"உடைக்கப்பட்டால் தான் உருவாக்கப்பட முடியும் "
Mon Jul 25, 2016 12:14 pm
உடைக்கப்பட்டால் தான் உருவாக்கப்பட முடியும்.
எத்தனை நாட்கள் நீங்கள் கண்ணீர் வடித்திருப்பீர்கள்? நீங்கள் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்து கொண்டிருக்கலாம். அவமானம் நிந்தை காரணமாக தற்கொலை செய்துவிடலாம் என்று நீங்கள் சிந்தித்து கொண்டிருக்கலாம். உங்கள் பிரச்சனைக்கு தற்கொலை என்பது ஒரு முடிவல்ல!
வாழ்க்கை என்பது நாம் போராடி ஜெயிக்க வேண்டிய ஒன்று, நம்மை படைத்த எஜமானகிய குயவன் கரத்தில் அவர் சித்தம் போல வனைய நம்மை ஒப்புக்கொடுக்கும் போது தான் நம் வாழ்க்கை செழிப்பாக மாறும், பிரச்சனைகள் தானாய் மாறும்.
கவலைப்படுவதினால் யார் தன் சரீர அளவோடு ஒரு முழத்தை கூட்டுவான் என்று வேதத்தில் கேட்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இரவுக்கும் பகல் என்பது நிச்சயம் உண்டு. எந்த சூழ்நிலையிலும் நாம் தளர்ந்து போகாமல் நம் வாழ்க்கையின் பொறுப்பை ஆண்டவரிடம் ஒப்படைத்தால் நிச்சயம் நம்மை ஒரு ஆசிர்வாதமான பாத்திரமாய் வனைந்தெடுப்பார், தீயாகிய சோதனையை சகித்து விலையேறப்பெற்ற, மற்றவர்களால் விரும்பப்படதக்க பொன்னை போல ஆண்டவர் உங்களை மாற்றுவார் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.ஆண்டவரால் நீங்கள் உருவாக்கப்படும்போது உடைக்கப்பட்ட நாட்களை மறவாமல் அவருக்கு நன்றி செலுத்தவேண்டும்.
ஆபிரகாமின் வாழ்க்கையை பாருங்கள் தனது நூறாவது வயதில் ஆண்டவர் அவருக்கு ஒரு அழகான ஆண் பிள்ளையை கொடுத்தார். திடீரென்று ஒரு நாள் பிள்ளை ஈசாக்கை அழைத்துக்கொண்டு போய் அவனை தகனபலியிடும்படி கட்டளையிட்டார் . ஆபிரகாம் அதிகாலையில் தன் வேலைக்காரர்களோடு பிள்ளையை கூட்டிக்கொண்டு புறப்பட்டான். போகிற வழியில் ஆபிரகாமின் உள்ளம் எப்படி உடைக்கப்படிருக்கும் ??? வயதான களத்தில் பெற்றெடுத்த மகனை தன் கையாலே பலியிடுவதை அவரால் சிந்தித்து கூட பார்க்க முடியவில்லை. ஈசாக்கு தன் தகப்பனிடம் நெருப்பும் கட்டையும் இருக்கிறது தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்று கேட்ட போது தகப்பனாகிய தான் உடைக்கப்பட்டதை வெளியே காட்டிக்கொள்ளாமல் எல்லாவற்றையும் "கர்த்தர் பார்த்துக்கொள்வார்" என்று விசுவாசத்துடன் கூறினார், ஆபிரகாம் உடைக்கப்பட்ட சூழ்நிலையிலும் பரம குயவனாகிய கர்த்தர் தன்னை உருவாக்கத்தான் இந்த சோதனையை கடந்து போக பண்ணுகிறார் என்ற தெளிவு அவருக்குள் காணப்பட்டது. ஆண்டவர் அவருடைய விசுவாசத்தை கண்டு பலியிடுவதற்கு ஒரு ஆட்டுக்குட்டியை ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார். தம்மை நம்பினவர்களை ஒரு போதும் கைவிடாத ஆண்டவர் ஆபிரகாமை கைவிடவேயில்லை, பிற்காலத்தில் ஆபிரகாம் விசுவாச தகப்பன் எனப்பட்டார் .
அதுபோல தேவ பிள்ளைகளாகிய நாம் எந்த சூழ்நிலைகளிலும் பொறுமையோடு காணப்படவேண்டும் " இன்றைய பொறுமை, நாளைய உங்கள் பெருமை" பலருக்கு கிடைக்காத ஆசிர்வாதமான பாக்கியங்களை ஆண்டவர் நிச்சயம் உங்களுக்கு தருவார். தனிமை, தோல்வி, வறுமை, பிரச்சனை என்று கவலைபடாதீர்கள் “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். " 1 பேதுரு 5:7, கனதிற்க்குரிய பாத்திரமாய் ஆண்டவர் உங்களைமாற்றுவார் என்று இந்த நேரத்தில் நான் தீர்க்கதரிசனமாக உரைக்கிறேன்.
"உடைக்கப்பட்டால் தான் உருவாக்கப்பட முடியும் "
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|