கட்டப்பட்ட கோவிலுக்கு மதிப்பளிக்க வேண்டும். அப்படி நாம் மதிபளிக்க வில்லை என்றால் கடவுள் நம்மை அழித்துவிடுவார்” என்கிறார் பவுலடியார் (1கொரி 3:17).
நம்முடைய அன்றாட வாழ்வில் உயிருள்ள கோவில்களாக மனிதர்களுக்கு நாம் மதிப்பளிக்கிறோமா என்று சிந்தித்தப் பார்க்கவேண்டும். நாம் பிறர் மீது கொள்ளும் கோபம், பொறாமை, காழ்புணர்ச்சி, பகைமை, வன்மம் இவை எல்லாம்கூட கடவுளுக்கு எதிராக செய்யும் பாவங்கள் தானே!
ஒரு துணி துவைக்கும் பெண்மணி வாரம் முழுவதும் வேலை பார்த்துவிட்டு வார இறுதியில் கோவிலுக்குச் சென்று அங்கே இருந்து கோவில் நிர்வாகியிடம், “நான் இந்த கோவிலில் உறுப்பினராகச் சேர்ந்து கொள்ளட்டுமா? என்று கேட்டார். அதற்கு அந்த நிர்வாகி அவளது அழுக்குப் படிந்த ஆடைகளைப் பார்த்துவிட்டு, “அடுத்த வாரம் வா” என்று போகச் சொல்லிவிட்டார்.
அடுத்த வாரம் அந்தப் பெண்மணி மீண்டுமாக கோவில் நிர்வாகியிடம் சென்று கேட்டபோது அவரும் அதே பதிலைச் சொல்லி அனுப்புவிட்டார். இதனால் அந்தப் பெண்மணி கோவிலுக்குச் செல்வதை நிறுத்திவிட்டாள்.
ஒரு நாள் அந்தக் கோவில் நிர்வாகி கடைத் தெருவுக்குச் சென்றபோது அந்தப் பெண்மணியைப் பார்க்க நேர்ந்தது. அப்போது அவளிடம் அவர், “நீ ஏன் இப்போது எல்லாம் கோவிலுக்கு வரமாட்டேன் என்கிறாய்” என்றார். அதற்கு அந்தப் பெண்மணி அவரிடம், கடவுள் எனக்கு ஒரு நாள் தோன்றினார். அவர் என்னிடம், ‘நீ ஏன் கோவிலுக்குப் போகிறாய், அந்தக் கோவிலில் என்னையே அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள், பிறகு எப்படி உன்னை எப்படி அனுமதிப்பார்கள்’ என்று சொல்லிவிட்டு மறைந்துபோனார்” என்றாள். இதைக் கேட்ட கோவில் நிர்வாகி பேச்சு மூச்சு இல்லாமல் போனார்.
சின்னஞ்சிறு சகோதரர்களுக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்ற இறைவார்த்தை இங்கே எவ்வளவு பொருத்தம் (மத்; 25:40).
நாம் நம்மோடு வாழும் உயிருள்ள கோவில்களாகிய மனிதர்களை மதிக்காதபோது உண்மைக் கடவுளையும் அவமதிக்கிறோம் என்பதுதான் உண்மை. எனவே நாம் கடவுளையும், அவர் சாயலாகப் படைக்கப் பட்ட மனிதர்களையும் அன்பு செய்ய வேண்டும் என்பதுதான் இறைவார்த்தை நமக்குச் சொல்லும் பாடமாக இருக்கிறது. அதனை இன்றைய முதல் வாசகத்தில் பத்துக் கட்டளை வழியாகப் படிக்கக் கேட்கிறோம்.
பத்துக் கட்டளையில் முதல் ஐந்து கட்டளைகள் கடவுளை அன்புசெய்வது பற்றியும், அடுத்த ஐந்து கட்டளைகள் மனிதர்களை அன்பு செய்வது பற்றியும் இருப்பதாக விவிலிய அறிஞர்கள் கூறுவார்கள். எனவே கடவுளை அன்பு செய்யும் அதே வேளையில் மனிதர்களையும் அன்பு செய்வோம். நாமே நடமாடும் நடமாடும் கோவில்களாக மாறுவோம்.
உன்னோடு வாழும் சகோதரனுக்கு ஒன்று செய்தால் அது கடவுளுக்கே செய்வதாகும்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|