நீங்கள் முக்கியமானவரா?
Mon May 30, 2016 8:34 am
'இந்த அலுவலகத்தில் நான் செல்லாக்காசுதான். என்னை யாரும் மதிப்பதில்லை'.
'சாதி பார்த்து பதவி உயர்வு தருகிறார்கள். அங்கு அநீதி நடக்கிறது'.
'அங்கு 'மதம்' விளையாடுகிறது. என்னைப் பழிவாங்குகிறார்கள்'.
'இந்த டீச்சர் ஆள் பார்த்து 'மார்க்' போடுகிறார். அதனால்தான் எனக்கு மார்க் குறைந்துவிட்டது'.
இப்படி எழும் 'குரல்'களை நாம் அடிக்கடி கேட்பதுண்டு.
'இவை எல்லாம் மனக்குறைகளை வெளிப்படுத்துகின்றன. அங்கு நிலவும் சூழலைத்தான் படம்பிடித்துக் காட்டுகின்றன' என நாம் நினைப்பதுண்டு.
ஆனால், உண்மைநிலை இது அல்ல. 'ஒருவரின் முக்கியத்துவம் குறைந்த நிலையில் அவர் வெளியிடும் கருத்து' என்றே நாம் பொருள் கொள்ள வேண்டும்.
தான் இருக்கும் இடத்தில் உரிய மதிப்பும், மரியாதையும் தனக்கு வழங்கப்படவில்லை என்று ஒருவர் நினைக்கும்போது, இப்படிப்பட்ட கருத்துக்களை ஒருவர் வெளியிட ஆரம்பிக்கிறார். ஒருவரின் 'முக்கியத்துவம்' குறைவதற்கு பல காரணங்கள் உண்டு.
'காசேதான் கடவுளடா, அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா' என்று பாடி பணத்தின் மதிப்பை கடவுளாக நினைத்து பணத்திற்காக வாழ்நாளெல்லாம் வாழ்பவர்களும் உண்டு.
'பணம் பாதாளம் வரை பாயும்' என பணத்தின் வலிமையை வியந்து பாராட்டுபவர்களும் உண்டு.
ஒரு காலத்தில் 'காசு', 'பைசா', 'ஓட்டைக்காலணா', 'துட்டு' என மதிக்கப்பட்ட பல நாணயங்கள் இன்று 'செல்லாக்காசு' வரிசையில் சேர்ந்துவிட்டன.
ஒரு 'நாணயம்' செல்லாக்காசாக மாறுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. அவை...
1. 'அந்த நாணயம் பயனற்றது' என்ற அரசின் அறிவிப்பு.
2. நாணயத்தின் எழுத்துக்கள் அழிந்ததால் அந்த நாணயம் பயனற்றதாக மாறிய நிலை.
3. மதிப்புக் குறைந்த நாணயங்களை பயன்படுத்த மக்கள் விரும்புவதில்லை.
இதிலிருந்து ஓர் உண்மையை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஒரு நாணயம் செல்லாக் காசாக மாறுவதுபோல, ஒரு மனிதரும் செல்லாக்காசாக மாறும்நிலை சிலவேளைகளில் ஏற்பட்டு விடுகிறது.
ஒருவர் பிறருக்கும், அவர் பணிபுரியும் அலுவலகத்திற்கும், வீட்டிற்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் செயல்படாமல் வாழ்ந்தால், அவர் பயனற்ற 'செல்லாக்காசு' என்றே கருதப்படுகிறார். 'முக்கியமான மனிதர்' என்னும் நிலையிலிருந்து அவர் கீழே தள்ளப்படுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
'முக்கியத்துவம்' என்பது ஒருவருக்கு தானாக வந்து விடாது. பதவி சிலருக்கு மரியாதையை வழங்கலாம். பணம் இருப்பதால் சிலர் முக்கியத்துவம் பெறலாம். படை வீரர்களோடு சுற்றி வருவதால் சிலர் பிரபலமாகலாம். உறவுகளோடு உலா வருபவர்களுக்கு பலரும் 'வணக்கம்' போடலாம்.
ஆனால் இவை தவிர எதுவுமே இல்லாமல் நீங்கள் முக்கியத்துவம் பெற வேண்டுமென்றால் நீங்கள் செய்யும் செயலில் 'அதிக ஈடுபாடு' (More Involvement) கொண்டு உழைக்க வேண்டியது அவசியம் ஆகும்.
அது ஓர்அலுவலகம்....
ராமசாமியும், கிருஷ்ணசாமியும் அலுவலக நண்பர்கள். இருவரும் ஓர் ஊர்க்காரர்கள். ஒரே பள்ளியிலும், கல்லூரியிலும் படித்து பட்டம் பெற்று ஒரே அலுவலகத்தில் ஒரேநாளில் சேர்ந்தவர்கள்.
இரண்டுபேரும் 'அலுவலக உதவியாளர்' (Office Assistant) பணியில் சேர்ந்தார்கள். 15 வருடத்திற்குள் ராமசாமி அந்த அலுவலகத்தின் 'மேலாளர்' (Manager) பதவியை எட்டிப்பிடித்தார். கிருஷ்ணசாமி அதே உதவியாளர் பணியில் உட்கார்ந்துகொண்டு 'எனக்கு நேரமே சரியில்லை. இப்படித்தான் நான் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என ஆண்டவன் என் தலையில் எழுதிவிட்டான்' என்று வருந்தி, புலம்பினார்.
ஆனால், கிருஷ்ணசாமியின் நண்பர் ராமசாமி மேலாளராக பதவி உயர்வு பெறுவதற்கு பல காரணங்கள் இருந்தது.
வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் தொடங்கி அவர் உற்சாகமாகப் பணியாற்றினார். தன்னோடு பணிபுரிபவர்களிடம் நல்லமுறையில் பழகி, அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டார்.
எந்தச்சூழலிலும் தனது முகத்தை கடுமையாகவோ, எரிச்சல் கலந்த வெறுப்புடனோ வைத்துக்கொள்ளாமல், சிரித்த முகத்தோடு பவனி வந்தார். மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்தார். மேலதிகாரிகள் என்ன பணி சொன்னாலும் அதை செய்துமுடித்தார்.
இவரது தகுதியைவிட அதிகமான சுமைகொண்ட பணியைக் கொடுத்தாலும் 'சார்... இது புதிய பணி. நான் முயற்சி செய்து பார்க்கிறேன். உங்கள் ஆசியும், ஆதரவும் எனக்கு இருக்கும்போது நிச்சயம் வெற்றி கிடைக்கும் என நான் நம்புகிறேன்' என்றுசொல்லி புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
பதவி உயர்வு கிடைத்தபின்பும் பண்போடு நடந்து கொண்டார். மற்றவர்களுக்கு என்னென்ன தகவல்கள் வேண்டுமோ அத்தனையையும் சேகரித்து வைத்து தேவையான நேரத்தில் உதவினார்.
நகரத்தில் சிறந்த பள்ளி எது? நல்ல மருத்துவமனை எது? பஸ், ரெயில் போக்குவரத்து நேரம் பற்றிய தகவல்கள், வேலைவாய்ப்புத் தகவல்கள், ஒரு குடும்பத்திற்கு வேண்டிய சின்னச்சின்ன உதவிகளை யாரிடமிருந்து பெற முடியும் என்ற தகவல்கள் என அலுவலகத்தோடு தொடர்பு இல்லாத பல தகவல்களையும் ராமசாமி சேகரித்து வைத்து பலருக்கும் உதவினார்.
இதன் விளைவாக யாருக்கு என்ன உதவி தேவை என்றாலும், 'ராமசாமியைப் பாருங்கள்' என்று பலரும் பேச ஆரம்பித்தார்கள். அலுவலக மேலாளர்கள், நண்பர்கள் உதவிகள் கேட்கும்போது ஓடோடிச்சென்று உதவினார் ராமசாமி.
'ஆபீசரை காக்கா பிடிக்கிறான்', 'பதவிக்காக அலைகிறான்' என்றெல்லாம் சிலர் பழிச்சொற்களை அள்ளித் தெளித்தார்கள். ராமசாமி தனது குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. 'உழைப்போம் உயர்வோம்' என்ற நம்பிக்கையில் ஓடோடிச்சென்று பிறருக்கு உதவிக்கொண்டே தனது பணிகளையும் நேர்மையுடன் செய்தார். இப்போது, உதவியாளராக (அசிஸ்டென்ட்) இருந்த ராமசாமி மேலாளர் பதவியை அலங்கரிக்கிறார்.
ஆனால், ராமசாமியின் நண்பர் கிருஷ்ணசாமி அலுவலகத்தில் தான் செய்யவேண்டிய வேலையைக்கூட மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு மகிழ்ச்சியோடு நாட்களை நகர்த்தினார்.
'இவரால் ஒரு பயனும் இல்லை' என நிர்வாகமும், நண்பர்களும், உறவினர்களும் கருதத் தொடங்கியதால் 'செல்லாக்காசு' நிலை அவருக்கு ஏற்பட்டது.
செய்யும் பணியில் அதிக ஈடுபாடுகொண்டு பணிபுரிபவர்கள் சில நல்ல குணங்களுடன் உலா வருகிறார்கள். உரிய முக்கியத்துவத்தையும் பெறுகிறார்கள்.
'காலம் தவறாமை' (Punctuality) என்னும் பண்பு இவர்களுக்குள் படிகிறது. அதிக ஈடுபாட்டுடன் பணிபுரிவதால் அலுவலகத்தில் மற்றவர்களோடு இனிமையாக இணைந்து பழகும் திறன் (Inter Personal Skill) வளர்கிறது. சிறந்த முறையில் பேசிப் பழகுவதால் தகவல் தொடர்புத் திறனும்(Communication Skill) அதிகரிக்கிறது. இந்தத் திறமைகளோடு நேர்மையும் இணைந்துவிட்டால், இவர் 'முக்கியமான நபர்' என்று பலராலும் பாராட்டப்படுகிறார்.
நீங்கள் முக்கியமான நபராக மாறுவதற்கு இதோ சில வழிமுறைகள்:
1. நீங்கள் எல்லாவற்றையும் பற்றிய முழுமையான தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள்.
2. உங்களுக்குத் தெரிந்த நல்ல தகவல்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
3. உங்கள் பள்ளி, கல்லூரி அல்லது பணிபுரியும் இடங்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் உங்கள் செயல்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
4. பிறரோடு கலந்துரையாட விரும்பி, மற்றவர்களை சந்தியுங்கள்.
5. உங்கள் குடும்பத்திற்கு உதவும் வகையில் பணி செய்ய விருப்பம் உள்ளவராக இருங்கள்.
6. எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும், அந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள்.
7. குழுக்களாக இணைந்து பழகும்போது உங்கள் பிரச்சினைகளை முன்வைத்து பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.
8. குழுவிலுள்ள மற்ற உறுப்பினர்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயற்சி செய்யுங்கள்.
9. உங்கள் பணியை சரியாக செய்துமுடிக்கப் பழகுங்கள்.
10. தானாக முன்வந்து மற்றவர்களுக்கு உதவுங்கள்.
11. உங்கள் நிறுவனம் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில் உங்கள் பணித்திட்டங்களை வகுத்துச் செயல்படுங்கள்.
இப்போது நீங்கள் முக்கியமானவராக மாறிவிடலாம்!
(சிகரம் நோக்கி முன்னேறுவோம்)
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|