ஆசீர்வாத தட்டு
Mon Aug 29, 2016 12:46 pm
கிறிஸ்தவ சபைகளில் வேகமாக பரவி வரும் ஆசீர்வாத தட்டு என்கிற சீர்கேடு..
ஆசீர்வாத தட்டு
திருநெல்வேலி & தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள CSI திருமண்டலத்தில் பணம் சேர்க்க உருவாக்கப்பட்ட திட்டம்தான் இது. அசனம், மாம்பழ பண்டிகை போன்ற விசேஷங்கள் இந்த குறிப்பிட்டCSI டையோசிஸ்ஸில்மட்டுமே இன்றைக்கும் பல ஆண்டுகளாக பரம்பரையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதில் நல்ல காரியம் என்று கூறவேண்டுமானால் சமபந்தி உணவுபோல பல ஆயிரம் மக்களுக்கு அந்த ஒருநாள்மட்டும் குறைவில்லாமல் சபை மக்களோடு, வெளி ஊர்களிலிருந்து வருவோர் அனைவருக்கும் விருந்து பரிமாறப்படுகிறது.
இது நெல்லை மாவட்ட CSI கிறிஸ்தவர்களிடையே மட்டும் காணப்படும் சிறப்பு ஆகும். 12 வருடத்துக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்துமதமக்கள் கொண்டாடும், கும்பமேளாபோல் நெல்லை டையோசிஸ் சபை மக்களுக்குமட்டும் இது விசேஷ பண்டிகை போலாகிவிட்டது. இது மாத்திரமல்ல, இதில் கலந்துக் கொண்டால் குடும்பத்துக்கே பெரிய ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதுபோல் குறிப்பிட்ட இந்த விருந்துநாளை இவர்களே திசை திருப்பிவிட்டனர். அதை நம்பி வியாபாரம் மற்றும் தொழில் செய்ய வெளிமாநிலத்தில் குடியேறிய நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், கிறிஸ்மஸ், புதுவருடம் போன்ற விசேஷங்களுக்கு வராமல்போனாலும் இந்த அசனத்துக்கு வந்து அந்த அசன சாப்பாட்டில் கைவைத்தால்போதும் ஒரு பெரும் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று சபை மக்களை நம்பவைத்துவிட்டனர். அதனால் இவர்களில் பெரும்பாலோhர் மிகுந்த எதிர்ப்பார்ப்போடு கும்பமேளாவுக்கு போய்வரும் மக்களைப்போல் குடும்பத்தோடு தங்கள் ஊர் சபை அசனத்துக்கு வந்துபோவர்கள்.
இந்த குறிப்பிட்ட அசன பண்டிகையின் செலவினங்களுக்கு ஏராளமான பொருட்களையும், அரிசி, எண்ணெய், பருப்பு, ஆட்டுகிடா போன்றவைகளை அவரவர் குடும்ப சார்பில் கொடுப்பார்கள். அப்படியே அதன் செலவினங்களுக்கு பணத்தை காணிக்கை என்ற பெயரில் கணக்கு பார்க்காமல் அள்ளி கொடுப்பார்கள். பழைய காலங்களில் தங்கள் விளைநிலங்களில் விளைந்த அல்லது தங்கள் வீட்டில் விளைந்த தேங்காய், பழ வகைகள், காய்கறிகள் போன்றவைகளோடு பலகாரங்களை தயாரித்து அசனம் அன்று ஆலயத்தில் கொண்டுவந்து ஆல்டரில் வைத்து ஜெபம் ஏறெடுப்பார்கள். கடைசியில் அவைகளை ஏலம் இட்டு பெரும்தொகைக்கு ஏலப்பெருட்களை வாங்கி அந்த பணத்தை ஆலயத்துக்கு திருமண்டலத்துக்கு காணிக்கையாக சமர்பிப்பார்கள். இப்படிப்பட்ட செயல்களில் பிழையேதும் இல்லை.
இதுவரை பிரச்சனையில்லாமல் நடந்துக்கொண்டிருந்த இந்த அசனத்தில் திடீரென்று குறுக்கே புகுந்ததுதான் ஆசீர்வாத தட்டு என்ற புது வழக்கம். இந்த ஆசீர்வாத தட்டில் விலையுயர்ந்த பொருள்களை வைத்து அதோடு சிலர் தங்கள் நகைகளை அப்படியே கழற்றி அதில் வைப்பார்கள். சில இடத்தில் தாலிசெயினையே கழற்றி வைத்திருக்கிறார்கள். இந்த ஆசீர்வாத தட்டு சமர்பிப்பவர்கள் அந்த தட்டு ஆல்டரில் வைத்து ஜெபம் செய்தபின் முதலாதாக அந்த தட்டை அதில் உள்ள பொருள்களோடு ஏலம் விடுவார்கள். அந்த ஆசீர்வாத தட்டுக்கு வாங்க பெரும் போட்டியிருக்கும் காரணம் பெரும் தொகையுள்ள தங்கநகை, வளையல் உட்பட அந்த தட்டில் வைப்பார்கள்.
அந்த தட்டை வைத்தவர்களே அது எத்தனை ரூபாய்க்கு ஏலம் போனாலும் அந்த தட்டை தாங்களே திரும்ப எடுத்துக்கொள்ளும் நோக்கத்தில் பெரும்தொகை கொடுத்து ஏலம் எடுப்பார்கள். விலையை தூக்கிவிட அல்லது விலையை உயர்த்தவும் சிலர் திட்டமிட்டு வருவார்கள். அவர்களுக்கு தெரியும் தட்டு வைத்தவர் அதைவிட்டு கொடுக்க மாட்டார்கள் எவ்வளவு விலையினாலும் அவர்கள் வாங்கத்தான் போகிறார்கள் என்பதை அறிவார்கள். அந்த தட்டை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் தாங்களே வாங்கிவிட்டால் அதை பெரும் வெற்றியாகவும், ஆசீர்வாதமாகவும் கருதுவார்கள்.
அந்த தட்டு அவர்கள் குடும்பத்துக்கு பெருத்த ஆசீர்வாதத்தை கொடுக்கும் என்பது அவர்கள் மூடநம்பிக்கையாகும். இப்படிப்பட்ட ஆசீர்வாத தட்டுவியாபார தந்திரத்தை திருமண்டலத்தில் எப்படி அனுமதித்தார்களோ தெரியவில்லை. கொஞ்ச கொஞ்சமாக இது நெல்லை CSI சபையின் விக்கிரகமாக மாறியது. இதன்மூலம் மூடநம்பிக்கையும் வளர்ந்தது. அந்த ஆசீர்வாத தட்டை வாங்கி செல்ல வெறிகொண்டவர்கள்போல் விட்டுக்கொடுக்காமல் போட்டிபோட்டுக் கொண்டு மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுத்து அதை வாங்கிப்போவார்கள். ஏலம் முடிந்தவுடன் பிஷப்போ, ஆயரோ அந்த தட்டின் மீது கைவைத்து ஜெபித்து ஏலம் வாங்கியவரின் குடும்பத்தினரை மேடைக்கு வரவழைத்து அவர்கள் கையில் யாவரும் பார்க்க அந்த தட்டை ஒப்படைப்பார்கள்.
இந்த வழக்கம் இப்போது திருநெல்வேலி, தூத்துக்குடியிலிருந்து வெளிஊர்களில் வாழும் கிறிஸ்தவர்கள் இந்தியாவிலுள்ள எந்த CSI சபையில் அதிகம் அங்கத்தினராகி நிறைந்து காணப்படுகிறார்களோ அந்த சபையில் இந்த அசன பண்டிகையை நடத்த தொடங்கிவிட்டனர். அந்த சபையின் ஆயரிடம் கூறி, கமிட்டியிலுள்ள பெரும்பான்மையினரை சம்மதிக்கவைத்து அசன பண்டிகையை எப்படியும் நடத்திவிடுவார்கள். அப்படித்தான் சென்னை, கோவை, சேலம் போன்று இன்னும் எங்கெல்லாம் திருநெல்வேலி CSI கிறிஸ்தவர்கள் ஆராதிக்கிறார்களோ அந்தந்த சபையில் ஆசீர்வாத தட்டையும் அறிமுகப்படுத்திவிடுகிறார்கள்.
ஒரு விதத்தில் இது சூதாட்டம் போலவும், விக்கிரகம் போலவும் மாறிக்கொண்டுவருகிறது.
முதலாவது அந்த ஆசீர்வாத தட்டு மூலம் எந்த ஒரு கிறிஸ்தவனுக்கும் ஆசீர்வாதம் கிடைக்க போவதில்லை என்பதை இவர்கள் அறிந்துக்கொள்ளவேண்டும். நம் வாழ்க்கையை சீர்ப்படுத்திமனந்திரும்பி வசனத்தின்படி ஜீவித்தால்மட்டுமே தேவனிடமிருந்து எந்த ஆசீர்வாதமும் தானே வரும். இதை மறந்து ஒரு குருட்டு விசுவாசத்தில் ஊழியத்துக்கு, சபைக்கு இதன்மூலம் பணம் சேருகிறது நல்லதுதானே! என்பது இவர்கள் வாதம். இப்படிக்கூறி இதை நியாயப்படுத்துகிறார்கள். நோக்கம் நல்லதுதான். ஆனால் வழி சரியில்லையே! வசனத்துக்கு விரோதமான உபதேசம் இதன் உள்ளே நுழைந்துவிட்டதே! ஆசீர்வாத தட்டு வாங்கியவருக்குமட்டுமே அதிக ஆசீர்வாதம் என்பதுபோலாகிவிட்டதே! அதுதான் ஆபத்து. பணம் அதிகம் கொடுக்கிறவர்களுக்குமட்டுமே ஆசீர்வாத தட்டு கிடைக்கும் என்றாகிவிட்டது.
இப்போது அந்த ஆசீர்வாத தட்டு நெல்லை CSI கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒரு விக்கிரகமாக மாறி சபை மக்களை வசனத்தில் இருந்தும், ஆவிக்குரிய ஆசீர்வாதம் என்ற உண்மையிலிருந்தும் விலக்க ஆரம்பித்துவிட்டதே! அதுதான் ஆபத்து.
ஆலயத்தை கள்ளர் குகையாக்குகிறார்கள் என்று கூறி காசு விற்கிறவர்களை (Money Ex-change)ஆலயத்திலிருந்து இயேசுகிறிஸ்து விரட்டினார். அன்றைய காலங்களில் வெளிநாட்டு பணத்தை எருசலேம் ஆலயத்தில் அப்படியே காணிக்கையாக போடமுடியாது, அதை காசுக்காரரிடம் (Money Ex-change கடையில்) விற்று ஆலய காணிக்கைக்கு ஒரு தொகை, ராயனுக்கு ஒரு தொகை என்று இரண்டு வித்தியாசமான காணிக்கை காசுகளை அங்கு ஆலயத்தின்முன் விற்பார்கள். அதை வாங்கி ஆலயத்தில் கொண்டுப்போவார்கள். ஆசாரியன் அந்த பணத்தில் பாதியை கொள்ளையடித்ததுபோக மீதி பாதியைத்தான் ராயனுக்கு அனுப்புவான். இப்படிப்பட்ட ஏமாற்று காரியங்கள் நடப்பதாக இயேசுகிறிஸ்து அறிந்து சாட்டையை எடுத்து விளாசினார்.
ஏறக்குறைய இதே நிலையில்தான் இன்றைய சபைகள் போய்கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட ஆசீர்வாத தட்டு காணிக்கை சேகரிப்பு சூதாட்டம்போல் மாறி மக்களை ஆவிக்குரிய ஜீவியத்திலிருந்து திசை திருப்புகிறது. அசனம் நடத்தி எல்லாருக்கும் ஆகாரம் ஏற்பாடு செய்வது நல்லது. அது ஒருஅன்பின் விருந்தும் என்று எடுத்துக்கொள்ளலாம். அதில் தவறில்லை. அதன் மூலம் சபை மக்களின்ஐக்கியத்தையும், ஒற்றுமையையும் காட்டலாம். ஆனால் ஆசீர்வாத தட்டு என்ற பெயரில் பணக்கார காணிக்கை ஏற்பாட்டை ஊக்கப்படுத்துவது சரியல்ல, பெரும்தொகை அதன்மூலம் ஆலயத்துக்கு கிடைப்பதால் ஆயர்கள் அதை தடை செய்யாமல் இருக்கிறார்கள். ஆனால் ஆண்டவர் அந்த முறையை அங்கீகரிக்கிறதில்லை. சபைக்கு காணிக்கையை நல்லமுறையில் சமர்பிக்கலாமே?
சபையில் உள்ள ஏழை மக்கள் அந்த ஆசீர்வாத தட்டை தங்களுக்கு எட்டா கனியாக பார்க்கிறார்களே! அந்த நிலை சபைக்கு நல்லதில்லை.
முடிவாக நான் கூறுவது, அசனம் நடத்துங்கள், ஐக்கியத்தை வெளிப்படுத்துங்கள். ஆனால் தவறான விசுவாச நம்பிக்கை கொண்ட இந்த ஆசீர்வாத தட்டுமுறை சபைக்கு அவசியமா? ஆண்டவர் அதன்மேல் பிரியம் கொள்வாரா? என்று இந்த ஏற்பாட்டை மறுபரிசீலனை செய்யும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்.
சபை மக்களை வசனத்தின்படி காணிக்கை கொடுக்க பழக்குங்கள். ஆலயத்துக்கு அல்லது ஊழியத்துக்கு குறுக்குவழியில் பணம்திரட்ட முயலாதீர்கள். அந்த பண வசூல் ஆசீர்வாத தட்டுமூலம் வேண்டாம்.
சபை மக்கள் அவரவர்கள் வசதிப்படி தங்கள் நிலத்தில், மரத்தில் விளையும் பொருட்களைஆலயத்துக்கு கொண்டுவாருங்கள். தங்கள் தொழிலில் விற்கும் பொருட்களை காணிக்கையாக ஆலயத்துக்கு கொண்டு வாருங்கள். முடியாதவர்கள் தங்கள் வீடுகளில் சமைத்த பலகாரங்கள் அல்லது கடையில் விற்கும் பலகாரங்களை விலைக்கு வாங்கி தங்கள் சார்பில் அதை ஆலயத்துக்கு கொண்டு வரலாம். அது அவரவர்களின் விருப்பம். சபை மக்களில் கைத்தொழில் தெரிந்தவர்கள் எம்ராய்டரி, பின்னலாடைகள், பிளாஸ்டிக் கூடைகள், பைகள் இவைகளை செய்து அதை ஆலயத்தில் சமர்பிக்கலாம். அதை சபையில் கொண்டுவந்து சமர்பித்து அதை ஏலத்தில்விட்டு, அந்த பணத்தை காணிக்கையாக ஆலயத்துக்கும், மிஷனரி பணிக்குமாக இப்படி பல நல்ல காரியங்களுக்கு உபயோகிக்கலாம்.
அது சூதாட்டம் அல்ல, அதை கள்ளர் குகை என்று இயேசுகிறிஸ்து கூறமாட்டார்.
ஆலயத்தில் எதை செய்தாலும் அதில் சாட்சியும், நியாயமும், உண்மையும் காணப்படவேண்டும். அதுதான் கடவுளுக்கு பிரியம்.
Thanks
http://134804.activeboard.com/…/csi-church-of-south-india…/…
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|