** உயர் ரத்த அழுத்தம் யாருக்கு வரும்?
Tue Feb 02, 2016 4:02 am
#doctorvikatan #டாக்டர்விகடன்
யாருக்கு வேண்டுமானாலும் இந்தப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு உண்டு. எனினும், சர்க்கரை நோயாளிகள், புகைபிடிப்பவர்கள், சிறுநீரகத் தொந்தரவு உள்ளவர்கள், இதய நோயாளிகள், உடல்பருமன் உடையவர்கள், கொலஸ்ட்ரால் பிரச்னை இருப்பவர்கள், மது அருந்துபவர்களுக்கும், சிலருக்கு மரபுவழியாகவும் உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
** கோபப்பட்டால், உயர் ரத்த அழுத்தம் வருமா?
கோபம் காரணமாக நேரடியாக உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான ஆதாரம் கிடையாது. ஆனால், மன அழுத்தம் காரணமாக உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். மனஉளைச்சல் மிகுந்த வேலை செய்பவர்கள், மன அழுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உயர் ரத்த அழுத்தம் எளிதில் வந்துவிடுகிறது. உயர் ரத்த அழுத்தப் பிரச்னைக்கு அறிகுறிகளே தெரியாது. பரிசோதனை செய்தால் மட்டுமே தெரியும். தலைசுற்றல், மயக்கம் போன்றவை உயர் ரத்த அழுத்தம் வந்த பின்னர் வரக்கூடிய அறிகுறிகள்.
** குறைந்த ரத்த அழுத்தம் ஒரு நோயா?
‘லோ பி.பி’ எனப் பேச்சுவழக்கில் சொல்லப்படும் குறைந்த ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. மனிதர்கள் எல்லோருக்கு ஒரேவிதமான ரத்த அழுத்தம் இருப்பது கிடையாது. பலருக்கு இயல்பாகவே 100/60 என்ற அளவில்கூட ரத்த அழுத்தம் இருக்கும். இதனைக் குறைந்த ரத்த அழுத்த நோயாகக் கருதத் தேவை இல்லை. நீண்ட காலம் சீராக இருக்கும் ரத்த அழுத்தம் திடீரென அடிக்கடி குறைந்தாலோ, அதிகரித்தாலோ நம் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருக்கிறது என அறிய முடியும். எப்போதோ ஒரு முறை பரிசோதித்துவிட்டு, குறைந்த அழுத்தம் எனத் தாங்களாகவே முடிவு செய்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு, அவர்களின் இயல்பான ரத்த அழுத்த அளவைவிட திடீரென சில நேரங்களில் மட்டும் ரத்த அழுத்தம் குறைகிறது எனில், அதற்கு சிகிச்சைகள் உள்ளன.
பரிசோதனைகள்
ரத்த அழுத்தம் ஒரே நாளில் வந்துவிடுவது இல்லை. ஒருமுறை பரிசோதித்து, ஒருவருக்கு ரத்த அழுத்தம் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. 30 வயதைக் கடந்த அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். ரத்த அழுத்தப் பரிசோதனை என்பது, சாதாரணமான பரிசோதனைதான்.
பரிசோதனையில் உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவசியம் இல்லாதவர்களைத் தவிர மற்றவர்கள் மறுநாளே மாத்திரை சாப்பிடத் தொடங்க வேண்டும் என்பது இல்லை. தொடர் பரிசோதனை செய்வது அவசியம். தொடர்ந்து ஏழு நாட்களுக்கு, காலை மற்றும் மாலை ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். மொத்தமாக, 14 முறை செய்யபடும் இந்தப் பரிசோதனையில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான முடிவுகளில் உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு வாழ்வியல்முறை மாற்றம் மூலமாக ரத்த அழுத்தம் குறைகிறதா என்பதைப் பரிசோதிக்கலாம், அப்படியும் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படவில்லை என்றால், உயர் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரை, மருந்துகளைச் சாப்பிடுவது அவசியம்.
- பு.விவேக் ஆனந்த்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|