இயேசுவே தேவனுடைய ஆட்டுக்குட்டியானவர்
Thu Aug 22, 2013 11:34 pm
மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.. எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே,அவர் இவர்தான். நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும்பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றான்.
பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன். நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்; ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவரென்று எனக்குச் சொல்லியிருந்தார். அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன் என்றான். (யோவான் 1:29-34).
வானத்திலே அநேக நட்சத்திரங்கள் உண்டு, ஆனால் ஒரு நட்சத்திரம் மற்ற நட்சத்திரங்களை விட அதிக மேன்மையானதாகக் காணப்படும். அதைப் போலவே வேதாகமத்தில் எல்லா வசனங்களும் கடவுளால் ஏவப்பட்டதால், அவைகள் எல்லாம் பிரயோஜனமானதாக இருக்கிறது, இருந்தாலும் சில வாக்கியங்கள் அதிக சிறப்பு வாய்ந்தாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வாக்கியம் தான் நாம் இங்கு கவனிக்கும் வசனங்களாகும். யோவான் ஸ்நானகன் கிறிஸ்துவைக் குறித்து இங்கு கொடுக்கும் சாட்சியைப் போல வேறு எவரும் அவருக்கு உலகத்தில் சாட்சி கொடுக்கவில்லை.
முதலாவது, இந்த வாக்கியத்தில் நாம் கவனிக்கவேண்டியது கிறிஸ்துவுக்கு யோவான் ஸ்நானகன் கொடுக்கும் விசித்திரமான பெயர். அவரை தேவ ஆட்டுக்குட்டி என்று அழைக்கிறார்.
கிறிஸ்து ஒரு ஆட்டுக்குட்டியைப் போல பணிவான மென்மையான குணம் உடையவர் என்பதால் மட்டுமே யோவான் ஆண்டவரை அப்படியாக அழைக்கவில்லை. இது உண்மை தான், ஆனால் இது மட்டுமே முழு உண்மை கிடையாது. இதைவிட மிகவும் மேலான உண்மை இருக்கிறது. அது என்னவென்றால், கிறிஸ்து தான் பாவத்திற்கான மிகப்பெரிய பலி என்பதே. சிலுவையில் தம்முடைய மரணத்தின் மூலமாக மீறுதல்களுக்காக பரிகாரகம் செய்ய வந்தவர் இவரே. மோரியா மலையிலே ஈசாக்கிடம் ‘கர்த்தர் கொடுப்பார்’ என்று ஆபிரகாம் சொன்ன மெய்யான ஆட்டுக்குட்டி இவரே (ஆதியாகமம் 22:. ஆலயத்தில் தினசரி காலையிலும் மாலையிலும் பலி கொடுக்கப்பட்ட ஆட்டுக்குட்டி சுட்டிக்காட்டிய மெய்யான ஆட்டுக்குட்டி இவரே. ஏசாயா தீர்க்கதரிசி ‘அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டி’ எனறு சொல்லிய மெய்யான ஆட்டுக்குட்டி இவரே (ஏசாயா 53:7). எகிப்து தேசத்திலே பஸ்கா ஆட்டுக்குட்டி சுட்டிக்காட்டிய மெய்யான ஆட்டுக்குட்டி இவரே. பாவங்களுக்கு பரிகாரமாக உலகத்தில் அனுப்பப்பட்ட மெய்யான பலியாகிய ஆட்டுக்குட்டி இவரே. ஆம், தேவனுடைய ஆட்டுக்குட்டி இவரே.
யோவான் கிறிஸ்துவை எந்த விதத்தில் சொல்கிறாரோ அப்படியே நாமும் அவரே ஏற்றுக்கொள்வோம். அவரையே நம்முடைய எஜமானாக ஏற்றுக்கொண்டு சேவை செய்வோம். அவரையே நம்முடைய ராஜாவாக பணிந்து கீழ்ப்படிவோம். அவரையே நம்முடைய தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொண்டு அவருடைய போதனைகளைக் கற்றுக்கொள்வோம். அவரையே நம்முடைய உதாரணமாக எடுத்துக்கொண்டு அவரை பின்ப்ற்றுவோம். நம்முடைய சரீரத்தையும் ஆத்துமாவையும் மீட்கும் இரட்சகராக அவரையே எதிர்நோக்குவோம். எல்லாவற்றிற்கும் மேலாக, அவரே நம்முடைய பரிகார பலி என்று அவரை மேன்மைப்படுத்துவோம். அவருடைய மரணமே நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்தது என்று நாம் அவரைச் சார்ந்து இருப்போம். நாம் உயிரோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவருடைய இரத்தம் நம்முடைய பார்வைக்கு அதிக அருமையாக காணப்படுவதாக. நாம் கிறிஸ்துவை எல்லாவற்றிலும் மகிமைப்படுத்தவேண்டும், அவருடைய சிலுவையில் அவரை அதிகமாக மகிமைப்படுத்தவேண்டும். இதுவே மூலக்கல், இதுவே சிகரம், இதுவே மெய்யான கிறிஸ்தவ இறையியலின் நாடி நரம்பு. யோவான் ஸ்நானகனைப் போல நாமும் கிறிஸ்துவை ‘அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக’அறியவில்லை என்றால் நமக்கு கிறிஸ்துவைப் பற்றி எதுவுமே சரியாகத் தெரியவில்லை என்றுதான் அர்த்தம்.
இரண்டாவது, இந்த வாக்கியத்தில் நாம் கவனிக்கவேண்டியது, கிறிஸ்து செய்யும் விசித்திரமான செயலைப் பற்றி யோவான் ஸ்நானகன் விவரிப்பதையே. அவரை‘உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிறவர்’ என்று சொல்கிறார்.
கிறிஸ்து ஒரு இரட்சகர். அவர் இந்த உலகத்திற்கு ஒரு தத்துவஞானியாக வரவில்லை. அவர் இந்த உலகத்திற்கு நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொடுக்கும் போதகராக வரவில்லை. அவர் இந்த உலகத்திற்கு ஒரு நல்ல மனிதனாக வாழ்ந்து காட்ட வரவில்லை. அவர் இந்த உலகத்திற்கு பாவிகளை தங்களுடைய பாவங்களிலிருந்து இரட்சிக்க பாவத்திற்கு பரிகாரியாக வந்தார். அவர் எந்த மனிதனாலும் செய்ய முடியாத காரியத்தை செய்ய வந்தார். பணமோ படிப்போ பெற்றுக்கொடுக்க முடியாததை பெற்றுக்கொடுக்க வந்தார். அவர் பாவத்திலிருந்து மனிதர்களை விடுவிக்க தம்மையே பலியாக கொடுக்க இரட்சகராக வந்தார்.
கிறிஸ்து ஒரு முழுமையான இரட்சகர். அவர் பாவத்தைச் சுமந்துதீர்க்கிறவர். அவர் வெறும் வார்த்தைகளைச் சொல்லவில்லை. நான் கருணை உள்ளவன், நான் உங்களை மன்னிக்கிறேன், என்று சும்மா சொல்லவில்லை. அவர் மெய்யாகவே நம்முடைய பாவங்களை தம்மீது சுமத்திக்கொண்டு, அதற்கான தண்டனையை சகித்தார், “அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்” (1 பேதுரு 2:24). அவரை விசுவாசிக்கும் எல்லாருடையை பாவத்தையும் அவர் சுமந்து தீர்த்தார். அவர்கள் பாவம் செய்யாதவர்கள் போலாக்கப்பட்டார்கள். தேவனுடைய ஆட்டுக்குட்டியானவர் அவர்களுடைய பாவங்களை எல்லாம் கழுவி அகற்றிவிட்டார்.
கிறிஸ்து ஒரு சர்வவல்லமையான இரட்சகர். அவர் மனிதகுலத்திற்கு ஒரே இரட்சகர். அவர் உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கிறவர். அவர் யூதர்களுக்கு மட்டும் மரிக்கவில்லை, அவர் புறஜாதிகளுக்கும் மரித்தார். அவர் ஒரு சில மனிதர்களுக்கு மட்டும் பாடுபடவில்லை, அவர் எல்லா மனிதர்களுக்காகவும் பாடுபட்டார். அவர் சிலுவையில் சிந்திய இரத்தம் எல்லாருடைய பாவங்களையும் கழுவ சக்தி வாய்ந்தது. அது எல்லாருடைய பாவ கடன்களையும் அடைக்க வல்லமையுள்ளது. ஆனால் அவருடைய இரத்தமானது, அவர் முன்குறித்த, அவர் தெரிந்துகொண்ட, அவர் அழைத்த, அவரை விசுவாசிக்கும் எல்லா மனிதர்களின் எல்லா பாவங்களையும் முற்றிலும் கழுவியது.
இவையெல்லாம் விலைமதிக்க முடியாத சத்தியங்கள். திருச்சபை மக்கள் எல்லாரும் இந்த உண்மைகளுக்கு அதற்குரிய மதிப்பைக் கொடுத்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். மிகவும் பழக்கப்பட்ட வசனங்கள் இவை, அதனால் இதை மேலோட்டமாக படித்து நிராகரித்துவிடுவது வழக்கமாகிவிட்டது. இந்த வசனங்களை படித்து, நினைவில் வைத்து, இருதயத்தில் பதித்துக்கொள்பவர்கள் பாக்கியவான்கள்.
மூன்றாவது, இந்த வாக்கியத்தில் நாம் கவனிக்கவேண்டியது, கிறிஸ்துவின் விசித்திரமான பணிகளைப் பற்றி யோவான் ஸ்நானகன் சொல்வதே. அவரை ‘பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர்’ என்று சொல்கிறார்.
ஞானஸ்நானம் என்று இங்கு சொல்லப்படுவது தண்ணீரினால் செய்யப்படும் ஞானஸ்நானம் கிடையாது. முழுக்கு ஞானஸ்நானம் அல்லது தெளிப்பு ஞானஸ்நானம் என்பதைப் பற்றியது கிடையாது. குழந்தை ஞானஸ்நானம் அல்லது வளர்ந்தவர்கள் ஞானஸ்நானம் என்பதைப் பற்றியது கிடையாது. இது எந்த மனிதனாலும் கொடுக்க முடி.யாத ஞானஸ்நானம். ஆங்கிலிக்கன், பிரஸ்பைட்டேரியன், பெந்தேகோஸ்தே, தனிச்சபை என்று எந்த சபை போதகராலும் கொடுக்க முடியாத ஞானஸ்நானம். இது திருச்சபையின் தலைவராகிய கிறிஸ்து தம்முடைய கரத்தினால் கொடுக்கும் ஞானஸ்நானம். இதிலே அவர் உள்ளான மனிதனுக்கு கிருபைகளை வழங்குகிறார். இதுதான் புதிய பிறப்பு. இது சரீரத்தின் ஞானஸ்நானம் கிடையாது, இது இருதயத்தின் ஞானஸ்நானம். இதுவே சிலுவையில் தொங்கிய கள்ளனும் பெற்றுக்கொண்ட ஞானஸ்நானம், தெளிப்பினாலும் அல்ல முழுக்கினாலும் அல்ல, பரிசுத்த ஆவியினால் பெற்றுக்கொண்டது. இது சபையில் உறுப்பினர்களாக இருந்த அனனியாவும் சப்பிராவும் பெற்றுக்கொள்ளாத ஞானஸ்நானம்.
ஒன்றை மற்றும் தெளிவாக நாம் அறிந்துகொள்வது நல்லது. யோவான் ஸ்நானகன் இங்கு சொல்லும் ஞானஸ்நானம் தான் நம்முடைய இரட்சிப்புக்கு அவசியமான ஞானஸ்நானம். வெளிப்படையான திருச்சபையில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வது நல்லது. அதைவிட மிகவும் மேன்மையானது என்னவென்றால் மெய்யான விசுவாசிகள் அடங்கிய கிறிஸ்துவின் திருச்சபையில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வது. தண்ணீர் ஞானஸ்நானம் மிகவும் ஆசீர்வாதமான பாக்கியம். அதை நிராகரிப்பது பாவம். ஆனால் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் அதைவிட முக்கியமானது. கிறிஸ்துவினால் இருதயத்திலே ஞானஸ்நானம் பெறாமல் மரிப்பவன் இரட்சிக்கப்படவே முடியாது.
இந்த வசனங்களைக் கற்றுக்கொண்ட நாம் மெய்யாகவே பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டோமா என்று அறிந்துகொள்வோம். உண்மையிலே நாம் தேவனுடைய ஆட்டுக்குட்டியை கனப்படுத்துகிறோமா என்பதை சோதித்துக்கொள்வோம். வேதனைக்குறிய உண்மை என்னவென்றால், ஆயிரக்கணக்கான மக்கள் தண்ணீர் ஞானஸ்நானத்தைக் குறித்து வாதாடி நேரத்தை வீணாக்கிக்கொண்டு, இருதயத்தின் ஞானஸ்நானத்தை நிராகரித்துக்கொண்டிருக்கிறார்கள். தேவனுடைய ஆட்டுக்குட்டியைப் பற்றிய மேலோட்டமான அறிவிலேயே திருப்தியாக இருக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய ஆட்டுக்குட்டியைப் விசுவாசத்தினால் நாடவில்லை. பாவங்களை எல்லாம் தேவனுடைய ஆட்டுக்குட்டியானவர் சுமந்துதீர்த்தார் என்று விசுவாசத்தினால் அவரைத் தேடுவது புத்திசாலித்தனம். நம்முடைய ஆத்துமா இரட்சிக்கப்பட நாம் தேவனுடைய ஆட்டுக்குட்டியானவரை விசுவாசித்து, பரிசுத்த ஆவியானவரால் இருதயத்திலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வோம்.
நன்றி: கிறிஸ்துவின் மகிமை
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|