மேற்படிப்பு ஆலோசனைகள்
Tue May 19, 2015 7:47 pm
தற்போது எதிர்காலப் படிப்பு, வேலை, தொழில் பற்றிய ஒரு முடிவை எடுத்தே ஆக வேண்டியுள்ளது. தள்ளிப்போட முடியாத சூழ்நிலை. முடிவு ஒன்றை எடுக்கும்போது மாணாக்கரின் விருப்பம், அவர் எதில் மிக நன்றாகச் படிக்கிறார், பெற்றோர் விருப்பம் ஆகிய காரணிகள் அடிப்படையானவை. எதிர்பார்க்கும் மதிப்பெண் என்பதும் இதில் அடிப்படையானது என்றாலும் இது முடிந்துவிட்ட விஷயம் என்பதையும் இதனையும் மிஞ்சிய விஷயங்கள் உள்ளன என்பதையும் மறக்கக்கூடாது. உங்கள் விருப்பத்திறன் (Aptitude) உங்கள் இதர வலுவான அம்சங்களில் முழு கவனம் செலுத்த வேண்டும். இந்த இரண்டு விஷயங்களை அறிவதில் மாணாக்கரைப் போன்றே பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் உள்ளதால் இந்த முத்தரப்பு கூட்டணியில் ஆலோசித்து முடிவுகளை எடுப்பது அவசியம்.
அப்படியும் சிக்கல் நீடிக்கிறது குழப்பம் தொடருகிறது. என்ன படிப்பு படிப்பது என்பது தெளிவாகவில்லை எனில், தொழில் ஆலோசகர்களை (Career Councilors) கலந்து ஆலோசிக்கலாம். அல்லது நல்ல தரமான விருப்பத்திறனறி தேர்வினை (Aptitude Test) எழுதித் தெரிந்து தெளிவு படுத்திக் கொள்ளலாம்.
மாணாக்கரின் விருப்பத்திறன் சுய மதிப்பீடு, பெற்றோர் ஆசிரியர் ஆலோசனை, நிபுணர் ஆலோசனை ஆகியவற்றின் அடிப்படையில் கிடைத்த மேற்படிப்பு வகுப்புகளை பட்டியலிட்டுக் கொள்ள வேண்டும். பின்னால், ஒவ்வொரு படிப்பின் நன்மைகள்- தீமைகள், வாய்ப்புகள், அதன் எதிர்காலத் தேவைத்துறைகள் ஆகிய அனைத்தையும் சேர்த்தே பட்டியலிட வேண்டும். எல்லா வற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட மாணாக்கர் ""இந்தப் படிப்பை நான் வெற்றிகரமாகச் சமாளிக்க முடியுமா? என் எதிர்கால வாழ்வு முழுமைக்கும் இப்படிப்பு ஒத்துவருமா?'' என்று வினா எழுப்பி விடை காணவேண்டும். இதற்கு பிறகுதான் இந்தப் படிப்பு சொல்லிக் கொடுக்கும் கல்வி நிறுவனங்கள் பட்டியல் தயாரிக்க வேண்டும். இந்த நிறுவனங்களின் மாணாக்கர் சேர்க்கை தகுதி மற்றும் நெறிமுறைகள் பற்றி அறியவேண்டும். இந்தத் தகுதிகளில் ஏதேனும் குறைவாக இருந்தால் அதனைச் சரிசெய்யும் வழிவகைகள் குறித்து ஆராய வேண்டும். இந்த நடைமுறை சிக்கலானதுதான், பெற்றோர், உடன் பயின்ற நண்பர்கள் நிர்ப்பந்தங்கள் அநேகம் இருக்கும். எல்லா வற்றையும் மிஞ்சி இலக்கே கண்ணாகக் கொண்டு செயல் படுவதுதான் ஒரேவழி.
இத்தனை படிகளுடன் விரிவாக, முறையாக ஏன் திட்டமிட வேண்டும்? இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக, நீங்கள் தேடும் வேலை, விரும்பும் தொழில் ஆகிய எதிலுமே இன்றைய நிலையில் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த போட்டிகளிடையே தகுதியுள்ளவரே நிலைத்திருக்க முடியும் என்கிற பரிணாம விதி செயல்படுவது கண்கூடு. இரண்டாவதாக, தற்போதைய தகவல் தொழில்நுட்பத்தால் ஏற்பட்டுள்ள புதிய மேம்பாடுகள், உலகமயமாக்கல் பின்னணியில் வாய்ப்புகள் மிக அநேகம் என்பதால் இந்த வாய்ப்புகள் அனைத்தையும் ஆராயவேண்டியுள்ளது. தற்போது சூழலும் காலமும் துறை நிபுணத்துவம் (Age of Specialisation) அடிப்படையில் ஆனது என்பதை மறந்துவிடக்கூடாது.
பாடத்தேர்வு
இந்த காரணங்களால்தான் முன்பு குறிப்பிட்டது போல மேற்படிப்பு குறித்த முடிவுகளை எடுக்கும் 8 அல்லது 9 -ஆம் வகுப்பே சிறந்தது. வயது 13-க்கு மேல் 15-க்குள் இருக்கும் இந்த நிலைதான் தெளிவு செய்து மனதில் பதித்துச் செயல்பட சிறந்தது. எதிர்கால வேலை, தொழிலை வடிவமைக்க ஏற்ற பருவம் அது. மேலும் 12-ஆம் வகுப்பில் ஏற்கனவே ஏதாவது ஒரு பகுதி தெரிவு முடிந்துவிடுகிறது. கணிதம், அறிவியல் பாடங்கள் பயிலுவோர், கலை வணிகவியலுக்கும், கலைப் பாடம், வணிகவியல் பயிலுவோர் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பத்துக்கும் செல்ல இயலாது.
மேற்படிப்பு
இவ்வாறு மேற்படிப்பு பாடத்தை தெரிவு செய்வதற்கு முன்னதாக இரண்டு விஷயங்கள் குறித்து நன்கு கவனிக்க வேண்டும். குடும்பச் சூழ்நிலைக் காரணமாக மாணாக்கர் உடனடியாக வேலைப் பார்த்து சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதா? அடுத்து மாணாக்கர் தெரிவு செய்யும் பாடவகுப்பினை படித்து முடிக்கும்வரை ஏற்படும் கல்வி மற்றும் அதுசார்ந்த செலவினங்களைச் சமாளிக்க குடும்ப நிதிநிலைமை இடம் தருகிறதா? இவை தெரிவு செய்யப்பட்டுவிட்டால் படிப்புத் தெரிவும் எளிதாகிவிடும். உதாரணமாக 12-ஆம் வகுப்புக்குப் பின் வேலைக்கு போயே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை இருந்தால் அவர் மேற்படிப்புக்கு தொலைநிலைக் கல்வி முறை (Distance Education) மூலம் கற்றுக் கொடுக்கப்படும் தமக்கு உகந்த ஏதாவது பாடத்தைத் தெரிவுசெய்து கொள்ளலாம் அல்லவா? இதற்கு அநேக வாய்ப்புகள் உள்ளன. விரும்பியப் பாடத்தை விரும்பும் காலகட்டத்தில் விரும்பும் வேகத்தில் படிக்கும் வகையிலேயே தொலைநிலைக் கல்வி பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பாடங்களின் சாரம் நேரடிக் கல்லூரிக் கல்வியின் தரத்துக்கு குறைவின்றி, அவற்றை போன்றே அல்லது அவற்றைவிட ஆர்வமூட்டும் வகையில் அமைத்து வழங்கப்படுகின்றன.
உதவித்தொகை
அடுத்து குடும்ப நிதி நிலைமை. தற்போது கல்வித் துறையில் தனியார் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளது. அதனைப் பரவலாக்கவும், அனைத்து தரப்பு மக்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையிலும், போட்டி காரணமாக தரம் உயர்ந்ததாகவும் இருந்தாலும் தனியார் நிறுவனங்களின் கல்விக் கட்டணங்கள் மிக அதிகமாகவே உள்ளன. அரசு மான்யம் ஏதும் இல்லாதா நிலையிலும், கல்வி சிறிது சிறிதாக வியாபாரமாக மாறிவரும் சூழலிலும் இது தவிர்க்க முடியாததாகவே தோன்றுகிறது. எனவே எத்தனை ஆண்டு படிப்பு, ஆண்டுக் கல்வி கட்டணம் எவ்வளவு, கல்வி சார்ந்த செலவினம் என்ன என்றெல்லாம் கணக்கெடுத்துதான் கல்விச் சாகரத்தில் இறங்கியாக வேண்டும். குடும்ப நிதி போக, வங்கிகளில் கல்விக்கடன், கல்வி உதவித்தொகைகள், புத்தக உதவி, இறுதியாண்டு கல்வித் திட்ட உதவிகள் போன்றவற்றைக் கண்டறிந்து, விண்ணப்பித்துப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த உதவிகளும் உதவித் தொகைகளும், தனியார் கல்லூரிகளில் உள்ள "அரசு இடங்கள்' தவிர "நிர்வாக இடங்களுக்கும்' ஒரே அளவாகத்தான் இருக்கும். வங்கிகள் வழங்கும் கல்விக் கடன் மட்டும் கல்விக் கட்டணங்களுக்கு ஏற்ப வெவ்வேறாக இருக்கும். இவற்றை எல்லாம் கவனித்து படிப்புக்கான செலவின பட்ஜெட் தயாரிக்கப்பட வேண்டும்.
நாட்டின் பொற்காலம்
பொருளில்லார் நிலைமை இவ்வாறு இருக்க பொருள் படைத்தோருக்கு தனியார் பெருமளவு பங்கேற்றுள்ள கல்வி உலகில் சிவப்பு கம்பள வரவேற்பு உள்ளது நிதர்சனமான நிலைமை. பொருள் படைத்தோர் எந்தப் படிப்பினையும் எந்தக் கல்லூரியிலும் எப்போது வேண்டுமானாலும் சேர்ந்து படிக்கும் வகையில் அமைந்துள்ளது. தற்போது தனியார் கல்வி உலகு இத்தகைய கல்லூரிகளின் நிர்வாக இடங்களுக்கு பெரிய தொகைகளை நன்கொடையாகப் பெற்று குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் மட்டுமே இருந்தால்கூட மாணாக்கர் சேர்க்கும் நிலை உள்ளது. இது குறித்து குறைசொல்ல ஏதுமில்லை என்றாலும் மாணாக்கர் தங்கள் குடும்ப நிதிநிலைமை எப்படி இருந்தாலும் வெகுசில மேலைநாடுகளில் உள்ளதுபோல தாங்கள் விரும்பும் பாட வகுப்புகளில் சேர்ந்து பயிலும் நிலை இந்தியாவில் வரவேண்டும். அதுவே நாட்டின் பொற்காலமாக இருக்கும்.
+2 மாணாக்கருக்கான படிப்புகள்
நாட்டின் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுக்கான சபை (ICSE) மற்றும் பல்வேறு மாநிலக் கல்வி வாரியங்களின் மேல்நிலைப் பாடத்திட்டத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன.
1. அறிவியல் பிரிவு
2. கலை மற்றும் மனித இயல் பாடங்கள் பிரிவு
3. வர்த்தகப் பிரிவு
இவை தவிர, தொழிற்கல்வி (Vocational Stream) பிரிவும் உள்ளது.
அறிவியல் பிரிவு படித்த மாணாக்கர் சிவில், எந்திரவியல், மின்சாரவியல், தகவல் தொழில்நுட்பம், தொலைதொடர்பு தொழில்நுட்பம், கணினி பொறியியல், உலோகப் பிரித்தெடுப்பு, வேதிப்பொறியியல், மோட்டார் வாகனத் தொழில்நுட்பம், விண்ணூர்தித் தொழில்நுட்பம், கப்பல் தொழில்நுட்பம், அச்சுத் தொழில்நுட்பம், தோல் தொழில் நுட்பம், உற்பத்தி தொழில்நுட்பம், கட்டடக்கலை போன்ற பொறியியல், தொழிற்நுட்ப பாட வகுப்புகளில் சேரத் தகுதியுள்ளவர்கள். இவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை மேல்நிலைக் கல்வியின் போது கற்றுத் தேறியிருக்க வேண்டும்.
கணிதம் இல்லாமலேயே வேதியியல், இயற்பியல், உயிரியல் பாடங்கள் கற்றுத் தேறிய +2 மாணாக்கருக்கு மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், சித்தா (அ) ஆயுர்வேத மருத்துவம் போன்றவற்றில் சேரத்தகுதியுடைவர்கள். இவற்றிற்கு கடும்போட்டி இருப்பதால் இந்தத் தகுதியுடைய மதிப்பெண் சற்று குறைவாகப் பெற்ற மாணாக்கர் நல்ல வாய்ப்புகள் உள்ள இணை மருத்துவ படிப்புகளில் சேரத் தகுதி உடையவர்கள். B.Pharm, BMlLT, Nursing, Physiotherapy, Occupational Therapy, Physician Assistant, Nuclear Medicine Therapy,Opthalmic Assistant, Dental Assistant போன்ற பல பட்டப் படிப்பு வகுப்புகள் உள்ளன.
வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், மீன் வளத்துறை போன்றவை சார்ந்த தொழில் பட்ட படிப்பு களுக்கும் அறிவியல் பாடப்பிரிவு மாணாக்கரே சேர்த்துக் கொள்ளப்படுவர். பல்கலைக்கழகப் பட்டப் படிப்புகளை தவிர, அவற்றுக்கு வெளியே செவிலியர் பட்டயப் படிப்பு, மருத்துவ சோதனைகள் பட்டயப் படிப்பு, கதிரியக்க தொழில்நுட்பாளர் போன்ற வகுப்புகளிலும் அறிவியல் பிரிவு மாணாக்கரே சேரமுடியும்.
கலை மற்றும் மனிதவியல் பாடங்களில் 12-ஆம் வகுப்பு தேறியவர்கள் சுற்றுலா, விளம்பரம், இதழியல், செயற் கலைகள், மொழிசார்ந்த துறைகள், நுண்கலைகள் ஆகிய வற்றில் சேர்ந்து பட்டம் பெற்று தொழில் செய்ய இயலும்.
வர்த்தகப் பாடப்பிரிவில் பயின்றோருக்கென கம்பெனி செயலர், பட்டியல் கணக்குத் தணிக்கையாளர், உற்பத்தி செலவு கணிப்பு கணக்காளர், வர்த்தக மேலாண்மை போன்ற பாடங்களைத் தெரிவு செய்து படிக்கலாம்.
தொழிற்பாடங்களில் நாட்டம் குறைந்தவர்களும், இவற்றில் சேருவதற்கான மதிப்பெண் குறைந்தவர்களும் வளமையான B.A., B.Sc.,B.com., பட்டப்படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். இந்தப் பட்டப்படிப்புகள் ஒவ்வொன்றிலும் பல்வேறு பாடங்கள் முக்கிய பாடங்களாகப் போதிக்கப்படுகின்றன. சென்னைப் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற B.A., பட்டப் பிரிவில் குறைந்தது 36 பாடங்களும்,B.Sc., யில் 85 பாடங்களும், B.com.,-ல் 3 பாடங்களும் முக்கியப் பாடங்களாக இடம்பெற்றுள்ளன.
இந்தப் பட்டங்கள் எதுவாயினும் பெற்றபிறகு அதற்கென அநேக வேலைவாய்ப்புகள் உள்ளன. அரசுப் பணிகள், அரசுசார் அமைப்புகள், நிறுவனப் பணிகள், தனியார் நிறுவனப் பணிகள், நிர்வாக மற்றும் அமைச்சுப் பணிகள் இவர்களுக்கானதே. மேலும் IAS, IFS போன்ற சிவில், அல்லாத பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் இந்த பட்டப்படிப்புகளின் பாடங்கள் அதிகம் உள்ளன. மாநில சிவில் மற்றும் உயர் பணி தேர்வுகளிலும் இப்பட்டப்படிப்பு பாடங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு பட்டப்படிப்புடன் கல்வியியல் பட்டமும் படிக்க வேண்டும்.
பட்டமேற்படிப்பு
இதுபோக பட்டப்படிப்பைத் தொடர்ந்து பட்டமேற்படிப்பும், M.Phil., Ph.D. போன்ற படிப்புகளும் உள்ளன. பட்ட மேற்படிப்பு இரண்டு ஆண்டுகளும் ஆராய்ச்சி படிப்பு பொதுவாக 4 ஆண்டுகள் கொண்டதாக இருக்கும். இவற்றை முடித்தவர்களின் வேலைவாய்ப்புகள் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் அநேகம் உள்ளன. முன்னே குறிப்பிட்டப்படி இன்றைய உலகம் நிபுணத்துவ உலகம் (World of Specialisation) எனவே குறிப்பிட்ட பாடத்தில் பட்டம், முதுகலை பட்டம், ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். இ.ஊக்., பட்டம் பெற்ற முதுகலைப் பட்டதாரிகள் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணிகளைப் பெறலாம். இத்தகைய வளமான பட்டப்படிப்பு பாடங்கள் தவிர தொழில் அடிப்படை பட்டப்படிப்புகளும் உள்ளன. உணவு மற்றும் விருந்தோம்பல், சுற்றுலா, வர்த்தக நிர்வாகம், திரைப்பட தொழில்நுட்பம், அச்சுத்தொழில் நுட்பம், நூலகம் மற்றும் தகவல் அறிவியல், இதழியல் மற்றும் வெகுஜன தொலைத் தொடர்பு விளம்பரம், படத் தொலைத் தொடர்பு (Visual Communication) போன்ற பாடங்களில் பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் பல பாடங்களில் பட்டயப்படிப்புகளும் உள்ளன.
10-ஆம் வகுப்பு தேறியோருக்கு
தமிழ்நாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் 10-ஆம் வகுப்புப் பொது தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் சுமார் 7 லட்சம் பேர் மேல்நிலைக் கல்வி படிப்பில் சேருகின்றனர். மீதமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு தகுதி பட்டய வகுப்புகளிலும் சேருவதற்கு வசதிகள் உள்ளன. பட்டயப்படிப்புகளை பாலிடெக்னிக் கல்லூரிகள் வழங்குகின்றன. இவற்றில் பொறியியலின் மத்திய பாடங்கள் எனப்போற்றப்படும் சிவில், எந்திரவியல், மின்சார இயல் பொறியியல் பாடங்கள் போதிக்கப்படுகின்றன. பொறியியல் கல்லூரிகளில் போதிக்கப்படும் ஏறக்குறைய அனைத்து பாடங்களும் பட்டயப்படிப்புகள் பாலிடெக்னிக்குகளில் கற்பிக்கப்படுகின்றன. இவைதவிர, கணினிப் பயன்பாடு, ஆடை தயாரிப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பட்டயப் படிப்புகளும் போதிக்கப் படுகின்றன. இவற்றைக் கற்றுத் தேறியவர்களுக்கு இன்றைய தொழில் வளர்ச்சி சூழலில் உடனடி வேலை வாய்ப்புகள் உள்ளன. மேலும் பொறியியல் பட்டயம் பெற்றோர் விரும்பினால் பொறியியல் கல்லூரிகள் பட்டப்படிப்பின் இரண்டாம் ஆண்டில் நேரடியாகச் சேர்ந்து BE, B.Tech போன்ற பொறியியல் பட்டங்களைப் பெறலாம். பின்னர் தொடர்ந்து பொறியியல் பட்டமேற்படிப்பு ஆராய்ச்சி படிப்பு என தொடரலாம்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தனது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை விருப்பத் தேர்வாக மாற்றி நடைமுறைப்படுத்தி வருகிறது. விரைவில் பல மாநிலக் கல்வி வாரியங்களும் இதனை பின்பற்றும் வாய்ப்புகள் உள்ளன. இதெல்லாம் பார்க்கும்போது குறைந்தபட்ச கல்வித் தகுதி என்பது 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி என்ற நிலை தூரத்தில் இல்லை என்பதையே காட்டுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பெற்றோரும் சமுதாயமும் மாணாக்கரை குறைந்தது 12-ஆம் வகுப்புவரை பயிலுமாறு ஊக்குவிக்க வேண்டும்.
மொழித்திறன்
எவர், தமது வாய்ப்பு, வசதி, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் எந்தப் பட்டம், முதுநிலைப் பட்டம் பெற்று பணியில் சேர விழையும்போது கைக்கொடுப்பது அவர்களது மொழித் திறன்தான் என்று சொன்னால் அது மிகையில்லை. பட்டம் அல்லது பட்டமேற்படிப்பு பயின்றோரிடம் பணித்தெரிவு நேர்காணல் ஆங்கிலத்திலேயே நடைபெறுகிறது. அரசு தேர்வாணையங்களில் நேர்முகத் தேர்வு தமிழ்மொழி/ பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படுகிறது. இது ஆங்கிலவழி நேர்காணல் நடைமுறைக்கு விதிவிலக்கு என்றே கொள்ளும் அளவுக்கு ஆங்கில நேர்காணல் பெருமளவு நடைபெறுகிறது. எனவே மாணாக்கர் கல்வி பயிலும்போது மொழித்திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மொழித்திறன் என்னும்போது தமிழ்நாட்டில் ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் சரளமாக மரபுச் சொற்றொடர்களுடன் தெளிவாக எடுத்தியம்பும் ஆற்றலுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பணித்தெரிவு தேர்வுகளில் எழுத்துத் திறனுக்கு இடம் உள்ளது. என்றாலும் இறுதித் தெரிவு நேர்காணலின் போது நடைபெறுவதால் பேச்சு மொழித்திறனுக்கு முன்னுரிமை தரவேண்டும். சிறந்த பேச்சு மொழி மூலம் சாதாரண அறிவுள்ளவர்களும் தன்னைச் சிறந்த அறிவாளி எனக்காட்டிக் கொள்ள இயலும். சிறந்த அறிவாளிகளின் சிறப்பான மொழியாற்றலுடன் போசாதபோது சாதாரண அறிவாளி எனக் கணிக்கப்படும் அபாயமும் உள்ளது என்பதை உணர்ந்து அனைவரும் தமது பேச்சு மொழி யாற்றலை பயிற்சி, பயன்பாடு ஆகியவற்றின் மூலம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
மேலும் வெறும் வாய்ப்பேச்சு மொழியாற்றல் திறன் ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட BPO, Telecalling போன்ற பணிகள் தற்போது அதிக அளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. ""வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்'' என்ற பழமொழி இன்றைய சூழ்நிலையில் வலுப்பெற்றுவிட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மென்திறன்கள்
இன்றைய பன்னாட்டு நிறுவனங்கள் பணிச் சூழலில் பணியாளர்களுக்கு இருக்க வேண்டிய அத்தியாவசிய திறன் மென்திறன். வேலைகிடைப்பது உள் அறிவு மற்றும் சொல்திறனால் என்றால் கிடைத்த வேலையைத் தக்கவைத்துக் கொள்வது மென்திறன்களால் மட்டுமே என்கிறார் பிரபல வர்த்தக நிர்வாகவியல் நிபுணர் ஷிவ் கேரா. நேரந்தவறாமை, சொல்லிய சொல்லியாங்கு சொன்ன நேரத்தில் முடித்தல், மென்மையாக பேசுதல், குழுவாகச் செயலாற்றுதல், தெளிவான தகவல் தொடர்பு, சிறந்த தலைமைப் பண்பு, முன் உதாரணமாகச் செயல்படுதல், தவறுக்கு வருந்துதல், தவறுகளை மன்னித்துவிடுதல், வழங்குதல் (டழ்ங்ள்ங்ய்ற்ஹற்ண்ர்ய்) திறன்கள், ஆவணப்படுத்தி முறையாக அறிக்கை அளித்தல், தெரிந்தவற்றை கேட்டுப் அறிந்து கொள்ளுதல், வெற்றியைக் கொண்டாடுதல், தோல்வியால் துவண்டு போகாத மனப்பாங்கு, தொடர்ந்து முயற்சி என மென்திறன்களின் பட்டியல் நீளும். இவை பணியின்போது இத்திறன்கள் தேர்வரிடம் உள்ளனவா என்று அறிய விரும்புகிறார்கள். எனவே பணிக்கான தெரிவு சமயத்திலும் இவை உதவுகின்றன. மொழிப்பயிற்சிக்கும், மென்திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் சேர்ந்து இத்திறன்களை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
நன்றி: நக்கீரன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|