தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
 கடல் பற்றி இது வரை நீங்கள் அறியாத தகவல்கள். Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

 கடல் பற்றி இது வரை நீங்கள் அறியாத தகவல்கள். Empty கடல் பற்றி இது வரை நீங்கள் அறியாத தகவல்கள்.

Fri Jun 06, 2014 8:02 am
மண்ணில் எத்தனை விந்தைகள் உள்ளனவோ, அதைவிடக் கூடுதலாக ஆழ்கடலுக்கு உள்ளே விந்தைகள் நிறைந்து உள்ளன. கடல்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள், கடலைவிட அதிகம் என்றே சொல்லலாம்.
உலக நாடுகளின் மொத்தக் கடற்கரை நீளம் 3,15,000 மைல்கள் (ஏறத்தாழ 5,50,000 கிலோ மீட்டர்) ஆகும். இந்தியாவின் கடற்கரை 7,517கிலோ மீட்டர்கள் நீளம் கொண்டது. அதில், தமிழ்நாட்டின் கடற்கரை 997 கிலோ மீட்டர்கள் நீளம்.

கடலின் எடை
கடலில் உள்ள தண்ணீரின் மொத்த எடை, 1,450,00,00,00,00,000,0000 மெட்ரிக் டன்கள் ஆகும். எப்படி வாசிப்பது என்று மலைப்பாக இருக்கின்றதா? ஆயினும் இது, புவியின் மொத்த எடையில், ஒரு விழுக்காடு கூட இல்லை. வெறும், 0.022 விழுக்காடுதான்.
என்ன வியப்பாக இருக்கிறதா? ஆம்; அதுதான் உண்மை.

உலகின் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு கடல் என்றாலும், அந்தக் கடலும், நிலத்துக்கு மேலேதானே அமைந்து உள்ளது? பூமியின் குறுக்குவெட்டு நீளம் சுமார் 12,700 கிலோமீட்டர்கள் ஆகும். அதில் மேல்பரப்பில், சுமார் ஐந்து முதல் பத்து கிலோ மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே கடல் நீர் இருக்கின்றது. நிலத்தில் உள்ள கற்கள், பாறைகள், மலைகள், மணலின் எடைதானே நீரை விட அதிகம்? எனவே, நாம் நேரில் பார்க்கின்ற கடலின் தோற்றம் நம்மை அச்சுறுத்தினாலும், ஒட்டு மொத்த உலகில், கடல் என்பது ஒரு விழுக்காடு கூட இல்லை.

நமது உடலை மூடி உள்ள தோல் போல, இந்த உலகை கடல் மூடிக்கொண்டு இருக்கிறது. அவ்வளவுதான். அதாவது, உட்புறம் நெருப்புக் குழம்பாகக் கொதித்துச் சுழன்றுகொண்டு இருக்கின்ற இந்தப்புவியின் மேற்பரப்பைக் குளிர்விக்கின்ற ஒரு குளிர்விப்பானாகக் கடல் அமைந்து இருக்கின்றது. எனவே, அதை, புவியின் தோல் என்றே அழைக்கலாம்.

கடலின் வகைகள்
உலகில் ஐந்து பெருங்கடல்கள் உள்ளன என்று நாம் படித்து இருக்கிறோம். அதை, இப்போது ஏழாகப் பகுக்கிறார்கள். வட, தென் அட்லாண்டிக் பெருங்கடல், வட, தென் பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல் என்பவையே அந்த ஏழு பெருங்கடல்கள்.

தமிழ் இலக்கியங்களில், ‘உப்புக்கடல், கரும்பச் சாற்றுக் கடல், மதுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், சுத்தநீர்க் கடல்’ என ஏழு கடல்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

பெருங்கடல்களின் (Ocean) பகுதிகளாக, கடல் (Sea), வளைகுடா (Gulf), விரிகுடா (Bay), நீரிணை (Strait) போன்றவை விளங்குகின்றன. எடுத்துக்காட்டாக, இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல், தென்சீனக் கடல், பாரசீக வளைகுடா, வங்காள விரிகுடா, பாக் நீரிணை ஆகியவற்றைச் சொல்லலாம்.

நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதியை, தீவு என்று அழைக்கிறார்கள். கடல்களின் உள்ளே அமிழ்ந்து கிடக்கின்ற மலைகளின் உச்சிப்பகுதி, கடலுக்கு மேலே நீட்டிக் கொண்டு இருக்கும். அதுதான், தீவுகள் ஆகும். மூன்று புறங்களில் நீரால் சூழப்பட்ட பகுதி, தீபகற்பம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியா ஒரு தீபகற்பம்.

பசிபிக் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குக் கிழக்கே, அமெரிக்காவுக்கு மேற்கே, இடைப்பட்ட பகுதியில் பரந்து விரிந்து உள்ளது. உலகில் தற்போது உள்ள அனைத்து நாடுகளின் நிலப்பரப்பையும், பசிபிக் கடலுக்கு உள்ளே வைத்தாலும், அதற்கு மேலும், ஆப்பிரிக்கக் கண்டத்தின் நிலப்பரப்பை வைக்கின்ற அளவுக்கு, பசிபிக் கடல் மிகவும் பிரமாண்டமாக உள்ளது. சில இடங்களில் பசிபிக் கடலின் அகலம் 16,000 கிலோ மீட்டர்கள் ஆகும். ஆயினும், இக்கடலில் தீவுகள் குறைவு; மிகச்சிறிய தீவுகளே உள்ளன.

இந்தப்புவி, கிழக்கு நோக்கிச் சுழல்வதால், காற்று மேற்கு நோக்கி வீசும். இடையில் தடுப்புகள் ஏதும் இல்லாததால், பசிபிக் கடலில் காற்றின் வேகம் அதிகம். எனவே, கிழக்கு நோக்கிக் கப்பலைச் செலுத்துவது கடினம்.

தென் பசிபிக் பகுதியில், மிகப்பெரிய அலைகள் உருவாகின்றன. உலகின் பெரும்பாலான சுனாமி தாக்குதல்கள், பசிபிக் பெருங்கடல் பகுதியில்தான் ஏற்படுகின்றன. அக்கடலுக்கு உள்ளே ஏற்படுகின்ற நில நடுக்கங்களால் பொங்குகின்ற அலைகள், ஜப்பானியக் கடற்கரையைத்தான் தாக்குகின்றன. எனவேதான், கடலின் கோர விளையாட்டுக்கு அடிக்கடி இலக்கு ஆகிறது ஜப்பான்.
அண்டார்டிகா பகுதியில் இருந்து பிரிந்து வருகின்ற பனிப்பாறைகள், பசிபிக் கடலில் மிதந்து கொண்டே பல இடங்களுக்கு நகர்ந்து செல்கின்றன. ஆனாலும், உருகுவது இல்லை. எட்டு மாதங்கள் வரையிலும் உருகாமல் அப்படியே மிதந்து கொண்டே, நியூசிலாந்து வரையிலும் வருகின்றன.

கடலின் ஆழம்
தரையில் இருந்து கடலுக்கு உள்ளே ஓரிரு மைல்கள் வரை இருக்கும் பகுதியை நாடுகளின் எல்லை என வரையறுத்து இருக்கிறார்கள். இந்தப் பகுதியில் கடலின் ஆழம் சராசரியாக 600 அடி இருக்கலாம். இதற்கு அப்பால்தான், உண்மையான கடலின் ஆழம் தொடங்குகிறது. இதற்கு, ‘காண்டினென்டல் ஷெல்ப்’ என்று பெயர். இந்தப் பகுதியிலும், 3 விழுக்காடுதான் கடல் உள்ளது. அதற்குப் பிறகுதான், 97 விழுக்காடு கடல் இருக்கிறது. இங்கு ஆழம் 13 ஆயிரம் அடியில் இருந்து தொடங்குகிறது. இந்தப் பகுதியை ‘அபிஸ்’ (Abyss) என்று அழைக்கிறார்கள். இதன் உள்ளே, பிரமாண்டமான சமவெளிகள், ஏகப்பட்ட எரிமலைகள், படுகுழிகள், மலைத்தொடர்கள் எல்லாம் இருக்கின்றன.

சூரிய ஒளி, கடலுக்கு உள்ளே 100 அடி ஆழம் வரையிலும்தான் தெளிவாக இருக்கும். அதற்குக் கீழே போகப்போக, சூரிய ஒளி மங்கிக்கொண்டே போகும்; கும்மிருட்டுதான்.


கடலுக்கு அடியில் என்ன இருக்கிறது? என்ற கேள்வி பல நூற்றாண்டுகளாக மனிதனின் தூக்கத்தைக் கெடுத்தது.
கிரேக்கத் தத்துவமேதை அரிஸ்டாட்டில், ‘கடலுக்கு அடியில் ஏதோ இருக்கிறது’ என்று சொன்னதைக் கேட்ட அவரது சீடர் அலெக்சாண்டர் என்பவர், ஒரு கண்ணாடி பலூன் வடிவ‌த்தைச் செய்து, அதற்கு உள்ளே உட்கார்ந்து கொண்டு, கடலுக்கு உள்ளே சிறிது ஆழத்துக்குச் சென்று வந்தார். அப்போது அவர் பிரமாண்டமான திமிங்கலத்தைப் பார்த்ததாகச் சொல்லி இருக்கிறார்.

எந்த ஒரு கருவியின் துணையும் இல்லாமல், மூச்சை அடக்கிக்கொண்டு ஒருவர் 285 அடி ஆழம் வரையிலும் இறங்கி இருக்கிறார். ஒரு கயிற்றில் ஒவ்வொரு அடிக்கும் ஒரு சிலேட்டுப் பலகையைக் கட்டி விட்டார்கள். அந்தப் பலகைகளில் கையெழுத்துப் போட்டுவிட்டு வரச்சொன்னார்கள். 285 ஆவது சிலேட்டு வரை கையெழுத்துப் போட்டுவிட்டு,சுயநினைவை இழந்து விட்டார். இதுதான் மூச்சை அடக்கி, கடலில் நீண்ட நேரம் மூழ்கிய சாதனை.
பிக்கார்ட்
1960 ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிக்கார்ட் என்பவர், நீர்மூழ்கிப் படகு ஒன்றைக் கட்டினார். ‘ட்ரீஸ்டி’ என்ற அந்தப் படகில் உட்கார்ந்துகொண்டு, செங்குத்தாகக் கடலுக்கு உள்ளே இறங்கினார். நான்கு மணி நேரம் தொடர்ந்து இறங்கியும் தரை வந்தபாடில்லை. ‘ஐந்து மைல் ஆழம் இறங்கி விட்டேன். இன்னமும் தரை வரவில்லை’ என்று மேலே தகவல் அனுப்பினார். ஐந்து மணி நேரம் கழித்து ‘தரையைத் தொட்டுவிட்டேன்’ என்று வயர்லெஸ்சில் செய்தி அனுப்பினார்.

பசிபிக் கடலில் அவர் இறங்கிய இடம்தான், ‘மெரியானா ட்ரெஞ்ச்’. இங்கே கடலின் ஆழம், சுமார் ஆறேமுக்கால் மைல். அதாவது, 35 ஆயிரத்து 808 அடி. எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்கூட 29 ஆயிரத்து 28 அடிதான். அதை விட ஆழமான மரியானா ட்ரெஞ்ச் பகுதியில் பிக்கார்ட் சுமார் 20 நிமிடங்கள் இருந்தார். இதுவரை, மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கடலின் ஆழத்தில் மிகமிக ஆழமான இடம் இதுவே.

ஆனால், மனிதனால் கடலில் மூழ்கி ஆய்வு செய்யப்பட்ட பகுதி மிகமிக மிகமிக மிகமிகக் குறைவே. அந்த ஆய்வுகளில் கிடைத்த தகவல்களைத்தான் நாம் இதுவரையிலும் அறிந்து இருக்கிறோம். பல நாடுகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். வருங்காலத்தில் புதியபுதிய தகவல்கள் கிடைக்கும்.
2012 மார்ச் 26 ஆம் நாள், டைட்டானிக் திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், மெரியானா நீள்வரிப்பள்ளத்துக்குள் தனியே சென்று வந்து உள்ளார்.


ஆழ்கடல் மூழ்கு வீரர்
ஆழ்கடலில் மூழ்கி ஆய்வுகளை மேற்கொள்ளும் வீரர்கள், மூழ்கும் ஆழத்துக்கு ஏற்றவாறு, அவர்களது அனுபவம், வேலையைப் பொறுத்து, இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. குறைந்தது எட்டு லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலும் இவர்களுக்கு ஊதியம் கிடைக்கிறது.

ஆழ்கடலுக்கு உள்ளே எண்ணெய், எரிவாயுக் குழாய்களைப் பதிக்கவும், கண்டங்களுக்கு இடையே கேபிள்களைப் பதிக்கவும், அவற்றைப் பராமரிக்கவும், கடலுக்கு மேலே பாலம் அமைக்கவும், ஆழ்கடல் மூழ்கு வீரர்களின் உதவி தேவைப்படுகிறது. கடல் உயிரினச் சூழல் பற்றிய ஆய்வுகளுக்கும் விஞ்ஞானிகள் இவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

scubaதற்போது, இந்தியாவில் ஆழ்கடல் மூழ்கு வீரர்கள், சுமார் 800 பேர் உள்ளனர். இவர்கள், பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இந்தியாவில், ஆழ்கடல் மூழ்கு வீரர்களுக்கான பயிற்சி வசதிகள் கிடையாது. கப்பல் படையில் பணிபுரிகின்ற வீரர்கள், தங்கள் பணிக்காலம் முடிந்ததும், நல்ல சம்பளத்துக்குத் தனியார் ஆழ்கடல் மூழ்கு நிறுவனங்களில் சேர்ந்து விடுகின்றனர்.

ஆழ்கடலில் மூழ்கும் பயிற்சிகளை, ஆஸ்திரேலியா, நார்வே போன்ற நாடுகள் வழங்குகின்றன. ‘பெல் டைவிங்’ எனப்படும் இத்தகைய பயிற்சியைப் பெற, இன்றைய நிலையில், சுமார் எட்டு லட்சம் வரை செலவு ஆகிறது. இந்தப் பயிற்சி வகுப்பில் சேர 12 ஆம் வகுப்பில், அறிவியல் பாடத்தில் தேர்ச்சிக்கான மதிப்பெண்கள் பெற்று இருந்தால் போதும். நீச்சல் தெரிந்து இருக்க வேண்டும்; ஆங்கில உச்சரிப்பும், நல்ல உடல்கட்டும் தேவை.

ஆழ்கடல் வீரர்கள், பெரும் தண்ணீர் சூழ்ந்த நிலையில், வெளிச்சமே இல்லாத இடத்தில் வேலை பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இவர்களுக்காக, சிறப்பு ஆடை வடிவமைக்கப்பட்டு உள்ளது. அது, ‘டைவிங் பெல்’ என்ற அமைப்புடன் இணைக்கப்பட்டு இருக்கும். டைவிங் பெல்லில் இருந்து, ஆழ்கடல் மூழ்கு வீரரின் சிறப்பு ஆடைக்கு உள்ளே இணைக்கப்பட்ட குழாய்கள் மூலம், அவருக்குத் தொடர்ந்து வெதுவெதுப்பான நீரும், காற்றும் அளிக்கப்படும். கப்பலின் சாச்சுரேசன் சேம்பர் என்ற பகுதியில் இருந்து, கடலுக்கு உள்ளே இவர்கள் இறக்கப்படுவார்கள்.

ஆழ்கடல் மூழ்கு வீரர்கள் மூச்சு விடும் முறையும் மாறுபட்டு இருக்கிறது. அவர்கள் உள்ளே இழுக்கும் மூச்சுக் காற்றில், ஆக்சிஜனும், ஹீலியமும் கலந்து இருக்கும். ஹீலியம், இரத்தத்தில் கரையாது என்பதே இதற்குக் காரணம். சாதாரணமாக நாம் காற்றில் சேர்த்துச் சுவாசிக்கும், நைட்ரஜன், ஆழ்கடல் மூழ்கு வீரர்கள் கடலின் அடிப்பகுதிக்கு உள்ளே செல்லும்போது, அங்கே உள்ள கடுமையான அழுத்தத்தால், ரத்தத்தில் இருந்து வெளியேறத் தொடங்கும். மிகுந்த வேதனையை ஏற்படுத்தும். சில வேளைகளில் மரணம்கூட நேரலாம்.

எனவே, ஒரு ஆழ்கடல் மூழ்குவீரர் தொடர்ந்து 15-20 நாட்களை ஆழ்கடல் பகுதியில் செலவிட்டபிறகு, அவரது உடல் சாதாரண வெளிப்புற அழுத்தத்துக்குப் பழகுவதற்காக, ‘சாச்சுரேசன் சேம்பரில்’ வைக்கப்படுகிறார். அவர் வெளிப்புற அழுத்தத்துக்கு மெதுவாக மீளும் வகையில் அதில் வசதிகள் செய்யப்பட்டு இருக்கும்.

கடல் எல்லை
1982 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் மன்றம், United Nations Convention on the Law of the Sea என்ற அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்புதான், உலக நாடுகளின் கடல் எல்லைகளை வரையறுத்தது. இவர்கள் வரைந்த ஒப்பந்தத்தில், இதுவரையிலும், 158 நாடுகள் கையெழுத்து இட்டு உள்ளன.

கடலில், மூன்று வகையான எல்லைகள் வரையறுக்கப்பட்டு உள்ளன.
கரையில் இருந்து ஆறு நாட்டிகல் மைல் தொலைவுக்கு உட்பட்டது ‘கரைக்கடல்.’ இதில் கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்கலாம். அடுத்த ஆறு நாட்டிகல் மைல், ‘அண்மைக் கடல்.’ இதில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கலாம். அதன்பின் உள்ளதுதான் ‘ஆழிக்கடல்.’ இதில் கப்பல்களில் மீன் பிடிக்கலாம்.
இப்போது கரை ஓரங்களில் மீன்வளம் குறைந்து விட்டது. எனவேதான், கட்டு மர மீனவர்கள், அண்மைக்கடலுக்கும், ஆழிக்கடலுக்கும் செல்லுகிறார்கள்.

ஒரு நாட்டின் கடல் எல்லையான 12 நாட்டிகல் மைல் என்பது, தோராயமாக 22.2 கிலோ மீட்டர்கள் ஆகும். அந்த எல்லைக்கு உள்ளே, பயணிகள் கப்பல் போகலாம். ஆனால், மீன்பிடிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள், வணிகக் கப்பல்கள் செல்வதற்கு, அந்த நாட்டின் கடலோரக் காவல்படையின் ஒப்புதலைப் பெற வேண்டும். மீன்பிடி படகுகளில், மரக்கலங்களில், கப்பல்களில் அந்தந்த நாட்டின் தேசியக் கொடிகள் பறக்க வேண்டும்.

18 ஆம் நூற்றாண்டில் இருந்து 20 ஆம் நூற்றாண்டு வரையிலும், ஒரு நாட்டின் கடல் எல்லை, ஆறு கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருந்தது. ஏனெனில், அப்போது இருந்த பீரங்கிகள் வீசுகின்ற குண்டுகள், ஆறு கிலோ மீட்டருக்கு மேல் பாயாது. எனவேதான், அத்தகைய கட்டுப்பாடு. ஆனால், இப்போது, கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகள் வந்து விட்டன. இப்போதும், சிங்கப்பூர், ஜோர்டான் போன்ற நாடுகள், தங்களுடைய கடல் எல்லையை, 6 கிலோ மீட்டர்கள் என்ற அளவிலேயே நிறுத்திக் கொண்டு உள்ளன.

கடலோரக் காவல்படையினர், ஒரு நாட்டின் கடல் எல்லைக்கு அப்பால், மேலும், 22 கிலோ மீட்டர் தொலைவுக்கும் சென்று, கண்காணிப்பு, காவல் பணிகளில் ஈடுபடலாம். அதற்கு மேல், ‘பொருளாதார எல்லை’ என்று ஒன்று உள்ளது. அதன்படி, சுமார் 393 கிலோ மீட்டர் வரையிலும் கடலில் உள்ள எல்லா வளங்களும், அதற்கு அருகில் கரையைக் கொண்டு உள்ள நாட்டுக்கே சொந்தம் ஆகும். மீன் பிடிப்பது, பெட்ரோல் எடுப்பது போன்ற உரிமைகளை அந்த நாடு கொண்டு உள்ளது.

எங்கே மீன் பிடிப்பது?
இந்தியாவுக்கும்,இலங்கைக்கும் இடையே உள்ள கடல்பரப்பின் அகலம் 25 கிலோ மீட்டர்கள்தாம். இத்தகைய சூழலில், இரண்டு நாடுகளும் பேசிக்கொண்டு, கடல் எல்லையைச் சரிபாதியாக வகுத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய ஒப்பந்தங்களும் உள்ளன. கச்சத்தீவை இந்தியா இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்த பின்னரும், ஒப்பந்தப்படி தமிழக மீனவர்கள் அந்தக் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றால், இலங்கைக் கடற்படை தாக்கி வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில், சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்று விட்டது. நூற்றுக்கணக்கானோர் கை, கால்களை இழந்து உள்ளனர். படகுகளை உடைத்துள்ளனர், வலைகளை அறுத்துள்ளனர். ஆனால் , எந்தவிதமான இழப்பீடுகளும் தந்தது இல்லை. இந்தியாவும் கோரிப் பெறவில்லை. இலங்கைக் கடற்படையை எச்சரிக்கவும் இல்லை. தமிழக மீனவர்களைப் பாதுகாக்க நாதி இல்லை.
கேரள மாநில மீனவர்கள் இருவரை, என்ரிகோ லெக்ஸி என்ற இத்தாலிய வணிகக் கப்பல் ஊழியர்கள் சுட்டுக் கொன்றனர். உடனே, இந்தியக் கடற்படை பாய்ந்து சென்று, அந்தக் கப்பலைச் சிறைப்படுத்தி, கடற்கரைக்குக் கொண்டு வந்து நிறுத்தி வைத்து இருக்கின்றது. சுட்டவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறது. ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு.

பாகிஸ்தான் நாடு, எல்லை தாண்டி மீன்பிடித்த குஜராத் மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டது இல்லை. கைது செய்து சிறையில் வைத்து இருந்து, பேச்சுவார்த்தை நடத்தி விடுவித்து விடுகிறது. இதுவரையிலும், பாகிஸ்தான் படைகள், ஒரு குஜராத் மீனவரைக் கூடச் சுட்டுக் கொன்றது இல்லை.

கடற் கொள்ளையர்கள்
அரபிக் கடலில் வளைகுடா நாடுகளுக்குச் செல்லுகின்ற சரக்குக் கப்பல்களை, சோமாலியக் கடற் கொள்ளைக்காரர்கள், அடிக்கடி கடத்திக் கொண்டு போய் வைத்துக் கொண்டு, பணம் பறிப்பது அண்மைக்காலமாக வாடிக்கையாகி விட்டது. ஆனால், கடல் கொள்ளை என்பது, கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே தொடங்கி விட்டது.
கி.மு. 75 ஆம் ஆண்டு, ஜூலியஸ் சீசரைக் கடல் கொள்ளையர்கள் பிடித்து, ஒரு தீவில் சிறை வைத்தார்கள். அப்போது அவர் ஒரு சாதாரண வீரராக இருந்தார். அவரை விடுவிப்பதற்கு, 20 பொற்காசுகள் வேண்டும் என்று பிணையத் தொகை கேட்டார்கள். அப்போது, கடல் கொள்ளையர்களைப் பார்த்து ஜூலியஸ் சீசர் எச்சரித்தாராம். ‘என்னுடைய மதிப்பு 20 பொற்காசுகள்தானா? கூடுதலாகக் கேள். இந்தத் தொகையை வாங்கிக் கொண்டு என்னை நீ விடுவித்தால், நான் திரும்பி வந்து, உங்கள் தலைகளை வெட்டுவேன்’ என்றாராம்.

பிணைக் கைதியாகப் பிடித்து வைக்கப்பட்டு இருந்த நிலையிலும் எச்சரிக்கின்ற மனப்பான்மை, அவரது மன உறுதி எத்தகையது என்பதை எண்ணிப் பாருங்கள்.

அது மட்டும் அல்ல; விடுதலையான ஜூலியஸ் சீசர், தாம் சொன்னது போலவே, படைகளைத் திரட்டிக்கொண்டு வந்து, தன்னை விடுவித்த கடல் கொள்ளையர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களின் தலைகளை வெட்டிக் கொன்றார் என்பதைப் படிக்கும்போது, அதனால்தான் அவர் வரலாற்று நாயகர் ஆனார் என்பதை நாம் உணர முடிகிறது.

சுனாமி
‘சுனாமி’ என்பது, ஜப்பானிய மொழிச் சொல் ஆகும். தமிழ் இலக்கியங்களில், இதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தமிழில் இதை, ‘ஆழிப் பேரலை’ என்கிறார்கள். காவிரிப்பூம்பட்டினம், இப்படிப்பட்ட ஆழிப்பேரலையில்தான் கடலுக்கு உள்ளே அமிழ்ந்து போனது.

...பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
என்று, சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வருணிக்கிறார்.

இப்போதைய கன்னியாகுமரிக்குத் தெற்கே உள்ளே இந்தியப்பெருங்கடல், முன்பு நிலப்பகுதியாகவே இருந்தது. அதற்குப் பெயர் ‘குமரிக் கண்டம்’ (லெமூரியா). அதன் தலைநகர், ‘கபாடபுரம்’ அல்லது ‘தென்மதுரை’ என்று அழைக்கப்பட்டது. குமரிக் கண்டமும், ஆழிப்பேரலையில் இந்தியப் பெருங்கடலுக்கு உள்ளே அமிழ்ந்து போனதாகக் கருதப்படுகிறது. ஆனால், இது இன்னமும் சான்று ஆவணங்களுடன் தெளிவாக விளக்கப்படவில்லை. மேலும் ஆய்வுகள் தேவை.

கடலுக்குள் நிலநடுக்கம்
ஆழ்கடலுக்கு உள்ளே உள்ள நிலம் வெடிக்கும்போது, அதன் வீரியம் வெளியில் தெரியாது. நிலநடுக்கத்தின் அளவை, ‘ரிக்டர்’ என்ற அளவையால் பகுக்கிறார்கள். 1960 ஆம் ஆண்டு கடலுக்கு உள்ளே நிகழ்ந்த வால்டிவா நிலநடுக்கத்தின் அளவு 9.5 ரிக்டர். மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. 1965, 2004 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த நிலநடுக்கங்கள் 9.4 ரிக்டர் அளவுக்கு இருந்தது.

இந்தோனேஷிய நாட்டின் சுமத்ரா தீவுகளுக்கு அருகே 2005 டிசம்பர் மாதம் 26 ஆம் நாள், ஆழ்கடலுக்கு உள்ளே நிகழ்ந்த மிகப்பெரும் நிலநடுக்கத்தின் எதிரொலிதான், தமிழகக் கரையைத் தாக்கிய சுனாமி ஆகும். இதுதான், உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான மக்களைப் பலிவாங்கிய சுனாமி. ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணு குண்டைவிட 23,000 மடங்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் இது. இந்தோனேஷியா, இலங்கை, தமிழகம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் வரையிலும் இந்த சுனாமியில் சுமார் இரண்டரை இலட்சம் பேர் பலியானார்கள்.

இப்போது, ஒவ்வொரு நிலநடுக்கத்துக்கும், புயலுக்கும் பெயர்களைச் சூட்டி, கேத்ரீனா புயல், தானே புயல் என்று எளிதாக அடையாளப்படுத்துகிறார்கள்.

கடல் வாழ் உயிரினங்கள்
இந்த உலகில், மனிதன், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள், நுண்ணுயிரிகள் என எத்தனையோ ஆயிரக்கணக்கான உயிரினங்கள் வாழுகின்றன. அதைப்பற்றி நாம் விரிவாக ஆராய்ந்து வருகிறார்கள். பள்ளிகளில் விலங்கியல் பாடங்களில் சொல்லித் தருகிறார்கள். ஆனால், உலகில் வாழும் உயிரினங்களுள், தரையில் வாழும் உயிரினங்கள் ஒரு விழுக்காடு மட்டும்தான்; 99 விழுக்காடு உயிரினங்கள் கடலில்தான் வாழுகின்றன.

என்ன மயக்கம் வருகிறதா? ஆம்; அதுதான் உண்மை. உலகின் மேற்பரப்பில் முதலில் தோன்றிய உயிரினமே, கடல் பாசிதானே! சுமார் 25 மில்லியின் உயிரினங்கள், கடலுக்கு உள்ளே வாழ்வதாகக் கணிக்கிறார்கள். அவற்றுக்கெல்லாம் பெயர் கொடுத்து முடிக்கவே, இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆகும். தமிழில் எத்தனையோ கடல் வாழ் உயிரினங்களின் பெயர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. எனவே, நீங்கள் ஒரு புதிய கடல் உயிரினத்தைப் பற்றி ஆராய்ந்தால், அதன் உடல் அமைப்பு, குணநலன்களைக் குறிக்கும் வகையில் அதற்குத் தமிழ்ப் பெயரைச் சூட்டுங்கள். கடலில் 4 கிலோ மீட்டர் ஆழம் வரையிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அங்கே ஒளிரும் மீன்கள் உள்ளன.

திமிங்கல வேடிக்கை
தற்போது, உலகில் உள்ள மிகப்பெரிய உயிரினம் ‘நீலத் திமிங்கலம்’ என்பது நாம் அறிந்த செய்திதான். திமிங்கலங்கள் கரையில் ஒதுங்கித் தற்கொலை செய்து கொள்வதை நாம் பார்த்து இருக்கிறோம். அவை கடலில் நீந்துவதைப் பார்ப்பது, மேற்கு நாட்டவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. அதற்காகவே நேரத்தை ஒதுக்கி, படகுகளில் சென்று பார்க்கிறார்கள். இதற்காகவே பல சுற்றுலா நிறுவனங்கள் இயங்குகின்றன. ஜப்பான், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் திமிங்கல வேடிக்கை மிகப்பெரிய வருமானம் ஈட்டும் சுற்றுலா.
சுறாக்களில் 350 வகை உள்ளன. அவற்றுள், 36 வகை சுறாக்கள்தான் மனிதர்களைத் தாக்குகின்றன. இன்றைக்கும், சுறா மீன்களிடம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 முதல் 75 பேர் சிக்கிக்கொண்டு உயிர் இழக்கிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடலைப் பற்றிய கதைகள்
ஏழுகடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, ஒரு குகையில் உள்ள கிளியின் உடலில், இளவரசனின் உயிர் ஒளிந்து இருக்கிறது என்பது போன்ற கதைகளை நாம் படித்து இருக்கிறோம். ஒரு அசுரன், பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலில் கொண்டுபோய் ஒளித்து வைத்தான்; அதை மீட்பதற்காக, மச்ச அவதாரம் எடுத்தார் கிருஷ்ணன் என்று சொல்வதை, இன்னமும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

அது எப்படி முடியும்? பூமியில்தானே கடல் இருக்கிறது? என்று கேள்வி கேட்டால், அவர்களை ‘நாத்திகர்கள்’ என்று முத்திரை குத்தி விடுகிறார்கள். உலக வரைபடம் வரையாத காலத்தில் சொல்லப்பட்ட, அறிவுக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத கட்டுக் கதைகளை நம்பிக் கொண்டு இருப்பவர்களே ஆத்திகர்களாக இருக்கிறார்கள். இன்றைக்கும், ஏழு குதிரைகள் கொண்ட தேரில் ஏறி, சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்கிற அடிப்படையில், மத விழாக்களைக் கொண்டாடுகிறார்கள் என்றால், நாம் அறிவு விடுதலை பெறுவது எப்போது?
‘சிந்துபாத்தின் கடல் பயணங்கள்’, புதையலைத் தேடி பல தீவுகளுக்குச் சென்றவர்களின் கடல் பயணக் கதைகள், ஐரோப்பிய மாலுமிகள் எழுதி உள்ள கடல் பயணக் குறிப்புகள், மக்களால் விரும்பிப் படிக்கப்படுகின்றன. ஹெமிங்வே எழுதிய, கடலும் கிழவனும் என்பது ஒரு புகழ்பெற்ற நாவல். பெருங்கடல்களின் ஆழம் (The depth of Ocean), அமைதி உலகம் (The Silent World) எனப் பல ஆங்கில நூல்கள், கடலைப் பற்றி எழுதப்பட்டு உள்ளன.

கடலில் மூழ்கும் தீவுகள்
அண்மைக்காலமாக, புவி வெப்பம் உயர்ந்து வருவதால், பனிமலைகள் உருகத் தொடங்கி உள்ளன. இதனால் கடலில் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இந்தியப் பெருங்கடலில், இந்தியாவுக்குத் தெற்கே 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாலத்தீவுகள், கடலில் மூழ்கிக் கொண்டு இருக்கின்றன. தமிழகத்தை சுனாமி தாக்கியபோது, மாலத்தீவுக் கூட்டத்தில் சுமார் 18 தீவுகள் முழுமையாகக் கடலில் மூழ்கி விட்டன. தற்போது, அந்தத் தீவில் உயரமான இடமே, கடல் மட்டத்தில் இருந்து 7 அடி உயரத்தில்தான் அமைந்து உள்ளது. 21 ஆம் நூற்றாண்டின் இறுதிக்கு உள்ளாகவே அந்த நாட்டின் பெரும்பகுதி கடலுக்கு உள்ளே மூழ்கி விடும். அதேபோல, ஐரோப்பியக் கண்டத்தில் நெதர்லாந்து


நன்றி: சுரேஷ்பாபு
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

 கடல் பற்றி இது வரை நீங்கள் அறியாத தகவல்கள். Empty Re: கடல் பற்றி இது வரை நீங்கள் அறியாத தகவல்கள்.

Fri Jun 06, 2014 8:56 pm
உலகின் முக்கிய கடல்கள்

கடல் பரப்பு சராசரி ச.கி.மீ. ஆழம் மீ.

பசிபிக் 16,62,41,000 10,920


அட்லாண்டிக் 8,65,57,000 8,605


இந்தியன் 7,34,27,000 7,125


ஆர்டிக் 94,85,000 5,122


தென் சீனக்கடல் 29,74,600 5,514


கரீபியன் கடல் 25,15,900 7,680


மெடிட்டரேனியன் கடல் 25,10,000 5,150


பெர்ரிங் கடல் 22,61,000 5,121


மெக்ஸிகோ வளைகுடா 15,07,600 4,377


ஒக்கோத்ஸ்க் கடல் 13,92,100 3,475


ஜப்பான் கடல்/கிழக்குகடல் 10,12,900 4,000


ஹட்சன் விரிகுடா 7,30,100 259


கிழக்கு சீனக் கடல் 6,64,600 3,000


அந்தமான் கடல் 5,64,900 4,450


கருங்கடல் 5,07,900 2,243


செங்கடல் 4,53,000 2,246
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

 கடல் பற்றி இது வரை நீங்கள் அறியாத தகவல்கள். Empty Re: கடல் பற்றி இது வரை நீங்கள் அறியாத தகவல்கள்.

Wed May 06, 2015 4:35 am
தமிழில் கடலுக்கு இருக்கும் 200 பெயர்களைக் கொண்ட பட்டியல் இங்கே:

அடங்காவாரிதி, அத்தி, அபாம்பதி, அம்பரம், அம்புதி, அம்புநிதி, அம்புராசி, அம்புவி, அம்போதி, அம்போநிதி, அம்போராசி, அரலை, அரி, அரிணம், அருணவம், அலை, அலைநீர், அலைவாய், அவாரபாரம், அழுவம், அளக்கர், அன்னவம், 


ஆர்கலி, ஆலம், ஆழம், ஆழி, 


இந்துசனகம், இரத்தினகருப்பம், இரத்தினாகரம், இரைநீர்,


 உததி, உதரதி, உந்தி, உப்பு, உரகடல், உரவுநீர், உலாவுநீர், உவரி, உவர், உவர்நீர், உவா,


 ஊர்திரை, ஊர்திரைநீர், ஊர்மிமாலி, 


எற்றுந்திரை, 


ஓதம், ஓதவனம், ஓலம், 


கசங்கலம், கடல், கடும்புனல், கயம், கலி, கழி, 


கார்கோள், கார்மலி, கார்வலயம், 


கிடக்கை, கிடங்கர், கிருபீடபாலம், 


கீழ்நீர், 


குரவை, 


கூபாரம், 


கொறுக்கை, 


சகரநீர், சக்கரம், சசி, சமுத்திரம், சரிதாம்பதி, சரிற்பதி, சலகாங்கம், சலதரம், சலதி, சலநிதி, சலராசி, சலாபாகரம்,


 சாகரம், 


சிந்து, சிந்துவாரம், 


சீவனியம், 


சூழி, 


தரங்கம், தரணீபூரம், தரங்கர், தரந்தம், தவிசம்,


 தாரதம், தாரீடம், தாவிஷம், திமி, திமிகோடம், திரை, 


துனிநாதம், 


தெண்டிரை, 


தேனம், 


தொன்னீர், 


தோயதி, தோயநிதி, தோயம், தோழம், 


நதனதீபதி, நதாதிபதி, நதிபதி, நதீனம், நரலை, 


நாரம், நாமநீர், 


நிதி, நித்தியம், 


நீத்தம், நீரதி, நீரநிதி, நீரம், நீர், நீர்நீதி, நீராழி, நீருடைவரப்பு, 


நெடுங்கடல், நெடுநீர்,
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

 கடல் பற்றி இது வரை நீங்கள் அறியாத தகவல்கள். Empty Re: கடல் பற்றி இது வரை நீங்கள் அறியாத தகவல்கள்.

Wed May 06, 2015 4:41 am
நெடும்புனல்,


 நேமி, 


பயோதகம், பயோதசம், பயோததி, பயோதி, பயோநிதி, பரவை, பரந்தநீர், பராங்கவம், பரு, 


பாதோதி, பாதோநிதி, பாராவாரம், பாலை, பாழி, பானல், 


புணரி, புரணம், புறவிடன், புனல், 


பூரணம், 


பெருங்கடல், பெருநீர், பெருவனம்,


 பேராளி, பேரு, 


பௌவம், 


மகரசலம், மகரநீர், மகராங்கம், மகரி, மகாகச்சம், மகாசயம், மகான்னவம், மகீப்பிராசீரம், மகோததி, மங்கலமொழி, மஞ்சம், மந்திரம், 


மாதங்கம், மாதோயம், மாறாநீர், 


மிதத்துரு, மிருதோற்பவம், 


மீரம், மீனாலயம், 


முண்டகம், முதனீர், முதுகயம், முதுநீர், முந்நீர், முன்னீர், 


யாதபதி, 


வரி, வருணம், வருணன், வலயம், 


வாங்கம், வாகினீபதி, வாரகம், வாரகி, வாரணம், வாரம், வாராகரம், வாராநிதி, வாரி, வாரிதி, வாரிநாதம், வாரிநிதி, வாரிராசி, வாரீசம், வாருணம், வாருதி, 


விரிநீர், 


வீங்குநீர், வீசிமாலி, வீரை, 


வெள்ளம், 


வேலாவலையம், வேலை.


*இவற்றில் சில சொற்களுக்குப் பழந்தமிழ் அகராதிகளில் பொருள் தேடிப் பார்க்கும்போது ‘கடல்’ என்ற பொருள் கிடைக்கவில்லை. 



*எடுத்துக்காட்டாக, ‘அடங்காவாரிதி’ என்ற சொல்லுக்குக் ‘கடல் உப்பு’ என்ற பொருளையே காண முடிகிறது. 


*அதேபோல் ‘மங்கலமொழி’ என்ற என்ற சொல்லுக்கும் கடலுக்கும் என்ன பொருள் என்று தெரியவில்லை. 


*இதுபோன்ற சில சொற்களுக்குக் ‘கடல்’ என்ற பொருள் இருப்பதற்கான ஆதாரத்தை வாசகர்கள் அனுப்பிவைக்கலாம். 


*மற்றபடி இதில் உள்ள பெருவாரியான சொற்களுக்கு இலக்கிய வழக்குகளிலும் மீனவர்கள் வழக்குகளிலும் ‘கடல்’ என்ற பொருள் இருக்கிறது.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

 கடல் பற்றி இது வரை நீங்கள் அறியாத தகவல்கள். Empty Re: கடல் பற்றி இது வரை நீங்கள் அறியாத தகவல்கள்.

Fri Jun 12, 2015 8:09 am
கடலின் எல்லை மற்றும் ஆழம் பற்றி சிறிது தெரிந்துக்கொள்வோம்.

கடல்களை ஒட்டியுள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் 'கடல் எல்லை' என்று ஒன்று இருக்கிறது. இதை குறித்து ஐ.நா சபை 1982ல் ஒரு சில வரையறைகளை வகுத்தது.

அதாவது, ஒவ்வொரு நாட்டின் கடற்கரையிலிருந்து 22.2 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள தொலைவு வரை தான் அந்தந்த நாட்டின் எல்லைகள் உள்ளன. இந்த எல்லைக்குள் வேறு நாட்டு பயணிகள் கப்பல் மட்டும் தான் உள்ளே நுழைய வேண்டும். போர்க்கப்பல்கள், வர்த்தக கப்பல்கள், மீன்பிடி படகுகள் போன்றவைகள் உள்ளே வர அந்த நாட்டிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள தூரம் 25 கிலோமீட்டர் மட்டும் தான். ஐ.நா சபையின் வரையறை படி நம் மீனவர்கள் 22.2 கிலோமீட்டர் வரை சென்று மீன் பிடிக்கலாம். ஆனால், இலங்கைக்கு 22 கிலோமீட்டர் என்பது கிட்டத்தட்ட அவர்களின் கரைக்கு அருகிலேயே சென்று விடுகிறது. இங்கு தான் குழப்பம். இதனால் தான் அடிக்கடி நம் மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.


மேலும், ஒவ்வொரு நாட்டின் கடற்கரையிலிருந்து 395 கிலோமீட்டர் வரை உள்ள கடல் வளங்கள் (மீன் வளம் தவிர) அனைத்தும் அந்தந்த நாட்டிற்கே சொந்தம். இதில் அன்னிய நாடுகள் தலையிட கூடாது. அதற்கு அடுத்து உள்ளது எல்லாம் பொதுவானது. எல்லா நாடுகளும் சொந்தம் கொண்டாடலாம்.


இப்போ ஆழம் பற்றி தெரிந்துக்கொள்வோம். கடல்களின் சராசரி ஆழம் 4 கிலோ மீட்டர். இதில் 30 மீட்டர் வரை தான் சூரிய ஒளி ஊடுருவும். அதற்கு கீழ் இருண்டு இருக்கும். ஒரு மனிதன் சாதரணமாக 10 மீட்டர் வரை தான் கீழ் நோக்கி செல்ல முடியும். அதற்கு மேல் முறையான பயிற்சி, நீச்சல் சாதனங்கள் இல்லாமல் செல்ல முடியாது.


10 மீட்டர் மேல் உள்ளே சென்றால், கடல் மட்டத்தில் இருக்கும் அழுத்தத்தை விட இரண்டு மடங்காக அதிகரிக்கும். 2 கிலோமீட்டர் தொலைவு சென்றால், 400 சிமெண்ட் மூட்டைகளை நம் முதுகில் ஏற்றிய அளவிற்கு அழுத்தம் ஏற்படும்.


சரி, கடலின் சராசரி ஆழம் 4 கிலோமீட்டர். மிகவும் ஆழமான பகுதி எங்குள்ளது..? அது தான் 'மரியானா அகழி' (Mariyana Trench). இது வடக்கு பசுபிக் பெருங்கடலில் உள்ளது. இதன் ஆழம் சுமார் 11 கிலோமீட்டர்.
விண்வெளியில் இதுவரை 500க்கும் மேல வீரர்கள் பயணம் செஞ்சிருக்காங்க. ஆனா இந்த ஆழமான கடல் பகுதிக்கு இதுவரை மூன்று பேர் தான் பயணம் செஞ்சிருக்காங்க. அவர்களில் இருவர் டான் வால்ஷ் மற்றும் சாக்கஸ் பிக்கார்ட்.


மூன்றாவது நபர் நமக்கு மிகவும் பரிச்சயமான ஜேம்ஸ் கேமரூன். அதாங்க, டைட்டானிக், அவதார் படங்களின் இயக்குனர். இவர் டைரக்டர் மட்டும் இல்ல. ஒரு சிறந்த கடல் ஆராய்ச்சியாளரும் கூட தான்.
Sponsored content

 கடல் பற்றி இது வரை நீங்கள் அறியாத தகவல்கள். Empty Re: கடல் பற்றி இது வரை நீங்கள் அறியாத தகவல்கள்.

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum