மூன்று வகையான பாகப்பிரிவினைகள்
Sat May 05, 2018 10:22 am
மூன்று வகையான பாகப்பிரிவினை பத்திரங்கள்.
*****************************************************************************
1. ஒரே குடும்பத்தினர் பாகபிரிவினை பத்திரம்:
**********************************************************************
“ஒரே குடும்ப உறுப்பினர்கள்” என்பது ‘தாத்தா, பாட்டி, (தந்தைவழி தாய்வழி, இரண்டும் தான்), தந்தை, தாய், மகன், வளர்ப்பு மகன், மகள், வளர்ப்பு மகள், பேரன், பேத்தி, சகோதரன், சகோதரி” ஆகிய இந்த உறவுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். (இதைத் தாண்டி, பெரியப்பா, சித்தப்பா, அவர்களின் மகன், மகள், அண்ணி, மைத்துனன் போன்றவர்கள் இரத்த உறவாக இருந்தாலும், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் என்ற இந்த விளக்கத்துக்குள் வரமாட்டார்கள்) என்று பத்திரபதிவு அலுவலகம் சொல்கிறது .
பாகம் பிரித்துக் கொள்ளும் சொத்தானது
1. பூர்வீகச் சொத்தாக இருந்தாலும்,
2. நம் தகப்பனார், தாயார் மூலம் கிடைக்கும் சொத்தாக இருந்தாலும்,
3. பெற்றோர்கள் இறந்த பின், நமக்கு வாரிசு முறைப்படி கிடைக்கும் சொத்தாக இருந்தாலும்
மேற்படி பூர்வீக சொத்தைப் பிரித்துக் கொள்பவர்கள் அனைவரும் “ஒரே குடும்ப உறுப்பினர்களாக” இருக்க வேண்டும்.
ஒரே குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அவரவர் பாகச் சொத்தின் மதிப்புக்கு 1% ஸ்டாம்ப் கட்டணமும், 1% பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்;
அதிலும் சலுகையாக, ஸ்டாம்ப் கட்டணம் மிக அதிகபட்சமாக ரூ.25,000/-ம், பதிவுக் கட்டணம் மிக அதிக பட்சமாக ரூ.4,000/- செலுத்தினால் போதும் என்று, இந்திய முத்திரைச் சட்டத்தில் (தமிழ்நாடு திருத்தல் சட்டத்தில்) சொல்லப்பட்டுள்ளது.
அதாவது சொத்தின் மதிப்பு ரூ..25 லட்சம் வரை 1% ஸ்டாம்பு கட்டணம் என்றும், சொத்தின் மதிப்பை அந்த ரூ..25 லட்சத்தை தாண்டிவிட்டால், அது எவ்வளவு அதிகமான மதிப்பாக இருந்தாலும், அதிக பட்ச ஸ்டாம்ப் கட்டணமாக ரூ.25,000/- செலுத்தினால் போதும். மேலும் இந்த கட்டணத்தை பிரித்துக் கொள்ளும் ஒவ்வொரு பங்கின் மதிப்புக்கும் செலுத்தி இருக்க வேண்டும். இவ்வாறான ஸ்டாம்ப் கட்டணம் அல்லாமல், பதிவுக் கட்டணமாக அதிக பட்சமாக ரூ.4,000/- ஒவ்வொரு பங்குக்கும் செலுத்த வேண்டும்.
2. குடும்ப உறுப்பினர் அல்லாத பாகபிரிவினை பத்திரம்.
********************************************************,***********
குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுக்குள் நடக்கும் பாகப் பிரிவினை. இதில், உறவே இல்லாத இரண்டு நபர்கள் சொத்தை வாங்கி வைத்திருந்தால், அவர்கள் இந்த இரண்டாம் வகைப்படி பாகம் பிரித்துக் கொள்ளலாம்.
குடும்ப உறுப்பினர் அல்லாத வேறு உறவினர்கள் கூட்டாக ஒரு சொத்தை வாங்கி இருந்தாலும், அல்லது வாரிசு முறையில் அடைந்திருந்தாலும் அவர்களும் இதன்படி பாகம் பிரித்துக் கொள்ளலாம்.
இதில், சொத்தை இரண்டாகவோ, அல்லது பல பங்குகளாகவோ பிரித்துக் கொள்வர். இந்தமுறை பாகப்பிரிவினைப்படி, ஸ்டாம்ப் கட்டணம் சற்று வித்தியாசமாக இருக்கும்.
இதில் எது பெரிய பங்காக இருக்கிறதோ அதை விட்டு விட்டு, மற்ற சிறிய பங்குகளின் மொத்த மதிப்பை கணக்கெடுத்து அந்த தொகைக்கு 4% வீதம் (அதாவது பிரிந்த பங்கு சொத்துக்களின் மதிப்பு ரூ. ஒரு லட்சமாக இருந்தால் ஸ்டாம்ப் கட்டணம் ரூ.4,000/- என்றும், மதிப்பு இரண்டு லட்சமாக இருந்தால் ஸ்டாம்ப் கட்டணம் ரூ.8,000/- என்றும் செலுத்த வேண்டும்.)
பின்னர் பதிவுக் கட்டணமாக இதேபோல பிரிந்த பங்குகளின் (பெரிய பங்கு தவிர மற்ற பங்குகள் பிரிந்த பங்குகள் எனப்படும்) மதிப்புக்கு 1% வீதம் பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்.
3.கூர்சீட்டு (வாய்மொழி பாகப்பிரிவினை பத்திரம்)
*******************************************************************************
விவசாய நிலங்களை பாகம் செய்து கொள்ளும் போது, வாய்மொழியாகவே பேசி அவரவர் பங்கு நிலத்தை பாகமாகப் பிரித்துக் கொள்ளலாம். நம் குடும்ப பெரியவர்கள் முன்னிலையிலும் பேசிக் கொள்ளலாம்.
அதை பத்திரத்தில் எழுதிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
அவ்வாறு பங்கு பிரித்த படியே பட்டாவை மாற்றிக் கொண்டால் போதுமானது. பாகப்பிரிவினை என்பது “சொத்து மாறுதல்” என்ற கணக்கில் வராது.
எனவே இந்திய பதிவுச் சட்டப்படி அதை பத்திரமாக எழுதிப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என இந்திய சுப்ரீம் கோர்ட் பல வழக்குகளில் குறிப்பிட்டுள்ளது.
இருந்த போதிலும், நாம் அவரவர் ஞாபகத்துக்காக அதை ஒரு சீட்டில் (பேப்பரில் எழுதி) அதில் சம்மந்தப்பட்டவர்கள் கையெழுத்தையும் பெற்று ஒவ்வொருவரும் ஒரு காப்பியை வைத்துக் கொள்ளலாம்.
இதையே “வாய்மொழி பாகப் பிரிவினை” என்றும் “கூர்சீட்டு” (அதாவது கூர் போட்டுக் கொண்ட கணக்குச் சீட்டு) என்றும் சொல்கிறோம்.
அதை பத்திரப் பதிவு அலுலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால், அந்த கூர்சீட்டில் இன்றைய தேதியில் சொத்துக்களை பிரித்துக் கொண்டதாக எழுதிக் கொள்ளமாட்டோம்.
அதற்குப் பதிலாக, பங்குதாரர்கள் ஏற்கனவே வாய்மொழியாக சொத்தை முன்னரே பிரித்துக் கொண்டதாகவும், அதை இன்று ஒரு ஞாபகச் சீட்டாக எழுதிக் கொண்டோம் என்று தான் அதில் எழுதி இருக்க வேண்டும்.
ஆனால், இன்றே சொத்துக்களை பாகமாகப் பிரித்து எடுத்துக் கொண்டுள்ளோம் என்று எழுதி இருந்தால், அது சொத்தை மீது பரிமாற்றம் நடைபெற்றதாகக் கருதி, அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயாமும் ஏற்பட்டுவிடும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|