தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கிறிஸ்தவம்  - ஒரு வரலாற்றுப் பார்வை Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவம்  - ஒரு வரலாற்றுப் பார்வை Empty கிறிஸ்தவம் - ஒரு வரலாற்றுப் பார்வை

Thu Aug 11, 2016 5:48 pm
கிறிஸ்தவ மதம் உருவானது இயேசு கிறிஸ்து இறந்து, உயிர்த்த நிகழ்வுக்குப் பின்பு தான். ஆனால் கிறிஸ்தவ மதம் உள்ளடக்கிய நம்பிக்கைகள் ஆதி மனிதன் ஆதாமின் காலத்திலிருந்து துவங்குகிறது. உல‌க‌த்தைப் ப‌டைத்த‌ க‌ட‌வுள் அவ‌ற்றை ப‌ண்ப‌டுத்த‌வும், ஆள‌வும் ஆதாம் எனும் ம‌னித‌னைப் ப‌டைக்கிறார். ம‌ண்ணிலிருந்து ஆதாமைப் ப‌டைத்து, அவனிடமிருந்து ஏவாள் எனும் பெண்ணைப் ப‌டைக்கிறார்.

அக்காலத்தில் கடவுள் மனிதர்களோடு நேரடியாக உரையாடி வந்தார். ஆதாமும் ஏவாளும் கடவுளின் தோட்டமான ஏதேன் தோட்டத்தில் சகல வசதிகளோடும் வாழ்ந்து வந்தனர். ஆனால் சாத்தானின் சூழ்ச்சியால் கடவுளின் வார்த்தையை அவர்கள் மீறிவிட்டனர். கடவுளின் அன்பை சந்தேகப்பட்ட அவர்கள் கடவுளின் ஏதேன் தோட்டத்தில் வாழும் பேற்றை இழந்து வெளியேற்றப்பட்டனர்.

உலகில் பாவம் அடியெடுத்து வைத்தது. காலங்கள் கடந்தன. மக்கள் மீண்டும் மனம் திருந்தி தன்னிடம் வரவேண்டும் எனும் கடவுளின் ஏக்கம் தொடர்ந்தது. கடவுள் மனிதனோடு தீர்க்கத்தரிசிகள் வழியாக பேசி அவர்கள் வாழவேண்டிய வழிமுறைகளைக் கட்டளைகளாகக் கொடுத்தார்.  இந்தக் கட்டளைகள் மூலமாக அவர்கள் ஆண்டவரிடத்தில் ஒன்றித்திருக்கவும் நல் வழியில் நடக்கவும் பணித்தார்.

ம‌க்க‌ள் கூட்ட‌த்திலிருந்து ஆபிர‌காமை த‌னியே அழைத்தார். அவ‌ர் மூல‌மாக‌ ஒரு தூய‌ ம‌க்க‌ள் கூட்ட‌த்தை உருவாக்க‌ விழைந்தார். ஆபிர‌காம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு எனும் வ‌ழியில் அந்த‌ வ‌ம்சாவ‌ளி வ‌ள‌ர்ந்த‌து. அந்த‌ வ‌ழியில் தான் இஸ்ர‌வேல் குல‌ம் உருவான‌து.
பல தீர்க்கதரிசிகளும், நீதித் தலைவர்களும் இஸ்ரேல் மக்களை நல் வழியில் நடத்தினார்கள்.  காலம் செல்லச் செல்ல கடவுளின் வார்த்தைகள் இஸ்ரேல் மக்களை திருப்திப்படுத்தவில்லை. தீர்க்கத் தரிசிகள் போதாது. பிற இன மக்களைப் போல தங்களையும் ஆள அரசர்கள் இருந்தால் நலமாக இருக்கும் என்று அவர்கள் எண்ணினர்.

கடவுள் அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்க அவர்களை ஆள அரசர்களை ஏற்படுத்தினார். இறைவன் இஸ்ரேல் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டிருந்ததால் இஸ்ரேல் மன்னரோடும், மக்களோடும் தீர்க்கதரிசிகள் மூலமாக தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தார்.

இஸ்ரேல் என்பது பன்னிரண்டு குலங்கள் மக்கள் சேர்ந்த ஒரு அரசாகும்.  அனைவரையும் ஒரே அரசர் அரசாண்டு வந்தார்.  உலகின் மிகப் பெரிய ஞானியான சாலமோன் மன்னனும் இஸ்ரேல் மக்களை ஆண்ட அரசர்களில் ஒருவர்.  சாலமோன் மன்னனுக்குப் பின் அவருடைய மகன் ரெகோபெயாம் ஆட்சிக்கு வந்தார். அவருடைய ஆட்சி காலத்தில் பெரும் புரட்சி உருவாகி இஸ்ரேல் அரசு இரு பிரிவாகியது.  பத்து குலங்கள் இணைந்து இஸ்ரேல் அரசாகவும் மீதி இரண்டு குலங்கள் இணைந்து யூதா அரசாகவும் மாறியது.

யெரோபெயாமின் ஆட்சி இஸ்ரேல் அரசின் வீழ்ச்சிக்கு அடித்தளமாக விளங்கியது. இறைவனிடம் பல உறுதிமொழிகளையும், ஆசீர்வாதங்களையும் பெற்றிருந்தபோதிலும் யெரோபெயாம் கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் வேற்று தேவர்களை தொழ ஆரம்பித்தார்.  இதனால் இஸ்ரேல் அரசு மற்ற ராஜாக்களின் தாக்குதலுக்கு ஆளானது.

150 ஆண்டுகளுக்குள் இஸ்ரேல் சாம்ராஜ்யம் முழுவதும் வேற்று அரசர்களின் கீழ் அடிமையாகி விட்டது.  இது நடந்த காலகட்டம் சுமார் கி.மு. 700-ம் ஆண்டாகும்.  சுமார் கி.மு. 705 ண்டில் யூத ராஜ்யம் சரிய ஆரம்பித்தது.

சுமார் கி.மு. 586 கால கட்டத்தில் பாபிலோன் மன்னன் செதேக்கியா என்னும் யூத அரசனை சிறை பிடித்து அவருடைய மகன்கள் இருவரையும் கொலை செய்தான்.  அப்படி யூதா முழுவதும் சிறைபிடிக்கப்பட்டது. பெரும் சிறப்புப் பெற்ற ஜெருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டது. அதில் இருந்த பொன்னும் பொருளும் கொள்ளையடிக்கப்பட்டன. யூதர்களின் கலாச்சாரம் சிதறடிக்கப்பட்டது.  அது முதல் யூதா வேற்று அரசர்களின் ஆளுகைக்குள் வந்தது.

இஸ்ரேல் மக்கள் மற்ற அரசர்களிடம் அனுமதி கோரி செருபாபேல், எஸ்றா மற்றும் நெகேமியா என்னும் தலைவர்களின் கீழ் ஜெருசலேம் தேவாலயத்தை சீரமைக்கும் பணியை ஆரம்பித்தனர்.  இந்தத் தலைவர்கள் யூத மக்கள் கடவுளை நம்பி, அவரிடம் திரும்ப வேண்டும் என வலியுறுத்தினர். சுமார் கி.மு. 400-வது ண்டில் இது நடந்தது.

அதற்குப் பின்பு அவர்களுக்கு கடவுளால் எந்தத் தீர்க்கதரிசியும் அளிக்கப்படவில்லை.  அந்த கால கட்டத்தில் இஸ்ரேல் பெர்சியா மற்றும் எகிப்திய அரசாட்சியின் கீழ் இருந்தது.  மக்கள் மனம் போன போக்கில் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டனர்.

வேற்று அரசர்களின் அரசாட்சி, முக்கியமாக கிரேக்கர்களுடைய வழிபாட்டு முறைகள் இஸ்ரேல் மக்களை மிகவும் பாதித்தன.  நாட்கள் செல்லச் செல்ல யூத முறைகளைப் பின்பற்றுவது மிகப் பெரிய குற்றமாகக் கருதப்பட்டது.  இது யூதர்களைக் கோபமுறச் செய்தது.  அவர்கள் கிரேக்கர்களுக்கு விரோதமாக கலகம் செய்ய ஆரம்பித்தனர்

கலகத்திற்குப் பின் சிறிது காலம் யூதர்கள் கடவுளை மீண்டும் வழிபடத் துவங்கினர். ஆனால் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை.  பின்னர் வந்த ரோமர்களின் ஆட்சி அவர்கள் வாழ்க்கை மற்றும் வழிபாட்டு முறைகளை துவம்சம் செய்தது.  அந்த ஆட்சியும், காலகட்டமும் தான் உலகத்தின் மிகப் பெரிய நிகழ்வுகளுக்குப் பக்க பலமாக இருந்தது.  அது தான் வரலாறுகளைத் திருத்தி அமைத்த இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் காலம்.

அந்த கால கட்டத்தில் மக்களிடையே பல பிரிவுகள் இருந்தன.  பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர்கள் போன்றவர்கள் அவற்றில் சிலர்.  சதுசேயர்கள் அரசியல்வாதிகள்.  அவர்களுடைய முக்கியமான எண்ணம் தங்களுடைய பதவியையும், செல்வங்களையும் பாதுகாத்துக் கொள்வது தான்.
சதுசேயர் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லாதவர்கள். ஒரே வாழ்க்கை ஒரே மரணம், அத்துடன் எல்லாம் முடிந்து விட்டது என நம்புபவர்கள் அவர்கள்.  பரிசேயர்கள் அந்நிய ஆட்சியை எதிர்த்தவர்கள். மனிதநேயத்தை விட சட்டத்தையே மிக அதிகமாய் பின்பற்றியவர்கள். தங்களுடைய ஆதாயத்துக்காக சட்டத்தை பயன்படுத்தும் யுத்தி தெரிந்தவர்கள். அவர்கள் தங்களுடைய கலாச்சாரத்திலும், முன்னோர்கள் தங்களுக்குக் கொடுத்த சட்ட திட்டங்களிலும் உறுதியாய் இருந்த‌வ‌ர்க‌ள்.

இயேசு கிறிஸ்து அவர்களுடைய கண்மூடித்தனமான கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டவராக இருந்தபடியால் அவர்கள் இயேசுவை எதிர்த்தனர். தங்களுடைய சட்டங்களை விட இயேசு மனிதநேயத்தில் அதிகம் பற்று வைத்திருந்ததை அவர்கள் வெறுத்தார்கள். தங்களுடைய பொருளீட்டும் வழிகளில் இயேசு குறுக்கே நிற்பதால் அவர்கள் எரிச்சலடைந்தார்கள். ஒதுக்கப்பட்ட மக்களை, உயர்ந்த நிலையில் இயேசு உயர்த்தியதை அவர்கள் விரும்பவில்லை.

யூத மதம் மறக்கப்பட்டு வெவ்வேறு அரசாட்சியினால் சிதறடிக்கபபட்டது.  ரோம அரசாங்கம் யூதாவை தொல்லை தரக்கூடிய ஒரு நாடாகக் கருதியது.  யூதர்கள் தீர்க்கதரிசிகள் உரைத்தபடி மேசியாவின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தினர்.  வெளிநாட்டு அரசர்களால் ஒடுக்கப்பட்டிருக்கும் தங்களை மேசியா என்னும் மீட்பர் வந்து அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பார் என்று எதிர் பார்த்தனர். அதைத் தான் அதுவ‌ரை வாழ்ந்திருந்த‌ ப‌ல்வேறு தீர்க்க‌த் த‌ரிசிக‌ள் உரைத்திருந்த‌ன‌ர். அந்த‌ தீர்க்க‌த்த‌ரிச‌ன‌த்தின் விடையாக‌ வ‌ந்தார் இயேசு.

ஆனால் அவருடைய வருகையையே யாரும் அறியவில்லை. தாழ்மையின் வடிவமாக கன்னி மரியின் மடியில் மாட்டுத் தொழுவமொன்றில் பிறந்தார். அரசரை எதிர்பார்த்திருந்த யூதர்களால் தொழுவத்தில் வந்தவர் தான் மேசியா என்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஏழைகள் கடவுளால் வெறுக்கப்பட்டவர்கள் என்பதே அவர்களுடைய கோட்பாடாய் இருந்தது.

அவர்களில் சில யூதர்கள் விதி விலக்காக இருந்தனர்.  இயேசு பிறந்தபொழுது சிமியோன் மற்றும் அன்னாள் என்னும் தீர்க்கதரிசிகள் அவரைக் கண்டு மிகுந்த ஆனந்தமடைந்து அவர் தான் இஸ்ரேலரை விடுவிக்கும் மேசியா என்று வெளிப்படையாக தீர்க்கத்தரிசனம் உரைத்தனர்.
குழப்பமான அரசியல் சூழ்நிலையில், மனிதனை பாவத்திலிருந்து மீட்கவும், பாவமற்ற வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதைப் போதிக்கவும் இயேசு உலகத்தில் வந்தார்.  எதிர்ப்புகளின் மத்தியிலும்,  பெரும்பான்மையான யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையிலும், தான் வந்த காரியத்தை பொறுமையாக, அன்பாக தொடர்ந்து செய்தார்.

அரசியல் சூழ்நிலைகளைப் பார்க்கும் பொழுது அக்காலத்தில் அவரைப் பின்பற்றியவர்கள் மிகுந்த தைரியத்தோடு தங்கள் மேலதிகாரிகளையும், அரசு அதிகாரிகளையும் எதிர்த்து இயேசுவைப் பின்பற்றியிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.  இயேசு அவர்களுடைய தீய வாழ்க்கையைத் துவைத்து அழுக்ககற்றி அவர்களை தீவிர நம்பிக்கையுள்ளவர்களாக மாற்றினார். தான் மரித்து, உயிர்த்து, விண்ணகம் சென்றபின் தன்னுடைய பணியை மண்ணில்  தொடர்வதற்காக அவர்களை ஆயத்தப்படுத்தினார்.

இயேசுவின் போதனைகள் மக்களிடையே பெரும் கலகத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தின. எத்தனையோ அற்புதங்களை அவர்கள் மத்தியில் செய்த போதும் யூத மக்களின் விருப்பத்துக்கிணங்க ரோம அரசாங்கம் அவரைச் சிலுவையில் அறைந்தது.  இயேசுவின் ப‌ணிவாழ்வு வெறும் மூன்ற‌ரை ஆண்டுக‌ளோடு முடிந்து போன‌து. வெறும் பன்னிரண்டு சீடர்களே அவரோடு முழுமையாய் இணைந்திருந்தார்கள். தனது வாழ்நாளில் இருநூறு மைல் தொலைவைத் தாண்டி அவர் பயணித்ததில்லை ! ஆனால் அதுவே க‌ட‌வுளின் திருவுள‌மாய் இருந்த‌து.

தான் முன்ன‌றிவித்திருந்த‌ப‌டியே மூன்றாம் நாள் அவ‌ர் உயிர்த்தெழுந்தார். உயிர்த்த‌ இயேசு சுமார் ஐநூறுக்கும் மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்குக் காட்சி கொடுத்தார். பின்ன‌ர் விண்ண‌க‌ம் சென்று தூய‌ ஆவிய‌ன‌வ‌ரை ம‌னித‌ர்க‌ளின் இத‌ய‌ங்க‌ளில் வாழுமாறு அனுப்பினார். அதுவ‌ரை ப‌ய‌ந்து ந‌டுங்கிக் கொண்டிருந்த‌ சீட‌ர்க‌ள், தூய‌ ஆவியான‌வ‌ர் வ‌ந்த‌பின் தைரிய‌சாலிக‌ளானார்க‌ள்.

அரசுக்குப் பயந்து அறைகளில் அடைபட்டுக் கிடந்தவர்கள் வீதிக்கு வந்தார்கள். இயேசுவே கடவுளின் மகன் என பறைசாற்றத் துவங்கினார்கள். தான் மரணமடையும் முன்பே திருச்சபையைக் கட்டியெழுப்புவேன் என இயேசு கூறியிருந்தார். அந்த பணி அங்கே ஆரம்பமானது.

கிறிஸ்தவத்தின் முதல் விதை அது தான். இயேசு இறந்து உயிர்த்த நாற்பது நாட்களுக்குப் பின் அது விதைக்கப்பட்டது. இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் தற்கொலை செய்து இறந்து போனார், அதைத் தவிர மற்ற அனைவரும் கிறிஸ்தவத்தின் ஆரம்பகால நற்செய்தி அறிவிப்பாளர்களாக மாறிப் போனார்கள்.

அவர்கள் அனைவருமே மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கும், கொடிய மரணங்களுக்கும் சாட்சியானார்கள். யோவானைத் தவிர அனைவருமே படுகொலை செய்யப்பட்டு தான் இறந்து போனார்கள்.

ஏரோது ம‌ன்ன‌னின் அவையில் வைத்து த‌லை கொய்ய‌ப்ப‌ட்டு ப‌லியானார் யாக்கோபு. நீரோ ம‌ன்ன‌னின் கால‌த்தில் கைது செய்ய‌ப்ப‌ட்டார் பேதுரு. கிறிஸ்த‌வ‌ர்க‌ளைக் கொன்று குவிப்ப‌தை த‌ன‌து பொழுதுபோக்காக‌க் கொண்டிருந்த‌ நீரோ ம‌ன்ன‌ன் பேதுருவையும் கைது செய்தான்.
“பேதுருவை அவ‌னுடைய‌ த‌லைவ‌ர் இயேசு போல‌ சிலுவையிலேயே அறைந்து கொல்லுங்க‌ள்” என‌ ஆணை வ‌ந்த‌து. பேதுரு ப‌த‌றினார். “வேண்டாம் …வேண்டாம்.. ஒரே ஒரு விண்ண‌ப்ப‌ம், க‌ருணை காட்டுங்க‌ள்” என‌ கெஞ்சினார்.

சுற்றி நின்ற‌வ‌ர்க‌ள் ஏள‌ன‌மாய்ச் சிரித்தார்க‌ள். “இப்பாவாச்சும் உயிர் ப‌ய‌ம் வ‌ருகிற‌தா ? ” என்றார்க‌ள். பேதுருவோ,
‘இயேசுவும் சிலுவையில் அறையப்பட்டு தான் இறந்தார். நானும் அப்படியே இறக்க தகுதியற்றவன். எனவே என்னை தலைகீழாகச் சிலுவையில் அறையுங்கள்’ என்றார். கூடியிருந்தவர்கள் அதிர்ந்தார்கள். பேதுருவின் அர்ப்பணிப்பை எண்ணி மலைத்துப் போனார்கள்
கிறிஸ்த‌வ‌ர்க‌ளை கொன்று குவித்துக் கொண்டிருந்த‌ ச‌வுல் என்ப‌வ‌ருக்கு இயேசு த‌ரிச‌ன‌மானார். ச‌வுல் எந்த‌ அள‌வுக்கு கிறிஸ்த‌வ‌த்துக்கு எதிரியாய் இருந்தாரோ, அந்த‌ அள‌வுக்கு கிறிஸ்த‌வ‌த்துக்கு ஆத‌ர‌வாய் மாறினார். பைபிளின் நூல்க‌ள் ப‌ல‌ அவ‌ரால் தான் எழுத‌ப்ப‌ட்ட‌ன‌.
ஆதித் திருச்ச‌பையின் முக்கிய‌மான‌ ந‌ப‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ ஸ்தேவான் க‌ல்லெறிந்து கொல்ல‌ப்ப‌ட்டார். இயேசு இற‌ந்த‌ மூன்று ஆண்டுக‌ளுக்குப் பின் இந்த‌ ம‌ர‌ண‌ம் நிக‌ழ்ந்த‌து.

இயேசுவின் சீட‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ அந்திரேயா தீவிர‌மான‌ பிர‌ச்சார‌த்தில் ஈடுப‌ட்டார். இன்றைய ரஷ்யாவில் அவருடைய நற்செய்தி அறிவித்தல் நடந்தது. அவ‌ரை எக்ஸ் (  ) வ‌டிவ‌ சிலுவையில் அறைந்து கொன்றார்க‌ள். அதிக‌ வ‌லியை அதிக‌ நேர‌ம் கொடுக்க‌வேண்டும் என்ப‌த‌ற்காக‌ இப்ப‌டிச் செய்தார்கள். கிபி 69ல் இவர் கொல்லப்பட்டார்.

இன்னொரு சீட‌ர் பிலிப்பு ர‌ஷ்யாவிலுள்ள‌ சைத்தியாவில் ப‌ணி செய்தார். நீண்ட‌ நெடிய‌ இருப‌து ஆண்டுக‌ள் போதித்த‌பின் துருக்கி சென்று போத‌னையைத் தொட‌ர்ந்தார். அவ‌ரை சிலுவையில் க‌ட்டி வைத்துக் க‌ல்லால் எறிந்து கொன்றார்க‌ள். இவர் இறந்தபோது வயது 87.
ம‌த்தேயு இருப‌த்து மூன்று ஆண்டுக‌ள் எகிப்திலும், எத்தியோப்பியாவிலும் ப‌ணிபுரிந்தார். கி.பி 90 ஆம் ஆண்டு, ஆட்சி செய்து கொண்டிருந்த தொமீதியன் மத்தேயுவின் பணிகளைப் பார்த்து எரிச்சலடைந்தான். மத்தேயுவை இனிமேலும் வளரவிடக்கூடாது என்று முடிவெடுத்து மரண தண்டனை விதித்தான். அவரை நிற்க வைத்து படைவீரர்களை வைத்து ஈட்டியால் குத்தச் செய்தான் மன்னன். மத்தேயு உடலை ஈட்டிகள் துளைத்தன. இரத்த வெள்ளத்தில் மிதந்த மத்தேயு இயேசுவின் பெயரை உச்சரித்துக் கொண்டே இறந்தார்.

நாத்தான் வேல் எனும் சீட‌ரின் ப‌ணி பெரும்பாலும் ஆர்மேனியா, எராப்போலி போன்ற‌ இட‌ங்க‌ளில் ந‌ட‌ந்த‌து. இந்தியாவின் வ‌ட‌மேற்குப் ப‌குதி வ‌ரை இவ‌ர் வ‌ந்த‌தாய் சொல்ல‌ப்ப‌டுகிற‌து. ஆனாலும் அத‌ற்கான‌ ஆதார‌ங்க‌ள் இல்லை. ஆர்மேனியாவில் வைத்து ப‌ல‌ அற்புத‌ங்க‌ளைச் செய்த‌தால் இவ‌ர் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்டார். உயிரோடு இவ‌ருடைய‌ தோலை உரித்து, பின்ன‌ர் சிலுவையில் அறைந்து கொடூர‌மாக‌க் கொலை செய்த‌ன‌ர். இவ‌ர் கிபி. 68ல் இற‌ந்தார்.

அல்பேயுவின் ம‌க‌ன் யாக்கோபு க‌ல்லால் எறிந்து கொல்லப்ப‌ட்டார். யூதா த‌தேயு கிபி 63 வ‌ரை அர்மேனியாவில் ந‌ற்செய்தி அறிவித்து, அந்த‌ நாட்டைக் கிறிஸ்த‌வ‌ நாடாக்கினார். அத‌னால் ஈட்டியால் குத்திக் கொல்ல‌ப்ப‌ட்டார். சீமோன் பார‌சீக‌த்தில் ர‌ம்ப‌த்தால் அறுக்க‌ப்ப‌ட்டு கொல்ல‌ப்ப‌ட்டார். செப‌தேயுவின் ம‌க‌ன் யாக்கோபு சிர‌ச்சேத‌ம் செய்ய‌ப்ப‌ட்டார். இந்தியா வ‌ந்த‌ தோமா கிபி 72ல் ஈட்டியால் குத்திக் கொல்ல‌ப்ப‌ட்டார். இயேசுவின் ச‌கோத‌ர‌ரான‌ யாக்கோபு உருளைக் க‌ட்டையால் த‌லையில் அடித்து கொல்ல‌ப்ப‌ட்டார்.

இப்ப‌டி இயேசுவின் கூட‌ ந‌ட‌ந்த‌ சீட‌ர்க‌ள் அனைவ‌ருமே கொடுமையான‌ சாவுக்கு ஆளானார்க‌ள். ஒரே ஒருவ‌ர் ம‌ட்டும் இய‌ற்கை ம‌ர‌ண‌ம் எய்தினார். அவ‌ர் தான் யோவான். த‌ன‌து நூறாவ‌து வ‌ய‌தில் அவ‌ர் ம‌ர‌ண‌ம‌டைந்தார்.

இயேசு உயிர்த்தெழுந்த‌ கால‌ம் சுமார் கிபி 33 என்று வைத்துக் கொண்டால், அது முதல் சுமார் 50 , 60 ஆண்டுக‌ள் சீட‌ர்க‌ள் செய்த‌ தீவிர‌மான‌ ப‌ணி தான் கிறிஸ்த‌வ‌ ம‌த‌த்தின் அஸ்திவார‌மான‌து. இதுவே கிறிஸ்த‌வ‌த்தின் முத‌ல் க‌ட்ட‌ வ‌ள‌ர்ச்சி. இந்தக் காலகட்டத்திலேயே நற்செய்தி உலகின் பல பாகங்களுக்கும் சென்று சேர்ந்தது என்பதே வியப்பான விஷயம். தங்கள் உயிரை துச்சமாக மதித்து சீடர்கள் பணியாற்றியது கிறிஸ்தவ நம்பிக்கையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை வரவைத்தது.

முத‌லாம் ஆண்டு கிறிஸ்த‌வ‌த்துக்கு ரோம‌ அர‌சிட‌மிருந்து மிக‌ப்பெரிய‌ எதிர்ப்புக‌ள் எழுந்த‌ன‌. ரோம் அரச மன்னர்கள் ஜூலியஸ் சீசருக்குப் பின் ‘சீசர்’ என்றே அழைக்கப்பட்டனர். இயேசு பிறந்தபோது ஆட்சியில் இருந்த அகஸ்துஸ் சீசர் ஜூலியஸ் சீசருக்குப் பின் அரியணை ஏறிய மன்னன். கி.மு 27 முதல் கி.பி 14வரை அவர் ஆட்சி புரிந்தார். திபேரியு சீசர் அதன் பின்னர் அரியணை ஏறினார். அவர் கி.பி இருபத்து ஏழு வரை ஆட்சி செய்தார். தொட‌ர்ந்து வ‌ந்தவர்கள் கிளாடியுஸ், நீரோ என்பவர்கள். நீரோ ம‌ன்ன‌ன் கிறிஸ்த‌வ‌ர்க‌ளை வேரோடு அழிக்க‌ க‌ங்க‌ண‌ம் க‌ட்டிக் க‌ள‌த்தில் ப‌ணியாற்றிய‌வ‌ன்.

முத‌லில் வாய்வ‌ழியாக‌ச் சொல்ல‌ப்ப‌ட்ட‌ இயேசுவின் வ‌ர‌லாறு பின்ன‌ர் எழுத்து வ‌டிவ‌ம் பெற்ற‌து. குறைந்த‌ ப‌ட்ச‌ம் சுமார் 10, 12 ஆண்டுக‌ள் இயேசுவின் வ‌ர‌லாறு வாய்வ‌ழியாக‌வே சொல்ல‌ப்ப‌ட்ட‌து. இயேசுவின் வரலாறு பைபிளில் மத்தேயும், மார்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நூல்களில் வருகிறது.

இவற்றில், மாற்கு நூலே முதலில் எழுதப்பட்ட நூல். கி.பி 44ல் எழுதப்பட்டது. மத்தேயு நற்செய்தி கி.பி ஐம்பதிலும், லூக்கா நற்செய்தி கி.பி அறுபதிலும், யோவான் நற்செய்தி கி.பி நூறிலும் எழுதப்பட்டன. யோவான் கி.பி நூறு வரை உயிர் வாழ்ந்தவர். தன்னுடைய வாழ்வின் கடைசி கட்டத்தில் யோவான் நற்செய்தி நூலை எழுதினார். அதுவே கால‌த்தால் பிந்தைய‌ நூல்.

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், கிமு. 750 ல் எழுதப்பட்ட ஆமோஸ் இறைவாக்கினரின் நூலே விவிலியத்திலேயே முதலில் எழுதப்பட்ட நூல். மற்ற நூல்கள் எல்லாம் அதன் பின்னரே எழுதப்பட்டன. காலம் காலமாக வாய்வழிக் கதைகளாகவும், பரம்பரையினரின் சிறு சிறு குறிப்புகளாகவும், படங்களாகவும் இருந்த பழைய ஏற்பாட்டுக் கதைகள், பாடல்கள் எல்லாம் பிற்காலத்தில் தான் எழுத்து வடிவம் பெற்றன. சாலமோன் மன்னனின் காலத்திற்குப் பிறகு தான் எழுத்து வடிவம் பரவ ஆரம்பித்தது. அதன் படி பார்க்கையில் கி.மு 1300 ம் ஆண்டு முதல், கி.பி 100ம் ஆண்டு வரை உருவான படைப்புகள் பைபிளில் இடம்பெற்றுள்ளன எனலாம்.

பிளினி என்னும் வரலாற்று ஆசிரியர் ‘டிரஜன்’ என்னும் அரசனுக்கு சுமார் கி.பி 112 ம் ஆண்டில் எழுதிய கடிதம் ஒன்றில் “ஆசியா மைனரிலுள்ள அனைத்து நகரங்களிலும் சிலை வழிபாடுகள் கைவிடப்பட்டு மக்கள் கிறிஸ்த மதத்துக்குப் பெருமளவில் சென்று கொண்டிருக்கிறார்கள். இங்கே உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் வேற்றுமை பாராட்டப் படுவதில்லை. பல இடங்களில் தாழ்ந்தவர்களாய்க் கருதப்படுவோர் தலைவர்களாக இருக்க உயர் குலத்தோர் அங்கத்தினர்களாக உள்ளனர்’ என்னும் பொருள் பட குறிப்பிட்டுள்ளது முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது.

இர‌ண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்த‌வ‌ம் தொட‌ர்ந்து துன்ப‌ங்க‌ளை அனுப‌வித்த‌து. டிரேஜான், ஆதிரையான், மார்கஸ் அரேலியஸ் போன்ற மன்னர்கள் கிறிஸ்த‌வ‌ர்க‌ளை ஒடுக்கினார்க‌ள். ஆதிரையான் மன்னன் கி.பி 117 முதல் 138 வரை ஆட்சி புரிந்தார். இவர் கிறிஸ்தவர்களை தேவையற்ற முறையில் துன்பப்படுத்தவில்லை சொல்ல‌ப்போனால் கிறிஸ்த‌வ‌ர்க‌ள் இவ‌ருடைய‌ கால‌த்தில் குறைந்த‌ ப‌ட்ச‌ பாதிப்புக‌ளையே ச‌ந்தித்த‌ன‌ர். ஆனாலும் அவர்கள் பாதுகாப்பின்றி மறைவான வாழ்க்கையே வாழ்ந்தனர்.

அத‌ன் பின்னர் கிபி 161 முதல் 180  மார்க‌ஸ் அரேலிய‌ஸ் ஆட்சி கால‌த்தில் மீண்டும் கிறிஸ்த‌வ‌ர்க‌ள் துன்ப‌த்துக்கு ஆளானார்க‌ள்.
மூன்றாம் நூற்றாண்டிலும் கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு எதிரான‌ வ‌ன்முறைக‌ள் தொட‌ர்ந்த‌ன‌. செப்டிமஸ் செவேரஸ் என்பவர் மூன்றாம் நூற்றாண்டின் முதல் மன்னன். கி.பி 211 வரை இவருடைய ஆட்சி இருந்தது. துவ‌க்க‌த்தில் அமைதியாக‌வும், போக‌ப் போக‌ வ‌ன்முறையாக‌வும் இவ‌ருடைய‌ ஆட்சி ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. கி.பி249 முதல் 251 வரை ஆட்சி செய்த‌ தேசியு ம‌ன்ன‌ன், கிறிஸ்த‌வ‌ம் அர‌சுக்கு எதிரான‌து என‌ செய்தி ப‌ர‌ப்பி கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு ச‌ட்ட‌ ரீதியிலான‌ நெருக்க‌டியைக் கொடுத்தார்.

அத‌ன்பின் வ‌ந்த‌ வெலேரியன் ம‌ன்ன‌ன், அலீரிய‌ன் ம‌ன்ன‌ன் போன்ற‌வ‌ர்க‌ளும் கிறிஸ்த‌வ‌ வெறுப்பாள‌ர்க‌ளாக‌வே இருந்தார்க‌ள். கிறிஸ்த‌வ‌ ஆல‌ய‌ங்க‌ள் இடிக்க‌ப்ப‌ட‌ வேண்டும், கிறிஸ்த‌வ‌ நூல்க‌ள் எரிக்க‌ப்ப‌ட‌ வேண்டும், கிறிஸ்த‌வ‌க் குருக்க‌ள் கொல்ல‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ ப‌ல‌ ச‌ட்ட‌ங்க‌ள் இந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் கிறிஸ்த‌வ‌ர்க‌ளை நெருக்கின‌.  ஆனாலும் ஒட்டுமொத்த‌மாக‌ப் பார்த்தால் கிறிஸ்த‌வ‌ம் இர‌ண்டாம் நூற்றாண்டை விட‌ மூன்றாம் நூற்றாண்டில் ப‌ர‌வ‌லான‌ க‌வ‌னிப்பையும் அங்கீகார‌த்தையும் பெற்றிருந்த‌து.

நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்த‌வ‌ம் த‌ன‌க்குள்ளேயே ப‌ல‌ க‌ருத்து வேறுபாடுக‌ளை கொண்டிருந்த‌து. கிறிஸ்துவ‌த்தின் அடிப்ப‌டைப் போத‌னைக‌ளுக்கு எதிராக‌ குழுக்க‌ள் தோன்றின‌. இந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் தான் கான்ஸ்ட‌ன்டைன் ம‌ன்ன‌ன் நிசியாவில் ஒரு ஆலோச‌னைக் கூட்ட‌த்தை ந‌ட‌த்தினார். இவர்தான் உலகின் முதல் கிறிஸ்தவ மன்னன்.

உலகின் பல இடங்களிலிருந்தும் வந்திருந்த முன்னூறு பேராயர்கள் பல முக்கிய முடிவுகளை இங்கே எடுத்தனர். இந்தியாவிலிருந்தும் ஒரு பேராயர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இயேசுவின் கடவுள் தன்மையை உறுதி செய்து அதற்குரிய விசுவாச பிரமாணங்கள் தயாராக்கப்பட்டன. இது கிறிஸ்த‌வ‌ வ‌ர‌லாற்றின் முக்கிய‌மான‌ ஒரு நிக‌ழ்வு.

நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்த‌வ‌ம் அர‌சாங்க‌த்தோடு இணைந்து செய‌ல்ப‌டும் சூழ‌ல் உருவான‌து. உல‌கெங்கும் கிறிஸ்த‌வ‌ ம‌த‌ம் த‌ன‌து கிளைக‌ளை விரித்திருந்த‌து. ப‌ல்வேறு ச‌ட‌ங்கு ச‌ம்பிர‌தாய‌ங்க‌ள் இந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் உருவாயின‌. புனித‌ர் வ‌ண‌க்க‌ம், புனித‌ர் மூல‌மாய் செபித்த‌ல் போன்ற‌ வ‌ழ‌க்க‌ம் இந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் தான் வ‌லுவ‌டைந்த‌து.

கான்ஸ்டைன் ம‌ன்ன‌ன் கான்ஸ்டான்டிநோபிள் எனும் அழ‌கிய‌ ந‌க‌ரை நிர்மாணித்து ஒரு மாபெரும் தேவால‌ய‌த்தையும் க‌ட்டினான். 1453ல் துருக்கிய‌ர் அந்த‌ நாட்டில் ப‌டையெடுத்து அந்த‌ ஆல‌ய‌த்தை ம‌சூதியாக‌ மாற்றினார்க‌ள். அந்த‌ நாடு தான் இன்றைய‌ இஸ்தான்புல் !
கி.பி 486ல் மேற்கு ரோம் சிதறுண்டது. சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் இருந்த ஒரு மிகப் பெரும் பேரரசு தன்னுடைய வலிமை இழந்து கவிழ்ந்தது. கிறிஸ்தவத்தின் துவக்கம் முதல் ஐந்தாம் நூற்றாண்டின் துவக்கம் வரையுள்ள காலம் கிறிஸ்தவத்தின் முதல் காலம் என அழைக்கப்படுகிறது.

கி.பி ஐந்தாம் நூற்றாண்டு முதல் ஆயிரத்து ஐநூறு வரையிலான காலம் இடைகாலம் என அழைக்கப்படுகிறது. முதலாம் கிரிகோரி போப் ஆக பதவியேற்ற கிபி 590 களிலிருந்து இந்தக் காலம் துவங்குகிறது. இந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் ப‌ல்வேறு அறிவு நெறிக் கோட்பாடுக‌ள், கொள்கைக‌ள், புதுப் புது சிந்த‌னைக‌ள் வ‌ள‌ர்ந்த‌ன‌. துற‌வ‌ற‌ம் கிறிஸ்த‌வ‌த்தை ஆக்கிர‌மித்த‌து இந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் தான்.
கி.பி 1073 முதல் 1216 வரையுள்ள காலகட்டம் போப்பின் அதிகாரத்தின் உச்சகட்டம் என்று வர்ணிக்கப்படுகிறது. ஏழாம் கிரிகோரி எனும் போப் வந்து ஏராளமான மாறுதல்களைத் திருச்சபையில் செய்தார்.

உலக அளவில் கிறிஸ்தவம் எல்லா இடங்களிலும் நுழைந்தாலும் வளர்ந்தாலும் பொதுவான தலைமை ரோமிலேயே இருந்தது. தனியே கொள்கை ரீதியினான தனித்தனி கிறிஸ்தவ இயக்கங்கள் சில இயங்கிய போதும் மொத்தத்தில் ரோம் போப்பின் கீழே கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து காணப்பட்டனர்.

இஸ்லாமின் தோற்ற‌மும் வ‌ள‌ர்ச்சியும் சிலுவைப் போர்க‌ளுக்கு வித்திட்ட‌து. பாலஸ்தீனத்தை இஸ்லாமியர்களின் கைகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்னும் உந்துதலில் ஏற்பட்டவை தான் இந்த‌ சிலுவைப் போர்கள்.  1095ம் ஆண்டு முதல் 1272ம் ஆண்டு வரை ஏழு முக்கிய‌ சிலுவைப்போர்கள் நிகழ்ந்தன. எல்லாமே தோல்வியில் முடிந்த‌ன‌. அன்பின் அஸ்திவார‌த்தில் க‌ட்டியெழுப்ப‌ப்ப‌ட்ட‌ கிறிஸ்த‌வ‌ம் வ‌ன்முறையில் நுழைந்த‌ வ‌ர‌லாறு அது. கிறிஸ்தவ‌ர்க‌ளுக்கும், இஸ்லாமிய‌ர்க‌ளுக்குமிடையே வெறுப்பு வ‌ள‌ர‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் முன்னெடுத்துச் சென்ற‌ சிலுவைப் போர்க‌ள் முக்கிய‌மான‌ கார‌ண‌ம்.

கிறிஸ்த‌வ‌த்திற்குள்ளே ப‌ல‌ பிரிவுக‌ள் கோட்பாடுக‌ள் தோன்றினாலும், புராட்ட‌ஸ்ட‌ன்ட் பிரிவே மிக‌ப்பெரிய‌ பிரிவாகும். கி.பி 1483ம் ஆண்டு பிறந்த மார்ட்டின் லூத்தர் என்பவரே புராட்டஸ்டண்ட் சபையின் துவக்கத்துக்கு வித்திட்டவர். இவ‌ரால் துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌ ச‌பையே லூத்த‌ர‌ன் ச‌பை. க‌த்தோலிக்க‌த் திருச்ச‌பைக்கும், போப்பின் ஆளுகைக்கும் எதிரான‌ இவ‌ருடைய‌ புதிய‌ அமைப்பு உல‌கெங்கும் பின்ன‌ர் ப‌ர‌விய‌து.
க‌த்தோலிக்க‌த் திருச்ச‌பையில் அடிப்ப‌டையான‌ ப‌ல‌ ந‌ம்பிக்கைக‌ளை லூத்த‌ர‌ன் ச‌பை எதிர்த்த‌து. குறிப்பாக‌ இயேசுவின் அன்னை ம‌ரியாள் வ‌ண‌க்க‌த்துக்குரிய‌வ‌ர் எனும் சிந்த‌னையையும், இற‌க்கும் வ‌ரை அவ‌ர் க‌ன்னியாக‌வே இருந்தார் எனும் க‌த்தோலிக்க‌ திருச்ச‌பையின் ந‌ம்பிக்கையையும் இவ‌ர் எதிர்த்தார். இஸ்லாமிய‌ர்க‌ளின் புனித‌ நூலான‌ குரான் மிரிய‌ம் என‌ ம‌ரியாளை அழைத்து, அவ‌ர் க‌ன்னியாக‌வே வாழ்ந்தார் என‌ குறிப்பிடுகிற‌து. அதே போல‌ க‌த்தோலிக்க‌த் திருச்சபையின் புனித‌ர் வ‌ழிபாடு, பாவ‌ம‌ன்னிப்பு உட்ப‌ட‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை லூத்த‌ர‌ன் ச‌பை எதிர்த்த‌து. பைபிளையும், இறை வார்த்தைக‌ளையும் அது முன்னிலைப்ப‌டுத்திய‌து.

கிபி 1618ம் ஆண்டு கத்தோலிக்க – புராட்டஸ்டண்ட் கருத்துப் போராட்டம் மிகப்பெரிய போராய் வெடித்தது. கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவத்தை எதிர்த்தவர்களும் இந்த போரில் ஈடுபட்டார்கள். பல அரசர்கள் தங்கள் விரோதத்தைத் தீர்த்துக் கொள்ள இந்த போரை பயன்படுத்தினார்கள். ஐரோப்ப நாடு முழுவதும் இந்த போரில் ஈடுபட்டது. இந்த யுத்தம் முப்பது ஆண்டுகள் நடந்தது.

கிறிஸ்த‌வ‌த்தில் ஏராள‌மான‌ பிரிவுக‌ள் ஆர‌ம்ப‌மாகி வ‌ள‌ர‌த் துவ‌ங்கின‌. ப‌ல்வேறு மொழிக‌ளில் பைபிள் அச்சிட‌ப் ப‌ட்ட‌து. உல‌கின் அதிக‌ மொழிக‌ளில் அச்சிட‌ப்ப‌ட்ட‌ நூல் பைபிள் என்ப‌து இன்றைய‌ நிலை. 1450ம் ஆண்டு தான்  விவிலியம் முதன் முதலில் அச்சிடப்பட்டது. அச்சு இயந்திரத்தைக் கண்டு பிடித்த கூடம்பர்க் முதலில் அச்சடித்த நூல் விவிலியம் !!! எனவே விவிலியமே உலகில் அச்சிடப்பட்ட முதல் நூல் என்னும் பெருமையைப் பெறுகிறது. ஜெர்மனியிலுள்ள மயின்ஸ் என்னுமிடத்தில் இது அச்சிடப்பட்டது.

தமிழின் முதல் உரைநடை நூலை எழுதிய பெருமை இயேசு சபை பாதிரியார்களையே சாரும்.  கி.பி 1577ல்  “கிறிஸ்தவ வேதோபதேசம்” என்னும் உரை நடை நூல் வெளியிடப்பட்டது. இதுவே தமிழில் வெளியான முதல் உரைநடை நூல். இந்நூல் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ‘கிறிஸ்தவ வணக்கம்’ என்னும் நூல் ஆன்ரிக் என்னும் பாதிரியாரால் அச்சிடப்பட்டது. அதன்பின் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த ராபர்ட் நோபிலி, பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்க காலங்களில் வாழ்ந்து வந்த வீரமாமுனிவர் போன்றோர் பல உரை நடை நூல்களை இயற்றினார்கள்.

அதன்பின் ஸீகன் பால்கு என்னும் டேனிஷ் சபையைச் சேர்ந்தவரின் முயற்சியினால் ஜெர்மனியிலிருந்து அச்சுப் பொறிகளும் அச்சு எழுத்துக்களும் வரவழைக்கப்பட்டு தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது. 1713ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அச்சுப்பொறி பல நூல்களைப் பதிப்பித்தது. இவ்வாறு கிறிஸ்தவ மதத்தினரின் மதப்பிரச்சாரம் ஒருவகையில் தமிழ் மொழியை வளர்ச்சியடையச் செய்தது என்றால் அது மிகையல்ல.

தமிழ் மீது தணியாத தாகம் கொண்டு இதை அவர்கள் செய்யவில்லை. ஆனால் நற்செய்தியைப் பரப்பவேண்டுமெனில் தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். எனவே தமிழ் மொழியையும் கற்று, மொழிபெயர்ப்பு இலக்கியங்களையும் நல்ல இலக்கியங்களையும், அச்சு, உரைநடை போன்ற தளங்களையும் விரிவுபடுத்தினார்கள்.

பைபிளின் மொழிபெய‌ர்ப்புக‌ளும், கிறிஸ்த‌வ‌த்தின் பிரிவுக‌ளும் ம‌த‌த்தை மிக‌ விரைவாக‌ ப‌ல்வேறு இட‌ங்க‌ளுக்குக் கொண்டு செல்ல‌ப் ப‌ய‌ன்ப‌ட்ட‌ன‌. “உல‌கெங்கும் சென்று ந‌ற்செய்தியை அறிவியுங்க‌ள்” எனும் இயேசுவின் க‌ட்ட‌ளைக்கு ஏற்ப‌ அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுடைய‌ ப‌ணியைச் செய்து வ‌ருகின்ற‌ன‌ர்.

க‌த்தோலிக்க‌த் திருச்ச‌பை, லூத்த‌ர‌ன் ச‌பை, சொசினியானிச‌ம், அர்மீனியானிச‌ம், பியூரிடான்ஸ், ஸெப்பராஸ்டிஸ்ட்ஸ், பிரஸ்பத்தீரியன்ஸ், குவேக்கர் சபை, அனபாப்டிஸ்ட், பக்தி இயக்கம், மொரேவிய சபை, மெதடிஸ்ட் சபை, பிராட் சர்ச் பார்ட்டி, இரட்சண்ய சேனை, பெந்தே கோஸ்தே சபை, யஹோவா சபை, அட்வெண்ட் சபை உட்ப‌ட‌ ப‌ல்வேறு ச‌பைக‌ள் இன்று உல‌கெங்கும் ப‌ர‌வியிருக்கின்ற‌ன‌.
இன்று உல‌கின் மிக‌ப்பெரிய‌ ம‌த‌மாக‌ உருவெடுத்திருக்கும் கிறிஸ்த‌வ‌த்தின் சுருக்க‌மான‌ வ‌ர‌லாறு இது தான்.

நன்றி: சகோ.சேவியர்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum