ஹை-டெக் கிராமம்??
Thu Mar 05, 2015 2:23 am
மண்வாசனை
நம்ப முடியவில்லை!! நம் தமிழ்நாட்டிலா இப்படிஒரு
ஹை-டெக் கிராமம்??
பார்த்தால் ஒரு சின்ன கிராமம், இதில் இத்தனை வசதிகளா? என்று ஆச்சர்யத்தில் நம்மை புருவம் உயர்த்த வைக்கிறது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, குருவிகுளம் ஒன்றியத்தில் இருக்கிற ஜமீன் தேவர்குளம்.
இந்த ஊராட்சிக்கு, கமலா பாலகிருஷ்ணன் தலைவியாக உள்ளார்.
இந்த கிராமத்தில் அரசியல் மற்றும் சாதி தலைவர்களின்
கொடிகள், பேனர்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி கமலா பாலகிருஷ்ணன், “திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற அசம்பாவிதங்களிலிருந்து ஊர்
மக்களை காப்பாற்ற, எல்லாத் தெருக்களிலும் மொத்தம்
7 சி.சி.டி.வி ‘நைட் விக்ஷன்’ கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியிருக்கிறோம்.
எல்லா தெருக்களிலும் ஒலிப் பெருக்கி அமைத்திருக்கிறோம். தண்ணீர்
வரும் தேதி, நேரம் மற்றும் முக்கிய தகவல்களை ஒலிப்பெருக்கி மூலம் தெரிவிப்போம். எந்தத் தகவலை யார் வேண்டும்னாலும் தெரிவிக்கலாம். அலுவலகத்திலுள்ள நோட்டில் பெயர், என்ன காரணத்திற்காக மைக்கில் பேசப்போகிறோம் என்பதை
குறிப்பிட்டு, கையெழுத்து போட்டுவிட்டு பேசலாம்.
இதைத்தவிர, காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் பக்திப்பாடல்களை தினமும் ஒலிபரப்பு செய்கிறோம்.
எல்லா தெருக்களிலும் மொத்தம் 36 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை
குப்பையை சுத்தம் செய்கிறோம். எந்த வீட்டு வாசலில்
குப்பைத் தொட்டி இருக்குதோ அதற்கு பக்கத்திலுள்ள
இரண்டு வீட்டுக்கரர்களிடம், ‘இன்று குப்பைத் தொட்டி
சுத்தம் செய்யப்பட்டது’ என்று எழுதி கையெழுத்து
வாங்குகிறோம்.
பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடைசெய்துள்ளோம்.
இதனால் பிளாஸ்டிக் இல்லா கிராமமாகவும் எங்கள் கிராமம் செயல்படுகிறது.
பேருந்து செல்வதற்கு வசதியாக தார்ச்சாலையும், கிராமம் முழுவதும் சிமெண்ட் சாலையும் அமைத்துள்ளோம். பேரிடர் மேலாண்மை
திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், ஊர்
முழுவதும் சிமெண்ட் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
நவீனக் கழிப்பறைகள், குளியலறைகள் என பொது
மக்களுக்கு தனியாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ சண்டைகள் வந்ததில்லை. எல்லோரும் ஒருதாய் பிள்ளையாகவே பழகி வருகிறோம். கிராமத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டு
பராமரித்து வருகிறோம்.
108 ஆம்புலன்ஸ் ஊருக்குள் வரத் தாமதமாவதால் மக்கள் அனைவரிடமும் நிதி சேர்த்து ஆம்புலன்ஸ் வாங்கவும் திட்டம் போட்டுருக்கோம்.
கிராமத்துல ஏதாவது குறைன்னா புகார் பெட்டியில புகாரை எழுதி போட்டுடலாம். கிராமத்தில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்க இருக்கிறோம். ” என்று முடித்தார்.
பல சமூக அமைப்புகளும் இக்கிராமத்தை பாராட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் எல்லா கிராமமும் ஜமீன் தேவர்குளம் போல மாறும் காலம் எப்போது??
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|