உன்னை விருத்தியடையப்பண்ணுவார்
Fri Feb 12, 2016 9:03 am
கர்த்தர் (இயேசு) உன்னை விருத்தியடையப்பண்ணுவார். உபா. 13:18
தேவன் தமது சாயலாக மனிதர்களாகிய நம்மை உருவாக்கி நம்மை விருத்தியடைய பண்ண வேண்டும், பெருகச் செய்ய வேண்டும் என்று மிகவும் பிரியப்பட்டார். அந்த தேவன் இன்றும் நம்மை விருத்தியடையப் பண்ணவும், பெருகப் பண்ண செய்யவும் ஆவலோடு காத்திருக்கிறார்.
IIஇராஜாக்கள் 4ம் அதிகாரத்தில் ஒருகுடம் எண்ணெயை பெருகப்பண்ணி கொடுத்தவர், ஐந்து அப்பம், இரண்டு மீனையும் பெருகப்பண்ண செய்த இயேசு கிறிஸ்து உங்களது குடும்ப வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும், வியாபாரத்திலும், படிப்பிலும், உங்களிடத்தில் இருப்பதைக் கொண்டே உங்களுக்கு பெருக்கமான ஆசீர்வாதத்தை கொடுத்து விருத்தியடையப் பண்ணுவார்.
வேதத்திலே தேவன் யாரையெல்லாம் எந்த காரியங்களிலே விருத்தியடையப் பண்ணினார், ஏன் அவர்களை விருத்தியடையப் பண்ணினார் என்பதை சற்று தியானிப்போம்.
ஞானத்தில் விருத்தியடையப்பண்ணுவார்!
இந்த உலகத்திலே நாம் ஆசீர்வதிக்கப்பட்டு உயர்த்தப்பட வேண்டும் என்றால் நாம் செய்கிற ஒவ்வொரு காரியத்தையும் சரியாக செய்ய வேண்டும். அதற்கு ஞானம் நமக்கு மிக மிக அவசியம் தேவை. மேலும், நன்றாக படிக்க வேண்டுமென்றாலும், தொழில் அல்லது வியாபாரம் நல்ல முறையில் நடத்த வேண்டுமென்றாலும் குடும்பத்தை சிறப்பாக நடத்த வேண்டுமென்றாலும் மற்ற எந்தவொரு காரியங்களையும் வெற்றியாக செய்து முடிக்க வேண்டுமென்றாலும் ஞானம் நமக்கு மிக மிக அவசியம் தேவை.
இன்றைய நாட்களில் அநேகர் அநேக காரியங்களை செய்ய போதிய ஞானம் இல்லாதபடியால் படிப்பிலே, வியாபாரத்திலே, தொழிலிலே, தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் எல்லா காரியங்களிலும் தோல்வி அடைந்தவர்களாக காணப்படுகின்றார்கள்.
ஆகவே நாம் நமது வாழ்க்கையில் படிப்பில் இன்னும் மற்றும் எல்லா காரியங்களிலும் வெற்றி பெற வேண்டுமென்றால் நாம் ஞானத்தில் விருத்தியடைய வேண்டும். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்று நீதி. 1:7ல் வேதம் சொல்கிறது. கர்த்தருக்கு பயப்படுகிற பயம் நமக்கு இருந்தால்தான் நமக்கு ஞானம் உண்டாகும். லூக்கா 2:49ன் படி இயேசு தான் பிதாவால் அனுப்பபட்டவர் அவருக்கு பிரியமான காரியம் செய்ய வேண்டும் என்று தனது 12வது வயதிலேயே பிதாவுக்கு பயந்து ஜீவித்தப்படியால் லூக்கா 2:40ன் படி அவர் ஞானத்தினால் நிறைந்திருந்தார். அந்த இயேசு லூக்கா 2:52ன் படி ஞானத்தில் விருத்தியடைந்தார். இயேசு ஞானத்தில் விருத்தியடைய காரணம் அவர் பிதாவால் அனுப்பபட்டவராக இருந்தாலும், ஞானத்தில் நிரப்பப்பட்டிருந்தாலும் லூக்கா 2:51ன் படி அவர் பெற்றோருக்கு கீழ்படிந்திருந்தார்.
தேவகுமாரனே ஞானத்தில் நிரப்பப்பட்டு, ஞானத்தில் விருத்தியடைய பிதாவுக்கு பயப்படுகிற பயமும், பெற்றோருக்கு கீழ்படிகின்ற குணமும் அவசியம் தேவை என்றால், நாமும் ஞானத்தில் நிரப்பப்பட்டு, ஞானத்தில் விருத்தியடைய நமக்கு தேவபயமும், பெற்றோருக்கு கீழ்படிகிற குணமும் எவ்வளவு அவசியம் தேவை.
அப்படியென்றால் நாம் தேவனுக்கு பயப்படுகிற பயத்தோடுகூட பெற்றோர்களுக்கும் கீழ்படிந்திருக்கும் போதுதான் நமக்கு தேவஞானம் உண்டாகும். மேலும், கர்த்தர் நம்மை ஞானத்தில் விருத்தியடையப்பண்ணுவார்.
தொழிலில் விருத்தியடையப்பண்ணுவார்
ஞானத்தில் விருத்தியடையப்பண்ணிய தேவன் உங்களை அந்த ஞானத்தைக் கொண்டே உங்களுடைய தொழில் வியாபாரம், வேலை, படிப்பு போன்ற எல்லா காரியங்களிலும் விருத்தியடைய பண்ணுவார். யாக்கோபைப் பாருங்கள். ஆதி 30:43ல்“இவ்விதமாய் அந்தப் புருஷன் மிகவும் விருத்தியடைந்தான்” என்று கூறப்பட்டுள்ளது. எவ்விதமாய் விருத்தியடைந்தான் என்றால், ஆதி 30:25முதல் 43வரை உள்ள வசனங்களை நாம் வாசித்துப் பார்ப்போமென்றால் கர்த்தர் அவனுக்கு கொடுத்த ஞானத்தினால் தனது மாமனாரோடு ஒரு ஒப்பந்தம் பண்ணிக் கொண்டு ஆடுகள் மேய்க்கும் போது ஞானமாய் செயல்பட்டு தன்னுடைய தொழிலிலே விருத்தியடைந்தான்.
நாமும் இந்த நாட்களில் சொல்லலாம் நானும் ஞானமாய் என்னுடைய வேலைகளையும், தொழில்களையும் செய்கிறேனே, ஆனாலும் எனக்கு விருத்தியில்லை என்று ஒரே விரக்தியோடு இருக்கலாம். ஆனால் பாருங்கள் யாக்கோபு கர்த்தர் கொடுத்த ஞானத்தினால் தொழிலை செய்யும் போது ஏன் விருத்தியடைந்தான். அதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. வாசிப்போம் ஆதி. 28:20-22ல் “தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்கு தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லி பொருந்தனை பண்ணிக்கொண்டான். யாக்கோபு முதலாவது தேவனோடு பொருந்தனை பண்ணிக் கொண்ட படியால் அவன் குடும்பமும், தொழிலும் விருத்தியடைந்தது.
நமது ஐக்கியத்தை சேர்ந்த சகோதரர் T. கிறிஸ்டோபர் கடந்த ஆண்டு நமது வாக்குத்தத்த கூட்டத்தில் இனி எனது வாழ்க்கையில் தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களையெல்லாம் விட்டுவிட்டு தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழ்வேன் என்று பொருந்தனை பண்ணி தீர்மானம் எடுத்த போது கர்த்தர் அவரை அந்த வேளையில் நிலைத்து நிற்க உதவி செய்து வருகிறார். அது மாத்திரமல்ல, அவரது குடும்பமும், தொழிலும் விருத்தியடையவும் செய்து வருகின்றார். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
அடுத்து யாக்கோபு எப்பொழுதும் தேவனையே உயர்த்தி அவருக்கே மகிமை செலுத்தினான். ஆதி. 30:30 ல் “கர்த்தர் உம்மை ஆசீர்வதித்தார்.” என்றும் ஆதி. 31:9ல் “தேவன் எனக்குத் தந்தார்” என்றும் கூறினாரேயொழிய என்னுடைய திறமையினாலே, அல்லது அதிகமாய் நான் பாடுபட்டதினாலே, வேலை செய்ததினாலே என்று கூறாமல் கர்த்தரையே மகிமைப்படுத்தினான்.
ஆகையால், கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, சகோதர, சகோதரிகளே நீங்களும் உங்கள் தொழிலில் விருத்தியடைய வேண்டுமென்றால், கர்த்தருக்கென்று உண்மையாய் ஊழியம் செய்கிற ஊழியங்களுக்கு கர்த்தர் கொடுக்கும் எல்லாவற்றிலும் தசம பாகம் கொடுப்பேன் என்று யாக்கோபை போல பொருந்தனை பண்ணி அவ்விதமாய் கர்த்தர் கொடுக்கும் போதும், கர்த்தர் தான் எனக்கு ஆசீர்வாதத்தை கொடுத்து இருக்கிறார் என்று அவரையே உயர்த்தும் போதும், நிச்சயமாக கர்த்தர் இந்த வருடத்திலே உங்கள் தொழில் மற்றும் சகல காரியங்களிலும் உங்களை விருத்தியடையப்பண்ணுவார்.
வாழ்க்கையிலே விருத்தியடையப்பண்ணுவார்.
தாவீது வாழ்க்கையில் கர்த்தர் அவரை விருத்தியடையப்பண்ணினார். 2 சாமு. 5:10 மற்றும் 1நாளா. 11:9 ஆகிய வசனங்களை நாம் வாசித்துப் பார்ப்போமென்றால், “தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. தாவீது தன்னுடைய வாழ்க்கையில் விருத்தியடைய காரணம் என்ன? கர்த்தர் அவனோடே கூட இருந்தார். கர்த்தர் ஏன் அவரோடு கூட இருந்தார். காரணம் அப். 13:22ன் படி “தாவீது கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்றவனாக காணப்பட்டார்.“ நாமும் கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்றவர்களாக மாறும்போது நம்முடைய வாழ்க்கையையும் கர்த்தர் விருத்தியடையப்பண்ணுவார்.
தாவீது தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாக காணப்பட காரணம் என்ன? சங். 16:8ல் “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்.” என்று தாவீது அனுபவத்தோடு சொல்கிறார். தாவீது தன்னுடைய வாழ்க்கையில் நெருக்கப்பட்ட போதெல்லாம் கர்த்தரையே நோக்கி கூப்பிட்டு அவரையே சார்ந்து இருந்தார்.
1சாமுவேல் 30ம் அதிகாரத்தை வாசித்துப் பார்த்தால் தாவீது தனது மனைவி, பிள்ளைகள், மற்றும் எல்லா உடமைகளும் அந்நியர்களால் கொள்ளையாடப்பட்டு போனபோது அவர் என்ன செய்தார்? தான் அடைக்கலமாக இருந்த ராஜாவிடத்திலே போய் முறையிடவில்லை, அல்லது மற்ற தீர்க்கதரிசியிடம் போய் குறி கேட்கவில்லை. ஆனால் அவரோ, 1சாமு. 30:8ன் படி கர்த்தருடைய சமூகத்தில் போய் விழுந்து கிடந்து கர்த்தருடைய ஆலோசனையை கேட்டார். கர்த்தர் ஆலோசனையை கொடுத்தார். அதன்படி தாவீது செய்தார். ஆகவேதான் சங். 18:6, 118:5 ஆகிய வசனங்களில் தாவீது தனது அனுபவத்தோடு “ நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன், கர்த்தர் என்னை கேட்டருளி விசாலத்திலே வைத்தார்” என்று கூறினார்.
ஆகவே, கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நீ்ங்களும் உங்களுடைய வாழ்க்கையிலே நெருக்கங்கள், தாங்கி கொள்ள முடியாத, ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலைகள் வரும்போதும் எந்த தீர்க்கதரிசிகளையும் நாடி நாம் குறி கேட்க செல்வது போல் செல்லாமல் தாவீதைப் போல கர்த்தரிடத்தில் முறையிடுவோம். அவர் நம்மை விசாலத்திலே வைப்பார்.
இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் தான் ஜெபிக்காமல், இஷ்டம் போல வாழ்க்கை வாழ்ந்து கொண்டு அநேக தீர்க்கதரிசிகளிடம் குறி கேட்க செல்வது போல செல்லுகிறார்கள். அந்த தீர்க்கதரிசிகளும் ஏரேமியா 23:16,17,32 வசனங்களில் கூறியுள்ளது போல தீ்ர்க்கதரிசனங்களை சொல்லி பணத்தை சம்பாதிக்கிறார்கள். மீண்டும் அந்த விசுவாசி அந்த தீர்க்கதரிசிக்கு பணம் கொடுக்க இயலவில்லை அல்லது அவரிடம் சென்று ஜெபிக்க போகவில்லை என்றால்,உடனே சாபம் போட்டு அவர்களை சபித்து விடுகிறார்கள்.
ஆகவே, இந்த நிலை மாற்றப்பட்டு, தாவீதைப் போல எப்பொழுதும் நெருக்கப்படுகிற வேளைகளிலும் குறி கேட்க செல்லாமல் தேவனையே நோக்கி சங். 121:1ன் படி, “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராய் என் கண்களை ஏறெடுக்கிறேன்” என்று ஏறெடுத்தால் கர்த்தர் உங்களுக்கு பரத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, உங்கள் மேல் தன் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லி, நீங்கள் நடக்க வேண்டிய வழியிலே உங்களை கரம்பிடித்து வழிநடத்துவார். நெருக்கமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிற உங்களை நெருக்கத்திலிருந்து விடுவித்து தாவீதைப்போல உங்கள் வாழ்க்கையையும் விருத்தியடையப் பண்ணுவார்.
ஊழியத்திலே விருத்தியடையப்பண்ணுவார்
அப். 19:20ல் “இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்தது.” என்று வேதம் சொல்லுகிறது. ஏன் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்தது. அப். 19:8ல் பவுல் தைரியமாய் பிரசங்கித்தார், கிறிஸ்துவுக்கென்று வைராக்கியமாய் ஊழியம் செய்தார். ஆவியிலே வைராக்கியம் கொண்டார், கிறிஸ்துவுக்காக எதையும் சகிக்கவும், எதையும் இழக்கவும், எல்லாவற்றையும் நஷ்டமென்று விடவும், குப்பையுமாக எண்ணவும் தன்னை அர்ப்பணித்தார்.
ஆகவேதான் அப். 19:11,12ன் படி “கர்த்தர் பவுலின் கைகளினாலே விசேஷித்த அற்புதங்களைச் செய்தார்.” அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து வியாதியஸ்தர்கள் மேல் போட்ட போது வியாதி நீங்கியது, பொல்லாத ஆவிகள் நீ்ங்கியது, அப்போது கர்த்தருடைய வசனம் பலமாய் தேசமெங்கும் விருத்தியடைந்தது.
ஆகவே பவுலைப்போல நாமும் கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டு குப்பையுமாக எண்ணி, கிறிஸ்துவுக்காக நாமும் பவுலைப் போல வைராக்கியமாய் ஊழியத்திலே ஈடுபடும்போது, நிச்சயமாக நமது தேசத்திலும், கர்த்தர் தமது வசனத்தை விருத்திடையப் பண்ணுவார்.
மாத்திரமல்ல. அப். 19:13 முதல் 19வரை உள்ள வசனம் வரையிலும் கூறப்பட்டுள்ளது போல மந்திரவாதிகளும், மாயவித்தைக்காரர்களும், யாகம் செய்பவர்களும், குறி சொல்கிறவர்களும். பொல்லாத ஆவி பிடித்தவர்களை தங்களுடைய மந்திரத்தினால் விரட்டமுடியாமல், கடைசியில் இயேசுவின் நாமத்தை சொல்ல துணிந்தவர்களை அந்த பொல்லாத ஆவிகள், அந்த மந்திரவாதிகளின் மேல் பாய்ந்து அவர்களை ஓட, ஓட விரட்டியபோது அவர்கள் நிர்வாணிகளும், காயப்பட்டவர்களுமாகி ஓடினார்கள். நமது தேசத்திலும் பொல்லாத ஆவிகளை உபயோகப்படுத்தி, நமது தேசத்தில் சாபத்தைக் கொண்டு வந்து கொண்டிருக்கிற எல்லா மந்திரவாதிகளையும், மற்ற தலைவர்களையும் அவர்கள் உபயோகப்படுத்துகின்ற அந்த ஆவிகளே அவர்களை ஓட, ஓட விரட்டப்போகின்றது.
அப்போதுதான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் அவருக்கென்று உண்மையாய், வைராக்கியமாய், ஊழியம் செய்கிற ஊழியக்காரர்கள் மூலம் மகிமைப்பட்டு, வேதவசனம் நமது தேசத்திலே விருத்தியடையப் போகின்றது.
அப். 19:19ன்படி,எல்லா மாயவித்தைக்காரர்களும், குறி சொல்கிறவர்களும், யாகம் செய்கிறவர்களும், கிறிஸ்து தான் மெய்யான தேவன் என்று அறிக்கை செய்து தங்களது எல்லா பொருட்களையும் கொண்டு வந்து சுட்டெரிக்கப் போகின்றார்கள்.
இன்று கிறிஸ்துவின் ஊழியத்திற்கு விரோதமாய் எழும்பி இருக்கின்ற எல்லா மனிதர்களும் கிறிஸ்துவே தேவன் என்று அறிந்து கொள்ள போகின்றார்கள். மேலும் கிறிஸ்துவின் கட்டளைக்கு விரோதமாய் எழும்பி பலவித சட்டங்களை கொண்டு வந்தவர்கள், அவர்களே கலங்கிப் போய் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து கலக்கமடைய போகின்றார்கள். அவர்களே அந்த சட்டங்களை கொண்டு வந்து சுட்டெரிக்கப் போகின்றார்கள். அல்லேலூயா!
கர்த்தருடைய வசனமோ தேசத்தில் பலமாய் விருத்தியடையப் போகின்றது. எல்லாருடைய ஊழியங்களும் விருத்தியடையப் போகின்றது. அல்லேலூயா!
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
இவ்வளவு நேரமும் கர்த்தர் நம்மை ஞானத்திலும், தொழிலிலும், வாழ்க்கையிலும், ஊழியத்திலும் விருத்தியடையப்பண்ணுவார் என்பதை தெளிவாகப் பார்த்தோம். இந்த விருத்தியை பெற்றுக் கொள்வதற்கு வேண்டிய தீர்மானங்களை இப்பொழுது நாம் எடுத்து இயேசு கிறிஸ்துவிடம் ஜெபிக்க போகிறோம்.
ஞானத்தில் விருத்தியடைய -கர்த்தருக்கு பயப்படுகிற பயம் தேவை.
தொழிலில் விருத்தியடைய- கர்த்தருக்கென்று பொருத்தனை செய்ய வேண்டும்.
வாழ்க்கையில் விருத்தியடைய- எந்த சூழ்நிலையிலும் இயேசுவையே சார்ந்து அவரையே நோக்கி பார்க்க வேண்டும்.
ஊழியத்தில் விருத்தியடைய-முழு அர்ப்பணி்ப்போடு, வைராக்கியத்தோடு, தைரியமாய், உண்மையாய் ஊழியம் செய்ய வேண்டும்.
மேல சொன்ன தீர்மானங்களை இப்போது எடுத்து, இயேசுவே என்னையும் சகல காரியத்திலும் விருத்தியடையப் பண்ணும் என்று ஜெபிப்பீர்களா? நானும் உங்களுக்காக ஜெபிக்கிறேன். சேர்ந்து ஜெபிப்போமா?
ஜெபம்
அன்புள்ள இயேசப்பா நீர் எங்களுக்கு கொடுத்துள்ள வாக்குத்தத்ததிற்காக ஸ்தோத்திரம்! இந்த வாக்குத்தத்தத்தின் படி என்னுடைய சகல காரியத்திலும் விருத்தியடையப் பண்ண இப்போது என்னை உம்முடைய கரத்திலே ஒப்புக் கொடுத்து ஜெபிக்கிறேன். உங்களுக்கு பயப்படுகிற பயம் எப்பொழுதும் என் இருதயத்தில் இருக்க வேண்டும். உமக்கும், உமது ஊழியங்களுக்கும் கொடுப்பேன் என்ற பொருத்தனையும் இந்த வேளையிலே எடுக்கிறேன். மேலும் எப்போதும், எந்த நெருக்கத்திலும் தீர்க்கதரிசிகளை நாடி குறி கேட்க ஓடாமல் உமது பாதத்தையே பற்றிக் கொள்ள ஒப்புக் கொடுக்கிறேன். மேலும், என்னால் முடிந்த அளவுக்கு ஊழியம் செய்யவும் என்னை அர்ப்பணிக்கிறேன்.
எனது அர்ப்பணிப்பை ஏற்றுக்கொண்டு என்னையும், என்னுடைய குடும்பத்தையும், சகல காரியங்களிலும் விருத்தியடைய செய்யும்படி இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறேன் பிதாவே. ஆமென்.
அர்ப்பணித்திருக்கிற உங்களை இயேசு சகல காரியத்திலும் விருத்தியடையப்பண்ணுவார். அர்ப்பணித்த அர்ப்பணிப்பிலே நிலைத்திருங்கள். இயேசுவையே நோக்கி இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். விட வேண்டிய காரியங்களையெல்லாம் விட்டுவிடுங்கள். கர்த்தர் உங்களை விருத்தியடையப்பண்ணுவார். ஆமென்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|