வேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - Hittites
Mon Jun 25, 2018 8:28 pm
ஏத்தியர்(Hittites) என்னும் ஜாதியினரைக் குறித்து உலகுக்கு முதன்முதலில் தெரிவித்த சரித்திர ஆவணம் வேதாகமமே. உலகிலேயே அவர்களைக் குறித்த சரித்திர தகவல்களைத் தந்த முதல் எழுத்து மூல ஆவணம் வேதாகமமே.
வழமை போலவே வேதாகமம் ஒரு கட்டுக்கதை என்று சொல்லி பிழைத்து வந்த நிபுணர் கூட்டம் ஏத்தியரைப்பற்றி வேதத்தில் இருப்பதைப் பார்த்து விட்டு ஏத்தியர் என்று ஒரு ஜாதியே இந்த உலக சரித்திரத்தில் இருக்கவில்லை. இங்கே வேதாகமம் உண்மையற்றது என்று நிரூபணமாகிறது என்று சொல்லி தங்களை தாங்களே புகழ்ந்து வந்தனர்.
ஏத்தியரைப் பற்றி வேதாகமத்தில் 48 தடவை குறிப்பிடப்பட்டிருந்தாலும் வேத நம்பிக்கையாளர்கள் கூட அவ்வளவு பெரிய ராட்சியம் இவ்வுலக சரித்திரத்தில் இருந்ததா என்று நினைத்துப் பார்க்கவில்லை.
எகிப்திய சித்திர ரூபமான எழுத்துக்களைக் கண்டு பிடித்த போது அச்சமயத்திலிருந்த நிபுணர்களுக்கு ஏத்தியர்களைப்பற்றி ஒன்றும் தெரியாது. வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் அவர்களைப்பற்றி குறிப்பிட்டிருந்தது மட்டும்தான் தெரியும். அதிலும் அநேக நிபுணர்கள் வேதாகம சரித்திர உண்மைகளை நம்பாததால் ஏத்தியர் என்ற ஜாதியார் இவ்வுலகத்தில் வாழ்ந்தனரா? என்றும் அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களா? என்றும் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்;
Archibald Henry Sayce
மறைந்து போன ஏத்தியர்களைப்பற்றி அடையாளங்களைக் கண்டு பிடித்து வெளிப்படையாக சாட்சி கூறிய முதல் நிபுணர் ஆர்சிபால்ட் ஹென்றி சேஸ் (Archibald Henry Sayce) என்பவராவார். இவர் 1879ம் ஆண்டு 'சின்ன ஆசியாவில் ஏத்தியர்கள்' என்னும் தலைப்பில் ஒரு பத்திரிகையை எழுதினார். அச்சமயத்தில் Meyar’s Neues Knoversation-Lexicon என்ற ஜெர்மன் அகராதியிலும் கூட ஏத்தியரைக் குறித்து ஏழே வரிகள் சொல்லப்பட்டிருந்தது. அவர்களைக் குறித்த சாட்சிகள் மிகக் குறைவாக இருந்தது. அநேக நிபுணர்கள் ஆர்சிபால்ட் ஹென்றி சேஸ் அவர்களை 'ஏத்தியர்களின் உற்பத்தியாளர்' என்று கூறி கேலி செய்தனர்.
ஏத்தியர்களைக் குறித்து சேஸ் அவர்கள் அவ்வளவு துணிவுடன் எடுத்துச் சொல்ல அவருடைய ஆதாரங்கள் என்னவாயிருந்தது?
முதல் ஆதாரம் வேதாகமமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சரித்திரக் குறிப்புகளில் அவருக்கு இருந்த நம்பிக்கையுமாகும். வேதக்குறிப்புக்களை அவர் சாட்சியாக உபயோகித்தார்.
Hamath
இரண்டாவது- தொல்பொருள் ஆராய்ச்சியின் சாட்சிகள். வடசிரியாவிலுள்ள ஆமாத்(hamath) என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய சித்திரரூப எழுத்துக்களை கொண்ட கற்கள். இதைப்போன்ற கற்கள் துருக்கியின் தெற்கே உள்ள சிமிர்னா என்ற இடத்திலும், ஐப்பிராத்து நதியின் மேற்கு கரையிலிருக்கும் கார்கிமெஸ் என்ற இடத்திலும் கண்டு பிடிக்கப்பட்டன. அதோடு அன்காரா என்ற இடத்திலிருந்து கிழக்கே 120 மைல் தொலைவிலிருக்கும் பொகாஸ்காய் (Boğazköy)என்ற இடத்தை நேரில் போய் பார்த்து அதின் அதிசயங்களை விவரித்தார். இந்த பொகாஸ்காய் என்ற இடம்தான் ஏத்தியர்களின் தலைநகரமாயிருந்த பட்டணம் என்று பின்பு தெரியவந்தது.
அதோடு எகிப்திலுள்ள கீட்டா எழுத்துக்களை (Kheta Inscriptions) கண்டு பிடித்தார். கண்டுபிடிக்கப்பட்ட இந்த உண்மைகளை ஒன்று சேர்த்து வேதாகமத்தில் குறிப்பிட்டிருக்கும் ஏத்தியர்கள் இவர்கள்தான் என்று ஊகித்தார்.
1884 இல் வில்லியம் ரைட் (William Wright) என்பவர் ஏத்தியர்களின் ராஜ்யம் என்னும் தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அதில் சேஸ் அவர்களால் வாசித்துக் கண்டு பிடிக்கப்பட்ட ஏத்தியர்களின் எழுத்துக்களையும் வெளியிட்டார். இந்தக் கதையின் மூலம்தான் ஏத்தியர்களின் சரித்திரமே ஆரம்பமானது என்று சொல்லப்படுகிறது. மேலும் அந்த மக்கள் மிகவும் வல்லமையுடையவர்களாக இருந்தனரென்றும், அதன் காரணமாக மூன்றாம் தட்மோஸ் என்பவனை பலவந்தப்படுத்தி வரி வசூலித்தார்கள் என்றும் தெரிகிறது.
மெசப்பட்டோமியாவில் இவர்கள் ஹட்டி என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் கி.மு-1550 இல் பாபிலோனைக் கைப்பற்றினார்கள். அச்சமயத்தில் பாபிலோனானது ஹம்முரபி என்ற அரசனின் ஆட்சியின்கீழ் மிகப் புகழ்பெற்ற ராஜ்யமாய் இருந்தது.
கீட்டா மக்கள் பாபிலோனைக் கைப்பற்றி பழைய பாபிலோன் சாம்ராஜ்யத்துக்கே ஒரு முடிவைக் கொண்டுவந்து விட்டார்கள். இந்த ஜனங்கள் 900 வருடங்கள் வரை ஆட்சி செய்தார்கள் என்று பின்னர் கண்டு பிடிக்கப்பட்ட வில்லைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
amarna tablets
1887 இல் பிரசித்தி பெற்ற டெல்-எல்-அமார்னா வில்லைகளைக் (Amarna tablets) கண்டு பிடித்தார். இது அவருக்கு ஒரு பெரிய வெற்றியை அளித்தது. அந்த வில்லைகள் யாவும் சரித்திரப்பூர்வமான பத்திரங்களாய் இருந்தன. இந்தப் பத்திரங்களில் ஏத்தியர்கள் எகிப்தியர்கள் மேல் எடுத்த படையெடுப்புக்களைப் பற்றியும் இந்த இரு ஜாதியாருக்குமிடையே இருந்த உவுகளைப்பற்றியும் எழுதப்பட்டிருந்தது. ஒரு வில்லை ஒரு ராஜா ஆட்சி செய்த ஆண்டை அப்படியே எடுத்துக் காட்டினது. ஏத்தியர்களுடைய நாட்டில் முதன்முதலாக டாரஸ் மலையடிவாரத்திலுள்ள ஜென்ஜிரி என்னுமிடத்தில் 1888 இல் தோண்டினார்கள்.
1906-1907, 1911-1912 ஆண்டுகளில் யூஜோ வினக்லர் என்பவர் பொகாஸ்காயில் தோண்டி ஆராய்ந்தார். அவர் மொத்தம் 10,000 வில்லைகளைக் கண்டு பிடித்தார். நினிவேயில் அஸ்ஸிர் பனியால் என்பவர் ராஜாவின் நூல் நிலையத்தை கண்டு பிடித்ததற்கு பிறகு இதுதான் பெரிய கண்டுபிடிப்பாகும். Boghazkal இல் கண்டுபிடித்த வில்லைகளில் அநேகம் அரசாங்க பத்திரங்களாக இருந்தமையால் அந்த இடம்தான் ஏத்தியர்களின் தலைநகரமாயிருந்தது என்று உறுதிகொண்டார்.
கிமு 1650ம் ஆண்டு முதல் 1200ம் ஆண்டு வரை ஏத்திய சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக பொகாஸ்காய் இருந்தது என்று இப்பொழுது தெரியவந்துள்ளது. இதற்குப் பிறகு இவர்களின் பகைஞராகிய கடல் ஜனங்கள் இவர்களுடைய தலைநகரத்தை தீக்கிரையாக்கினார்கள். அதற்குப்பின் ஏத்தியர்கள் சிறு சிறு ராஜ்யங்களாக பிரிக்கப்பட்டு பின்பு கி.மு 700 ம் ஆண்டில் அசிரியர்களால் தோற்கடிக்கப்பட்டார்கள்.
ஃபிரட்ரிக் ரோஜனி என்ற நிபுணர் ஏத்தியரின் எழுத்துக்களை வாசித்து இஸ்தான்புல் என்ற இடத்திலிருந்த பொருட்காட்சி சாலையில் தன் ஆராய்ச்சியை தொடர்ந்து நடத்தினார். இதன் விளைவாக 246 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை எழுதி 1917 இல் வெளியிட்டார். இந்த புத்தகம் மறைந்து போன ஒரு பாஷையின் விளக்கத்தை முதன்முதலாக இவ்வுலகிற்கு கிடைக்கச் செய்தது.
1947ஆம் ஆண்டில் ஹெல்முத் போசர்ட் என்பவர் அடானா என்ற ஊருக்கு வடகிழக்குப் பகுதியிலிருக்கும் காரடேப் மலைகளில் சில கண்டுபிடிப்புக்களைச் சாதித்தார். அங்கே அவர் ஒரு அரண்மனையும் ஆலயமும் இருந்ததற்கு ஆதாரங்களைக் கண்டுபிடித்தார்.
யாருமறியாத ஒரு ஜாதியார் யாராலும் வாசிக்க முடியாத பாஷையில் எழுதின சரித்திரங்களை இப்பொழுது நிபுணர்கள் வாசித்து அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளுகிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு தேசம் இருந்ததற்கான புத்தக ஆதாரம் வேதாகமம் மட்டுமே. வேறு எந்த சரித்திர புத்தகத்திலும் ஏத்தியரைப் பற்றிய குறிப்புகள் இல்லை.
வேதாகமத்தை பொய் என்றும், ஏத்தியர் என்பவர்கள் கிடையாதென்றும் கூறியவர்களின் வாய்கள் அடைக்கப்பட்டு வேதாகமம் மெய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
நன்றி- உறவாடும் உண்மைகள், போதகர்-தேவராஜு.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|