பெண்கள் தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டிய தடுப்பூசிகள்!
Thu May 12, 2016 5:10 pm
‘‘வரும் முன் காப்பது எப்போதும் நன்று. அந்த வகையில், பெண்கள் தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டிய தடுப்பூசிகள் இரண்டு உள்ளன’’ என்கிறார் மதுரை, தாஜ் மருத்துவமனையின் மகப்பேறு சிறப்பு மருத்துவர் சுதா தீப்.
அவர் தெரிவித்த அந்த இரண்டு தடுப்பூசிகள் குறித்த விவரம் இங்கே...
ருபெல்லா (Rubella) தடுப்பூசி
" ருபெல்லா என்பது, வைரஸ் தொற்றால் ஏற்படக்கூடிய நோய். இந்நோய், சருமத்தில் சிவப்புத் திட்டுகள், தொண்டை வலி மற்றும் சுரப்பிகளில் வீக்கம் என்று மிகவும் மிதமான பாதிப்புகளுடன், ஆண்கள், பெண்கள் என யாருக்கும் அதிகபட்சமாக மூன்று நாட்கள் வரையே நீடிக்கக்கூடிய ஆபத்தில்லாத நோய்.
ஆனால், அதுவே ஒரு கர்ப்பிணி ருபெல்லா நோயால் பாதிக்கப்படும்போது, அந்நோய் அவளின் கருவில் உள்ள குழந்தையை கடுமையாகப் பாதிக்கலாம். சிசுவின் இதயம், மூளை, பார்வை, கேட்கும் திறன் பாதிப்புகளில் இருந்து கருச்சிதைவுவரை ஏற்படுத்தும் ஆபத்துள்ளது. எனவே, அதில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒவ்வொரு பெண்ணும் ருபெல்லா தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது.
பொதுவாக, பெண் குழந்தைகளுக்கு 12 வயதில் இருந்து, பெண்கள் கருத்தரிக்கும் முன்பாக எந்த வயதிலும் ருபெல்லா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். வாழ்நாளில் ஒரு முறை போட்டுக்கொண்டால் போதும், தவணைகள்(டோஸ்) இல்லை. இந்த ஊசி போட்டுக்கொண்ட நாளில் இருந்து ஆறு மாதங்கள் வரை கருத்தரித்தல் தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்ப்பவாய் புற்றுநோய் (Cervical Cancer) தடுப்பூசி
கர்ப்பவாய் புற்றுநோயை ஏற்படுத்தும் ஹுமன் பாப்பிலோமா வைரஸ் (Human Papillomavirus-HPV)-ல் இருந்து தற்காத்துக்கொள்ள, கர்ப்பவாய் புற்றுநோய் தடுப்பூசி அவசியமாகிறது. 2015-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 1,22,844 பெண்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படுகிறது. அதில், 67,477 பெண்கள் இறக்கிறார்கள். மற்ற கேன்சர்களை பின்தள்ளி, பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோயில் இது முன்னணியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது புரிந்திருக்கும் இந்தத் தடுப்பூசி பெண்களுக்கு எவ்வளவு முக்கியமான ஒன்று என்று.
கர்ப்பவாய் புற்றுநோய் ஏற்பட பாலினப் பழக்க வழக்கங்களே முக்கியக் காரணம். எனவே, ஒரு பெண் ஹெச்பிவி வைரஸ் பாதிப்புக்கு உள்ளாவதற்கு முன்பாகவே போட்டுக்கொள்ளும்பொருட்டு, பாலினத் தொடர்புகொள்ளும் வயதுக்கு முன்பாகவே இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது.
எனவே, பதின் பருவத்தில் இந்த ஊசி பரிந்துரைக்கத்தக்கது. 15 வயதில் இருந்து 40 வயதுவரை எப்போது வேண்டுமானாலும் இதைப் போட்டுக்கொள்ளலாம் என்றாலும், எவ்வளவு விரைவாக போட்டுக்கொள்ளப்படுகிறதோ அந்தளவுக்குப் பாதுகாப்பு தரவல்லது.
இதை மூன்று தவணைகளில், முதல் தவணை போட்ட நாளில் இருந்து ஒரு மாதம் கழித்து இரண்டாவது தவணையும், முதல் தவணை போட்ட நாளில் இருந்து ஆறு மாதங்கள் கழித்து மூன்றாவது தவணையுமாகப் போட்டுக்கொள்ள வேண்டும்.
இந்தத் தடுப்பூசி போட்ட நாளில் இருந்து ஆறு மாதங்கள்வரை கருத்தரிப்பதை தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.’’
தாமதிக்காமல் விரைந்து தற்காத்துக்கொள்வோம் நம் ஆரோக்கியத்தை!
- ஜெ.எம். ஜனனி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|