கல்விக் கடன் வசூலில் எஸ்பிஐ வங்கியின் அணுகுமுறை ஆபத்தானது: அன்புமணி
Wed Jun 22, 2016 4:42 pm
அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கல்விக் கடன் வாங்கி உயர் கல்வி படித்த மாணவர்கள் வேலை கிடைக்காமல் வாடும் நிலையில், அவர்களிடமிருந்து கல்விக் கடனை வசூலிக்க பாரத ஸ்டேட் வங்கி மிகவும் கொடூரமான வழிமுறையை கையில் எடுத்துள்ளது.
மாணவர்களுக்கு வழங்கிய கல்விக் கடன்களில் தவணை தவறிய கடன்களை தனியார் நிறுவனத்திடம் அடிமாட்டு விலைக்கு விற்று, முழுத் தொகையையும் மாணவர்களிடமிருந்து வசூலித்துக் கொள்ள அனுமதித்திருக்கிறது. ஸ்டேட் வங்கியின் இந்த செயல் கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழ்நாட்டில் அரசு உயர் கல்வி நிறுவனங்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாததால் பெரும்பாலான மாணவர்கள் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அரசு உயர் கல்வி நிறுவனங்களைவிட தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கு 100 மடங்கு வரை அதிகம் செலவாவதால், அதை சமாளிக்க முடியாத ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் வங்கிகள் கல்விக் கடன் வாங்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகின்றனர்.
கடன் வாங்கிப் படித்தும் தரமற்ற, தொழில்திறன் பயிற்சி இல்லாத உயர் கல்வியைக் கொண்டு மாணவர்களால் வேலைக்கு செல்ல முடிவதில்லை. பல மாணவர்கள் பொறியியல் பட்டம் பெற்று தினக்கூலி வேலைக்கு செல்லும் அவல நிலை நிலவுகிறது. மாணவர்களின் இந்த நிலையை புரிந்து கொள்ளாத பொதுத்துறை வங்கிகள் கல்விக் கடன்களை வசூலிப்பதற்காக கந்துவட்டிக்காரர்களின் உத்திகளை கைகளில் எடுத்துள்ளன.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கல்விக் கடன் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் ரூ.61,176 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலிருந்து மட்டும் 9.56 லட்சம் மாணவர்கள் ரூ.16,380 கோடியை கடனாக பெற்றிருக்கின்றனர். இவற்றில் ரூ.1,875.56 கோடி மட்டும் வாராக்கடனாக மாறியிருக்கிறது.
இதில் பாரத ஸ்டேட் வங்கி மூலம் வழங்கப்பட்ட தொகை ரூ.847 கோடி ஆகும். இந்த வாரக் கல்விக் கடனை 45% தொகைக்கு ரிலையன்ஸ் கடன் வசூல் நிறுவனத்திடம் விற்பனை செய்திருக்கிறது. வாராக்கடன்களை வாங்கிய ரிலையன்ஸ் நிறுவனம் கல்விக் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ள மாணவர்களை மிரட்டத் தொடங்கியுள்ளது.
கல்விக்கடனை உடனடியாக திரும்பச் செலுத்தாவிட்டால் மிக மோசமான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என்று மாணவர்களுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்ட கடிதங்களில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த கட்டமாக குண்டர்களை அனுப்புதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ரிலையன்ஸ் நிறுவனம் இறங்கலாம் என்பதால் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கடுமையான அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.
கல்விக் கடன் பெற்று படிக்கும் மாணவர்கள் வேலை கிடைத்த உடனோ அல்லது படிப்பை முடித்த ஓராண்டிலேயோ கல்விக் கடன் தொகையை செலுத்தத் தொடங்க வேண்டும். இந்த கெடுவைத் தாண்டி 3 மாதங்கள் வரை கடன் தவணை செலுத்தப்படவில்லை என்றால் அது வாராக்கடனாக கருதப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் இன்றுள்ள சூழலில் பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி படித்த மாணவர்களில் பெரும்பான்மையினருக்கு 7 முதல் 10 ஆண்டுகள் கழித்து கூட தகுதிக்கேற்ற வேலை கிடைப்பதில்லை. அதனால் தான் அவர்களால் கல்விக் கடனை செலுத்த முடிவதில்லை.
வேலை கிடைக்காததால் ஏற்கெனவே குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் தினமும் அவமரியாதைகளை எதிர்கொண்டு வரும் மாணவர்கள், இப்போது கல்விக் கடனுக்காக ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் கொடுக்கப்படும் மரியாதைக் குறைவான நெருக்கடிகளால் அவமானமடைந்து தவறான முடிவுகளை எடுக்கும் ஆபத்து உள்ளது. இப்படி ஒரு நிலையை வங்கிகள் ஏற்படுத்திவிடக் கூடாது.
கல்விக் கடனை வசூலிக்க பாரத ஸ்டேட் வங்கி தேர்ந்தெடுத்துள்ள முறை ஆபத்தானது என்பது மட்டுமின்றி, ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தவிர யாருக்கும் பயனளிக்காத ஒன்றாகும். கல்விக் கடன்கள் 45% தொகைக்கு விற்கப்பட்டிருப்பதால், ரூ.847 கோடி வாராக்கடனில் ஸ்டேட் வங்கிக்கு ரூ.381 கோடியை மட்டுமே ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும். அதையும் உடனடியாக வழங்கிவிடாது. ரூ.54.24 கோடியை மட்டுமே இப்போது வழங்கியுள்ள ரிலையன்ஸ் நிறுவனம், மீதமுள்ள தொகையை அடுத்த 15 ஆண்டுகளில் படிப்படியாக வழங்கும்.
15 ஆண்டுகள் கழித்து ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும் போது அந்த தொகையின் மதிப்பு மிகக்குறைவாகவே இருக்கும். அதேநேரத்தில் மாணவர்களை மிரட்டி, வழக்கமான கல்விக் கடனுக்குரிய வட்டியை விட பலமடங்கு வட்டியை ரிலையன்ஸ் வசூலிக்கும். 15 ஆண்டு கால அவகாசத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் வசூலிப்பதை விட, மாணவர்களுக்கு அதே கால அவகாசத்தைக் கொடுத்தால் அவர்கள் இன்னும் அதிக தொகையைக் கூட செலுத்துவர்.
ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து உடனடியாக கிடைக்கும் ரூ.54 கோடிக்காக லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாரத ஸ்டேட் வங்கி சூனியமாக்கி விடக்கூடாது. ஒருவர் பெயரில் வாங்கும் கடனை அவரது ஒப்புதல் இல்லாமல் பிறருக்கு மாற்றித் தருவது கந்துவட்டி வசூலிக்கும் குற்றத்திற்கு இணையானதாகும். இப்படி ஒரு செயலை செய்ய இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியே எப்படி துணிந்தது? என்பது தான் தெரியவில்லை.
கடந்த ஆண்டு கேரளத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் அதனிடமிருந்த ரூ.130 கோடி வாராக்கடனை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ரூ.63 கோடிக்கு விற்ற போது மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. உடனடியாக அப்போதிருந்த உம்மன்சாண்டி அரசு தலையிட்டதை அடுத்து திருவாங்கூர் வங்கி அதன் முடிவை திரும்பப் பெற்றது.
பாரத ஸ்டேட் வங்கியின் முடிவால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
தமிழகத்தில் வாராத கல்விக் கடன் ரூ.1875 கோடி மட்டும் தான் என்பதால், அதில் 45% தொகையான ரூ.843 கோடியை தமிழக அரசே செலுத்தி கூட கடனை தள்ளுபடி செய்ய கோரலாம். இப்பிரச்சினையில் தமிழக அரசும், பாரத ஸ்டேட் வங்கியும் இணைந்து வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால், பாதிக்கப்பட்ட மாணவர்களைத் திரட்டி எனது தலைமையில் மிகப்பெரிய அறப்போராட்டத்தை பாமக நடத்தும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|