தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இறைவன் இருக்கின்றாரா? அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவரா?  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இறைவன் இருக்கின்றாரா? அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவரா?  Empty இறைவன் இருக்கின்றாரா? அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவரா?

Thu Jul 23, 2015 8:42 pm
Praise The Lord JESUS இறைவன் இருக்கின்றாரா? அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவரா? 
========================================================
நாத்திகவாதிகள் இறைவன் என்பவர் இல்லை என்ற விடயத்தில் தெளிவாக இருக்கின்றார்கள். இதற்கு மாற்றுக் கருத்து அவர்களிடம் கிடையாது. ஆனால் இறைவன் இருக்கிறார் என்று நம்பும் ஆத்திகவாதிகள் “இறைவன் இருக்கின்றார். ஆனால் என் இறைவன் மட்டுமே இருக்கின்றார். மற்ற இறைவனெல்லாம் வெறும் கற்பனைகளும், பொய்யும் தான்” என்னும் கருத்தைத் தங்களுடைய மதத்திற்கு ஊடாக விதைக்கின்றனர். ஆத்திகவாதிகளில் சிலர் இதற்கு எல்லாம் ஒரு படி மேலே போய் ‘நான் தான் இறைவன்’ என்றும் கூறிக் கொண்டு இருக்கின்றார்கள்.

கடவுள் இருக்கின்றார் என்று கூறும் ஆத்திகவாதிகள் வெவ்வேறு கருத்துக்கள் கூறுவதினால் “இறைவன் இருக்கின்றாரா?” என்றக் கேள்வி மெய்யாகவே எழுகின்றது. இறைவன் இருக்கின்றாரா? அப்படி இருந்தால் அவர் எந்த மதத்தினைச் சார்ந்தவர்?
அன்பு நண்பர்களே.. இந்த ஆக்கத்தை மதவெறி கொண்டு வாசிக்காமல், நடுநிலையோடு நின்று வாசியுங்கள். அப்போது மெய் சத்தியம் உங்களுக்குப் புலப்படும்.
உலகில் உள்ள பெரிய மதங்கள் யாவும் ஆசியா கண்டத்திலேயே தங்களது பிறப்பினைக் கொண்டு இருக்கின்றன.
சமணம் மற்றும் பௌத்தம் ஆகியவை நாத்திக மதங்கள். அவை இறைவன் இல்லை என்ற கொள்கையினை உடையவை. புத்தரால் தோற்றுவிக்கப்பட்டதும் அசோகரால் நாடு முழுக்கப் பரப்பப்பட்ட புத்த மதம், இலங்கையில்,சீனாவில்,ஜப்பானில் இருக்கின்றது. ஆனால் அந்த மதம் பிறந்த இடமான இந்தியாவில் இன்று அது பெரிய அளவில் இல்லை. இதே நிலை தான் சமண மதத்திற்கும்.
இன்று இந்தியா என்றால் அது இந்து நாடு என்கின்றார்கள் பெரும்பான்மையினர். உண்மையிலே இந்தியா சைவம், வைணவம் இணைந்த இந்து சமயத்தினரின் நாடு தானா? இது தான் உலகில் மிகவும் பழமையான மதம் என்கின்றார்களே அது உண்மையா? அப்படியாயின் மெய்யான இறைவன் பழமையான மதமாகிய இந்து மதத்தில் தானா இருக்கின்றார்?
இந்து, இந்திய மதங்கள், இந்துத்துவம், இந்துமதம் இவை அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளன போல் காணப்படுகின்றன. ஆனால் ஆராய்ந்து பார்த்தால் இவை ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்டது.
‪#‎இந்து_என்றால்_என்ன‬?
========================================================
இந்து என்ற சொல்லை ஆராய்ந்தால் “சிந்து” என்ற சொல்லை பாரசீகர் இந்து என்று உச்சரித்தனர். சிந்து நதியைச் சுற்றிலும் வாழ்ந்த திராவிட மக்களை அச்சொல் குறித்தது. இந்து என்ற சொல் மதத்துடன் தொடர்புடையது அல்ல. அது திராவிடர்களை குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. திராவிடர்கள் அத்தனைபேரும் சைவ, வைணவர்கள் அல்ல.

‪#‎இந்திய_மதங்கள்_என்றால்_என்ன‬?
========================================================
இந்தியாவில் தோன்றிய மதங்கள் அனைத்துமே இந்திய மதங்கள் ஆகும்.

1.பௌத்தம்
2.சமணம்
3.சைவம்
4.வைணவம்
5.சீக்கியம்.

இந்துத்துவம் என்றால் என்ன?
========================================================
இந்துத்துவம் என்பது ஒரு மதம் அல்ல. இது ஒரு வாழ்க்கை முறை. ஆரியர் பிறப்பால் உயர்ந்தவர், திராவிடர் பிறப்பால் தாழ்ந்தவர் என்பதை ஏற்றுக்கொண்டு வாழும் ஆரிய வாழ்க்கை முறையாகிய சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையே இந்துத்துவம் அல்லது இந்துத்துவா என்று அழைக்கப்படும்.

இந்துத்துவா என்பது ஆரியர்களால் உருவாக்கப்பட்ட “மனுநூல்” அடிப்படையிலான சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கை. ஆரியர் பிறப்பால் உயர்ந்தவர், ஆளுகை செய்வதற்கென்றே பிறந்தவர், ஆரியர்களுக்குச் சேவை செய்வதையே தங்கள் பிறவிக் கடமையாக கொண்டவர் திராவிடர், ஆரியர்களை எதிர்க்கும் திராவிடர்கள் ஆரியர்களின் எதிரிகள் என்பவற்றை ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை முறையை நிலை நாட்டுவதற்கென்றே உருவாக்கப்பட்ட பெயர்தான் “இந்துத்துவம்”.
இந்து மதம் என்றால் என்ன?
========================================================
இந்து மதம் என்ற பெயர் எல்லா இந்திய மதங்களையும் குறிக்க வேண்டும். இருந்தாலும், சைவம் வைணவம் ஆகிய இரு மதங்களை மாத்திரம் குறிக்க பயன்படுத்துகின்றனர். இந்துமதம் எனப்படும் சைவம், வைணவம் என்பவை தமிழர்களின் அல்லது திராவிடர்களின் மதம். இவை ஆரியர்களின் மதம் அல்ல.

தமிழர் என்ற தமிழ்ப் பெயரை சமஸ்கிருதத்தில் கூறினால், (தமிழர்-திரமிளர்-திரமிடர்-திரவிடர்-திராவிடர்) “திராவிடர்” என்று ஆகிறது. தமிழ்மொழி என்பது சமஸ்கிருதத்தில் “திராவிட பாஷா” என்று குறிப்பிடப்படுகின்றது.
சைவ சமயத்தை உருவாக்கிய 63 நாயன்மார்களும் வைணவ சமயத்தை உருவாக்கிய 12 ஆழ்வார்களும் தமிழ்நாட்டில் மட்டுமே பிறந்தவர்கள். சைவ சமய இலக்கியங்களான 12 திருமுறையும், வைணவ சமய இலக்கியங்களான 4000 திவ்விய பிரபந்தமும் தமிழ் மொழியில் மட்டுமே இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பழமையான சைவக் கோவில்கள் 270ல் 230 சைவக் கோவில்களும், பழமையான 108 வைணவத் திருப்பதிகளில் 96 திருப்பதிகளும் தமிழ்நாட்டில் இருக்கின்றன. ஆகவே சைவமும், வைணவும் தமிழர் சயங்கள் அல்லது திராவிட சமயங்கள் என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.
சைவம் மற்றும் வைணவ மதங்கள் வட நாட்டினில் தோற்றம் பெற்று இருந்தன என்றால்,
அம்மதங்களின் தலைமைக் கோவில்கள் வடநாட்டில் அல்லவா இருக்க வேண்டும். மாறாக அவ்விரு மதங்களுக்குரிய தலைமைக் கோவில்கள் இந்தியாவில் வேறு எங்குமின்றி தமிழகத்தில் இருக்கின்றன. சைவத்தின் தலைமைக் கோவில் சிதம்பரம் தமிழகத்திலேயே இருக்கின்றது. வைணவத்தின் தலைமைக் கோவில் திருவரங்கம் தமிழகத்திலேயே இருக்கின்றது.
சமஸ்கிருதத்தினால் வட நாட்டினில் உருவாகியது என்று இன்று சொல்லப்படுகிற மதங்களுக்கு,
தமிழ்நாட்டில் அதுவும் தமிழ் மொழியில் இவ்வளவு சிறப்பு ஏன் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். சமஸ்கிருதம் தான் இறைவனின் மொழி என்றால் நியாயப்படி இந்த மதங்கள் எல்லாம் சமஸ்கிருதம் பேசப்பட்ட இடத்தில் சமஸ்கிருதத்தைப் பேசியவர்களால் சமஸ்கிருதத்தால் தானே உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்? ஆனால் இந்த மதங்கள் தமிழ் மண்ணில் தோன்றின. இறைவன் இல்லை என்று சொல்லிய மதங்கள் ஆன பௌத்தமும் சமணமும் வட நாட்டினில் தோன்றிய பொழுது, இறைவன் உண்டு என்றுக் கூறிய இந்த மதங்கள் வட நாட்டினில் தோன்றாமல் தமிழகத்தில் தோன்றி இருக்கின்றன.

கி.பி 5ம் நூற்றாண்டிற்குப் பின் உருவான சைவ, வைணவ இலக்கியங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் 5 ஆகும். இந்துமதம் என்று அழைக்கப்படும் சைவம், வைணவம் இரண்டும் இக் கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு விளங்குகின்றன. அந்த 5 கோட்பாடுகளும் இவைகளே :-
========================================================
1.மூவொருமைக் கோட்பாடு 
2.அவதாரக் கோட்பாடு
3.பலிநிறைவேற்றக் கோட்பாடு
4.பாவமன்னிப்புக் கோட்பாடு
5.விசுவாசத்தினால் மீட்புக் கோட்பாடு.

சைவ, வைணவ சமய இலக்கியங்களுக்கு அடிப்படையாக உள்ள இக் கோட்பாடுகளை கிறிஸ்தவத்திற்கு முன் இந்தியாவில் இருந்த வழிபாடுகள் மற்றும் சமயங்களில் காணமுடியாது என்பது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. அப்படியிருக்கு கிறிஸ்துவிற்கு முன் தோன்றிய தமிழர்களால் உருவாக்கப்பட்ட மதங்கள் இன்றைய நடைமுறைக்கு எதிராக அல்லது மாறாக இருந்திருக்கின்றது.
ஆகவே இன்று இந்தியா என்றால் அது இந்துக்களின் (சைவ, வைணவத்தினரின்) நாடு என்று சொல்வதும், சைவ, வைணவம் தான் உலகில் மிகவும் பழமையான மதம் என்பதும், மெய்யான இறைவன் பழமையான மதமாகிய இந்து மதத்தில் தான் இருக்கின்றார் என்பதும் மிகத் தவறானது. ஏனென்றால் இன்று இருக்கும் இந்து சமயம் அன்று இல்லை. இன்று இருக்கும் இந்து சமயக் கடவுளர்கள் அன்று இல்லை.
தொடர்ந்தும் என்னுடன் இணைந்திருங்கள்.
இது சத்தியத்தை அறிந்துகொள்ள ஓர் அருமையான தேடல். நீங்கள் அறிந்திராததும், மறுக்க முடியாததுமான தகவல்கள் ஆதாரங்களுடன் வர இருக்கின்றன.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
இயேசுகிறிஸ்து உங்களை நேசிக்கின்றார்.
ஆமென் ..


(இயேசுவே வழி, சத்தியம், ஜீவன்!)
WEB SITE http://www.jesusmaycometoday.com/
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இறைவன் இருக்கின்றாரா? அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவரா?  Empty Re: இறைவன் இருக்கின்றாரா? அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவரா?

Thu Jul 23, 2015 8:44 pm
Praise The Lord JESUS வேதங்கள் என்றால் என்ன? 
========================================================
இந்தக் கேள்வியினை இன்று மக்கள் மத்தியில் கேட்டால் பொதுவாக வேதங்கள் என்றால் அவை ஆன்மீகச் சிறப்புமிக்கவை. அவை எண்ணிக்கையில் நான்காகும் (ரிக் வேதம், யசுர் வேதம், சாம வேதம் அதர்வண வேதம்). என்ற விடையே விரைவாக கிட்டும். அதற்குக் காரணம் சமூகத்தில் அவர்கள் இப்படித் தான் கற்கின்றார்கள். வேதங்கள் இறைவனின் வாக்குகளைக் கொண்டு இருக்கின்றன என்றும், சமயங்கள் அனைத்தும் அவற்றில் இருந்தே தோன்றின என்றும் வேதங்களைப் பற்றிய கருத்துக்கள் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன.

ஆனால் இந்தக் கருத்துக்களை குறிப்பாக சைவ வைணவ மற்றும் தமிழ் பெரியோர்கள், வேதத்தில் இருந்து தான் சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்றக் கருத்துக்களை தொன்று தொட்டே மறுத்து வந்து உள்ளனர். இந்நிலையில், வேதத்திற்கும் சைவ வைணவ சமயங்களுக்கும் தொடர்பு இருக்கின்றதா? என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் முதலில் வேதங்களைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.
முதலில் வேதங்கள் என்றால் என்னவென்று காண்போம். பொதுவாக வேதங்கள் நான்கு எனப்படினும், அவற்றுள் முக்கியமானதொன்றாக விளங்குவது ரிக் வேதம் தான். ஏனைய வேதங்கள் ரிக் வேதத்தின் மறு வடிவமைப்புகளாகவே திகழ்கின்றன. இம்மூன்றில் யசுர் வேதம் பெரும்பாலும் ரிக் வேதத்தின் பாடல்களைக் கொண்டு இருப்பதுடன் பலி செய்வதற்குரிய முறைகளை விளக்கும் பாடல்களையும் கொண்டுள்ளது. இரண்டாவதாக சாம வேதம், சோம பானம் தொடர்பான பாடல்களைக் கொண்டு விளங்குவதுடன் ரிக் வேதத்தின் ஒன்பதாவது மண்டலத்தின் பாடல்களையும் அதிகமாகக் கொண்டு உள்ளது. அதர்வண வேதம் ரிக் வேதத்தின் பெரும்பாலான பாடல்களைக் கொண்டு இருந்தாலும் மந்திரம் மாயம் தொடர்பான பாடல்களையே அதிகமாகக் கொண்டுள்ளது.
அதுவும் சாம வேதத்தில் இருக்கும் 1875 பாடல்களில் 75 பாடல்கள் மட்டுமே புதியவைகளாக இருக்கின்றன. ஆய்வாளர்கள் கருத்துப் படி இசையமைக்கப்பட்ட ரிக் வேதப் பாடல்களே சாம வேதம் என்று வழங்கப்படுகின்றன. அதாவது நான்கு வேதங்கள் என்று இவை தனித்தனியே இன்று வழங்கப்பட்டாலும் பொதுவாக பார்த்தால் அனைத்து வேதங்களும் ரிக் வேதத்தை சார்ந்தே இருக்கின்றன.
ரிக் வேதத்தில் காணப்படும் தெய்வங்கள் பலர் இயற்கையின் உருவகங்களாகவே உள்ளனர். காற்று, மரம், ஆறு, மலை, வானம், கதிரவன் போன்றவை வழிபடப்பட்டு உள்ளன. மேலும் சோமபானம் என்னும் குடிவகையும் தெய்வமாக வழிப்படப்பட்டது. தெய்வங்களாக வழிபடப்பட்டவற்றில் மருத், இந்திரன் போன்றோர் வீரர்களாகக் காட்டப்படுகின்றனர். சமயக் குருக்களாக அக்னி, பிரகசுபதி ஆகியோர் காட்டப்பட்டு உள்ளனர். மேலும் வேதங்களில் பல பெண் தெய்வங்களைப் பற்றியும் கூறப்பட்டு உள்ளன. கூடுதலாக தமிழர்களிடம் இருந்தது போல் நினைவுத் தூண் வழிபாடும் வேதங்களில் குறிக்கப்பட்டு இருக்கின்றது. இன்னும் பலி வழிபாடும், மர வழிபாடும் வேதங்களில் இடம் பெற்று இருக்கின்றன. இன்று சைவ, வைணவ சமயத்தவர்களிடம் இருக்கும் முழு முதற் கடவுளர்கள் யாரும் இந்த வேதங்களில் இல்லவே இல்லை.
வேதங்களைப் பற்றிப் பேசினீர்கள். வேதாந்தங்களைப் பற்றி ஏன் கூறவில்லை? வேதங்களின் ஒரு பகுதி தான் அவை அல்லவா? அவை முழு முதற் கடவுளைப் பற்றிப் பேசுகின்றது அல்லவா? என்று நீங்கள் கூறினால், முதலில் ஒரு விடயத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வேதாந்தங்கள் என்றச் சொல்லானது வேதா + அந்தங்கள் அதாவது வேதத்தின் முடிவு பொருளைத் தருபவை என்று பொருள் தருவது. இதனை உபநிடங்கள் என்றும் வழங்குவர். இவை வேதங்களைத் தொடர்ந்து அவற்றை விளக்க எழுதப்பட்டவை. வேதாந்தங்கள் என்பவை உண்மையில் உபநிடங்கள் என்றே வழங்கப்பட்டன. பின்னரே ஏதோ ஒரு காரணத்திற்காக பிராமணர்களால் அவை வேதங்களின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டன. அதனைத் தவிர்த்து வேதங்களுக்கும் வேதாதங்களுக்கும் எந்தத் தொடர்பு இல்லை. ஆரிய வேதம் பற்பல சிறுதெய்வத் திரட்டேயாதலால் ஓரே, முழுமுதற் கடவுளை உணர்த்தும் உபநிடதத்திற்கும் அதற்கும் மண்ணிற்கும் விண்ணிற்கும் போன்று அடைக்கமுடியாத இடைவெளியுள்ளது.
வேதங்கள் இறைவனிடம் நாம் ஏதாவது பெற வேண்டும் என்றால் அவனுக்கு எதையாவது நாம் காணிக்கையாகத் தர வேண்டும். அதாவது பலி வேண்டும் என்கின்றது. உபநிடங்களோ இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள உறவைப் பற்றிப் பேசி மனிதனை இறைவன் அறிவான். அவன் பலி எதுவும் வேண்டுவது இல்லை. என்றுக் கூறி பலியினை மறுக்கின்றது. வேதங்கள் ஆன்மாவினைப் பற்றிப் பேசவே இல்லை. உபநிடங்களோ ஆன்மாவினை அடிப்படையாக கொண்டு இருக்கின்றன. வேதங்கள் இயற்கை வழிபாட்டினை உடையதாக இருக்கின்றது. உபநிடங்களோ பக்தி வழிபாட்டினை உடையனவாக இருக்கின்றன. 
இப்பொழுது வேதங்களின் காலத்தையும் அவை யாரால் யாருக்காக எதுக்காக உருவாக்கப்பட்டன என்றும் காண்போம். பொதுவாக வேதங்களின் காலம் என்றாலே அது ஏதோ ஒரு மிகப் பழமையான காலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே பலரின் எண்ணத்திற்கும் வரும். அதற்குக் காரணம் அப்படிப்பட்ட கருத்துக்கள்தான் மக்களிடையே பரப்பப்பட்டு இருக்கின்றன. வேதங்கள் மிகப் பழமையானவை என்று கூறப்படினும், இக்கருத்தைக் கூறுவதற்கு அடிப்படையான தொல்பொருள் சான்றுகளோ, வரலாற்றுச் சான்றுகளோ, நினைவுச் சின்னங்களோ, நாணயங்களோ கிடைக்கப் பெறவில்லை என்பதும், கிடைத்துள்ள எழுத்துப் படிவங்களும் அண்மைக் காலதிற்குரியவனவாக உள்ளன.

வேதங்களும், உபநிடதங்களும் சமசுகிருத மொழியிலேயே கிடைக்கப் பெறுகின்றன. சமஸ்கிருதம் என்ற மொழியின் சான்றுகள் கி.பி இரண்டாம் நூற்றாண்டிலேயே தான் கிகிடைக்கப் பெற ஆரம்பிக்கின்றன. மேலும் சமஸ்கிருதம் என்றால் செம்மையாக செய்யப்பட்ட மொழி என்றும் பொருள் தருகின்றது. எனவே வேதங்களின் காலமும் சமஸ்கிருதத்தின் காலமாகத் தான் இருக்க முடியும். எனவே வேதங்களின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டிற்கு பின்னரே என்பதில் எந்த ஒரு சந்தகமும் இருக்க முடியாது.
பொதுவாக எவராலும் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கருத்து தான் இது. அதுவும் வேதங்களைப் பொறுத்த வரைக்கும் இக்கருத்தினை எவரும் ஏற்றுக் கொள்வது முதலில் அரிது தான். காரணம் வேதங்கள் வாய் வழியாகவே சொல்லப்பட்டு வந்துள்ளன என்றே நம்மிடம் கூறப்படுகின்றது. அவ்வாறு இருக்கையில் எவ்வாறு அவை எழுத்துருவில் கிடைக்கப் பெறும் காலத்தையே வேதங்களின் காலம் என்றுக் கூற முடியும்? என்றக் கேள்வி எழலாம். இக்கேள்விக்கு பதில் தேடும் முன் ஒரு கேள்வியினை இங்கே முன் வைக்க விரும்புகின்றேன். ஆயிரமாயிரம் காலமாக வாய் வழியாகவே கூறப்பட்டு வந்த ஒன்றை திடீர் என்று எழுத்து வடிவத்தில் கொண்டு வர வேண்டிய தேவை ஏன் வந்தது?
வேதங்கள் என்பவை தொகுக்கப்பட்ட நூல்களே ஆகும். கிறிஸ்துவிற்குப் பிற்பட்ட காலத்தில் தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு புது மொழியினில் அக்காலத்தில் இந்திய தேசத்தில் இருந்த மக்கள் பலருக்கும் ஒரு கருத்தினைத் தெரிவிக்க தொகுக்கப்பட்டவை தான் வேதங்கள். தமிழர்களால் உருவாக்கப்பட்ட அந்தப் புதிய மொழி தான் சமஸ்கிருதம். வேதங்களைத் தொகுத்தவர் வியாசர் என்னும் திராவிடர்.
இன்று இந்து சமயத்தவர்களிடம் சென்று உங்களுக்கு பிடித்த இறைவன் யார் என்று கேட்டால்

“சிவன்,முருகன்,பிள்ளையார்,பெருமாள்,அம்மன்,ஐயப்பன்” போன்ற பெயர்கள் பதிலாக வருமே அன்றி “இந்திரன்,வருணன்,அக்னி,வாயு,பிரஜாபதி” போன்ற பெயர்கள் பதிலாக வரும் வாய்ப்புகள் மிக மிக அரிது. ஆனால் சிவன்,முருகன்,பிள்ளையார்,பெருமாள்,அம்மன்,ஐயப்பன் போன்ற இந்தப் பெயர்கள் எதுவும் வேதங்களில் குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இந்திரன்,வருணன்,அக்னி,வாயு,பிரஜாபதி போன்ற பெயர்கள் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுள்களின் பெயர்கள். இக்கடவுள்களுக்கே வேதத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவ்வாறு வேதத்தில் சிறப்பிக்கப்பட்டு இருக்கும் இக்கடவுள்கள் சைவ வைணவ சமயங்களில் ஏதோ ஒரு மூலையில் இருப்பதையே நாம் இன்று காண முடிகின்றது. ஏன் இந்த மாற்றம்? வேதத்தில் இருந்தே சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்றால் வேதம் போற்றிய இந்திரன்,வருணன் போன்ற கடவுள்களைத் தானே சைவ வைணவ சமயங்களும் போற்றி இருக்க வேண்டும் மாறாக வேறு தெய்வங்களை முதன்மைப்படுத்தி அச்சமயங்கள் விளங்கிக் கொண்டு இருப்பது ஏன்?
மேலும், வேதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள தெய்வங்கள் அனைவருக்கும் பலி இட்டு வணங்கும் முறையே காணப்படுகின்றது. இறைவனை கவர பலி தேவை என்பதே வேதக் கொள்கை. வேதங்கள் இக்கருத்துக்களையே கூறுகின்றன. இப்பொழுது இந்த பலி இடும் பழக்கம் சைவ வைணவ சமயங்களில் காணப்படுகின்றனவா என்று கண்டால் இல்லை என்பதே பதிலாக வருகின்றது. சிவன் கோவில்களிலோ அல்லது பெருமாள் கோவில்களிலோ பலி இடும் பழக்கம் கிடையாது. அங்கே பலிபீடங்கள் இருக்கின்றன அனால் பலி கிடையாது. இப்பழக்கமே முருகன் கோவில்களிலும், பிள்ளையார் கோவில்களிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதாவது இன்று பெருவாரியான மக்களால் வணங்கப்படும் தெய்வங்களுக்கு பலி இட்டு வணங்கும் வழிபாட்டு முறை இல்லை.
வேதங்கள் பலி வழிபாட்டு முறையினை உடையவை. சைவ வைணவ சமயங்களிலோ பலி கிடையாது. ஏன் இந்த வேறுபாடு என்று ஆராய்ந்தால் நமக்கு இரு தரப்புகளிடம் இருந்து இரு வேறு பதில்கள் வருகின்றன. ஒரு தரப்பினர் வேதங்களை நம்பிகின்ற தரப்பினர். மற்றொருவர் கடவுள் நம்பிக்கை அற்ற தரப்பினர். இப்பொழுது அவர்கள் கூறும் கூற்றினைக் காண்போம்.
முதலில் வேதங்களை நம்பும் தரப்பினரின் கூற்றினைக் காண்போம். இவர்களின் கூற்றின் படி வேதங்களில் பலி வழிபாட்டு முறை இருந்தாலும் வேதாந்தங்களில் பலி மறுப்பு கோட்பாடுகள் இருக்கின்றனவே. எனவே பலி மறுப்பும் வேதங்களின் கோட்பாடுகளே என்கின்றனர். ஆனால் இப்பொழுது சில கேள்விகள் எழுகின்றன. ஏன் இந்த திடீர் மாற்றம்? வேதாந்தங்கள் வேதத்தின் அடிப்படையில் எழுந்தன என்றால் திடீர் என்று கோட்பாடுகளின் ஏன் மாற வேண்டும். பலி என்ற விடயம் ஒன்று தான் என்று இல்லை பல விடயங்கள் வேதங்களுக்கும் வேதாந்தங்களுக்கும் இடையே மாறுபடுகின்றன. வேதத்தில் இருக்கும் இயற்கை வழிபாட்டு முறை வேதாந்தத்தில் இல்லை மாறாக ஒரு கடவுள் வழிபாட்டு முறை காணப்படுகின்றது. மேலும் வேதத்தில் இல்லாத ஆன்மா, மனிதன் இறைவனை அடைய வழி போன்ற பல கருத்துக்கள் வேதாந்தத்தில் காணப்படுகின்றது. வேதத்திற்கும் வேதாந்தங்களுக்கும் ஏன் இந்த வேறுபாடு என்ற கேள்விக்கு இது வரை பதில் இல்லை. சைவ வைணவத்துக்கும் வேதத்திற்கும் உள்ள வித்தியாசத்தை காண நாம் வேதாந்தங்களை அணுகினால் கேள்வி வேதத்திற்கும் வேதாந்தத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் ஏன் என்ற நிலைக்கு சென்று விட்டது. இக்கேள்விக்கு விடை இதுவரை கிட்டாததால் நாம் இப்பொழுது மற்ற கூற்றினைக் காண வேண்டி இருக்கின்றது.
அவர்களின் கூற்று நம்மை சமண புத்த சமய காலத்திற்கு அழைத்துச் செல்கின்றது. அவை பலி மறுப்பு கோட்பாடு உடைய சமயங்கள். கி.மு 6ம் நூற்றாண்டில் இருந்து கி.பி 10ம் நூற்றாண்டு வரை இந்திய மண்ணில் நிலை பெற்று சிறந்து விளங்கிய சமயங்கள். அதுவும் அசோகரின் காலத்தில் கொடி கட்டி பறந்த சமயங்கள். அக்காலத்தில் மக்கள் பலர் இச் சமயக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டு இருந்ததால் பலி இடும் பழக்கங்கள் சற்று நலிவடைந்து இருந்தன.
பலி வழிபாட்டினை உடைய மக்கள், பலி மறுப்பு சமயங்களான சமணத்திற்கும் புத்ததிற்கும் மக்களிடையே பெருகும் செல்வாக்கினைக் கண்டு, மக்களை தன் பால் இழுக்க பலி வழிப்பாட்டு முறையினை மாற்றி பலி இல்லா முறைகளை வகுத்துக் கொண்டனர். அவ்வாறு மாற்றி தங்களது செல்வாக்கையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொண்டனர்.
எனவே தான் இன்றைய சைவ வைணவ சமயங்களில் பலி என்பது இல்லை. இதுவே அவர்களின் கருத்தாக இருக்கின்றது. இது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ள கூடிய கருத்து தான். மக்கள் மத்தியில் ஒரு கருத்து வலுப்பெற்று வருகின்றது என்றால் அக்கருத்துகளை வைத்து தங்களுக்கு ஆதாயம் தேடிக் கொள்ளும் வழிகளை உருவாக்கிக் கொள்கின்றவர்களை நாம் இன்றளவிலும் கண்டு கொண்டு தான் இருக்கின்றோம். எனவே சமண புத்தக் கொள்கைகளை சேர்த்துக் கொண்டு வேதக் கருத்துக்கள் உருமாறி இருக்கலாம் என்ற இவர்களின் கண்ணோட்டத்தை நாம் முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆனால் இவர்களின் கூற்றிலேயும் ஒரு கேள்வி எழுகின்றது.
சமண புத்த சமயங்கள் பலி மறுப்புச் சமயங்கள். ஆனால் சைவ வைணவச் சமயங்களோ பலி நிறைவேற்றச் சமயங்கள். அதாவது பலி நிறைவேறி விட்டது இனிமேல் பலி தேவை இல்லை என்ற கொள்கை உடைய சமயங்கள். எனவே தான் அக்கோவில்களில் பலிபீடங்கள் இருக்கின்றன ஆனால் பலி இல்லை. எனவே சமண புத்த சமயத்தில் இருந்து இந்தக் கொள்கையை (பலி இல்லா வழிபாடு) சைவமும் வைணவமும் பெற்று இருந்தன என்றால் இவற்றில் ஏன் இந்த வேறுபாடு என்றும் நாம் ஆராய வேண்டி இருக்கின்றது.
வேதக் கடவுள்கள் சைவ வைணவத்தில் சிறு நிலையில் இருப்பதும், சைவ வைணவக் கடவுள்களை பற்றி வேதத்தில் குறிப்புகள் காணப்படாது இருப்பதும், பலிக் கோட்பாடுடைய வேதத்தில் இருந்து எவ்வாறு பலி இல்லா வழிப்பாட்டுடைய சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்ற கேள்விக்கு விடை இல்லா காரணத்தினாலும், வேதத்தில் காணப்படும் பல கடவுள் வழிபாடு முறை மற்றும் இயற்கை வழிபாட்டு முறை போன்றவை சைவ வைணவத்தில் காணப்படாதமையும், சைவ வைணவத்தில் இருக்கும் ஒரு மூலக் கடவுள் (சைவம் -சிவன், வைணவம்-விஷ்ணு) என்ற கோட்பாடு வேதத்தில் காணப்படாதமையும், சைவ வைணவ சமயத்தின் அடிப்படையான இறைக் குடும்ப வழிப்பாட்டு பழக்கமும், அவதாரக் கோட்பாடும் வேதத்தில் காணப்படாதமையும் சைவமும் வைணவமும் வேதங்களில் இருந்து தோன்றிய சமயங்கள் அல்ல என்று கூறுவதற்கு வழி வகுக்கின்றன.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
இயேசுகிறிஸ்து உங்களை நேசிக்கின்றார்.
ஆமென் ..

(இயேசுவே வழி, சத்தியம், ஜீவன்!)
WEB SITE http://www.jesusmaycometoday.com/
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இறைவன் இருக்கின்றாரா? அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவரா?  Empty Re: இறைவன் இருக்கின்றாரா? அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவரா?

Thu Jul 23, 2015 8:46 pm
Praise The Lord JESUS இந்து சமயத்தில் மூவொரு கடவுள் கோட்பாடு எப்படி வந்தது? 
========================================================
கிறிஸ்தவத்தின் அடிப்படைத் தத்துவம் மூவொரு கடவுள் கோட்பாடு ஆகும். ஒரே கடவுள் மூன்று விதமான தன்மைகளில் தோன்றுகின்றார் என்று கிறிஸ்தவம் கூறுகின்றது. இதனை சற்று விரிவாக பார்க்கலாம்.

கிறிஸ்தவத்தின் படி ஒரே கடவுள் மூன்று வகையான நிலையில் இருக்கின்றார். அதாவது,
தந்தை நிலை - பரம பிதா.
பரிசுத்த ஆவி நிலை.
குமாரன் நிலை - இயேசுகிறிஸ்து.

மேலும் இறைவன் மனித வடிவில் மனிதர்களுக்காக வந்தார் என்ற அவதாரக் கோட்பாடும், பாவ மன்னிப்பு கோட்பாடும் கிறிஸ்தவத்தின் மற்ற முக்கிய தத்துவங்களாகும்.
இப்பொழுது நாம் கிறிஸ்தவத்தின் கருத்துக்கள் தான் சைவ வைணவ சமயங்களாக மாறி இருக்கின்றன என்று கூறினால் அச்சமயங்களில் கிறிஸ்தவத்தின் அடிப்படை தத்துவங்களான மூவொருக் கடவுள் கோட்பாடும் மற்ற கோட்பாடுகளும் காணப்பட வேண்டும். அவ்வாறு காணப்பட வில்லை என்றால் சைவ வைணவ சமயங்கள் கிறிஸ்தவக் கருத்துக்களின் அடிப்படையில் எழுந்தவை என்ற கருத்து பொய்த்து விடும். எனவே இப்பொழுது நாம் சைவ வைணவ சமயங்களின் கோட்பாடுகளை கண்டு விட வேண்டிய தேவை இருக்கின்றது. சைவ வைணவ சமயங்களில் மூவொரு கடவுள் கோட்பாடும் மற்ற கோட்பாடுகளும் இருக்கின்றனவா?.காண்போம்!
சைவ வைணவ சமயங்களைப் பற்றி நாம் அறிந்துக் கொள்வதற்கு முன்னர் ஒரு முக்கியமான விடயத்தை நாம் அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. ஆரம்ப காலத்தில் சைவம் மற்றும் வைணவம் என்ற மதங்கள் இரண்டாக பிரிந்து இருக்கவில்லை. இரண்டும் இணைந்து சைவம் என்றே இருந்தன. பிற்காலத்தில் தான் வைணவம் சைவத்தில் இருந்து பிரிந்து செல்கின்றது.
சைவம் - சிவனை முழுமுதல் கடவுளாக கொண்டது.
வைணவம் - பெருமாளை முழுமுதல் கடவுளாக கொண்டது.

இவ்விரு சமயங்களிலும் அவதாரக் கோட்பாடுகள் உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
வைணவத்தில் பெருமாளின் அவதாரங்களாக பத்து அவதாரங்கள் குறிக்கப்பட்டு உள்ளன. அதிலும் மனித உரு எடுத்து வந்த அவதாரங்களும் இருக்கின்றன.
அதே போல் சைவத்திலும் முருகன் மனித உரு எடுத்து உலகிற்கு வந்ததாக அவதாரக் கதைகளும் உள்ளன.
ஆனால் இந்த அவதாரக் கதைகளுக்கான சான்றுகள் வேதங்களிலோ அல்லது கிறிஸ்தவத்திற்கு முற்பட்ட கால இலக்கியங்களிலோ காணப்படவில்லை. சில கதைகள் உதாரணமாக இராமாயணக் கதைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்ததாக கூறப்பட்டாலும் அதற்குரிய சான்றுகள் இது வரை கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் காணப்படவில்லை என்பதே உண்மையான நிலையாக இருக்கின்றது.
இப்பொழுது நாம் சைவ வைணவ சமயங்களில் மூவொருமை கடவுள் கோட்பாடு இருக்கின்றதா என்று நாம் காண்போம்.
நாம் ஏற்கனவே மேலே கண்டுள்ளோம் சைவம் என்பது சிவனை முழுமுதற் கடவுளாக கொண்டது என்றும் வைணவம் என்பது திருமாலை முழுமுதற் கடவுளாக கொண்டது என்றும். ஆனால் அந்த சமயங்கள் அவர்கள் இருவரை மட்டும் வணங்குவதோடு நிற்கவில்லை. அந்த சமயங்கள் அவர்களின் குடும்பத்தினை வழிபடுவதாகவும் இருக்கின்றன. சைவ மதம் சிவனை வழிபடுவதோடு நில்லாமல் அம்மனையும் முருகன்/விநாயகரையும் சேர்த்து வழிபடும் ஒரு மதமாக இருக்கின்றது.
அதாவது,
தந்தை - சிவன்
தாய் - அம்மன்
பிள்ளை – முருகன் / பிள்ளையார்.

அதேப்போல் வைணவமும் பெருமாளின் குடும்பத்தினை வழிபடும் ஒரு சமயமாக இருக்கின்றது. ஆனால் இங்கே குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் சிவன் வைணவத்திலும் வணங்கப்படுகின்றார்.
அதாவது வைணவத்தின் படி வணங்கப்படும் கடவுள்கள்,
சிவன்
திருமால்
பிரமன்.

இவர்களைத் தான் நாம் மும்மூர்த்திகள் என்று வழங்குகின்றோம். அதாவது, 
சிவன் - அழிக்கும் கடவுள்
திருமால் - காக்கும் கடவுள்
பிரமன் - படைப்புக் கடவுள்

ஆனால் பெரும்பாலானோர் அறியாத ஒரு விடயம் என்னவென்றால் படைப்புக் கடவுளாக கூறப்படும் பிரமன் திருமாலின் மகனாக கூறப்பட்டுள்ளார்.
திருமால் கனவு காண்பதாகவும் அதிலிருந்து பிரமன் தோன்றியதாகவும் நமது புராணக் கதைகள் நீள்கின்றன. ஆனால் இங்கே குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் பெருமாளுக்கும் பிரமனுக்கும் இடையில் உள்ள உறவு தொப்புள் கொடி உறவாக குறிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக தொப்புள் கொடி உறவு என்பது ஒரு தாய்க்கும் சேய்க்கும் இடையில் உள்ள உறவு தான். அவ்வாறு இருக்க ஆணான பெருமாளுக்கும் பிரமனுக்கும் இடையில் உள்ள உறவு ஏன் தொப்புள் கொடி உறவாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்பதனை நாம் காண வேண்டி இருக்கின்றது.
புராணக் கதைகளில் விஷ்ணு பல இடங்களில் பெண் உருவம் எடுப்பதாக கதைகள் வருகின்றன. மேலும் சிவனும் பெருமாளும் இணைந்து ஐயப்பன் தோன்றுவதாகவும் நமது கதைகள் இருக்கின்றன. அதாவது
தந்தை - சிவன்
தாய் - பெருமாள்
பிள்ளை - ஐயப்பன்.

ஆனால் இந்தக் கதைகள் அனைத்திலும் சிவன் ஆணாகவே குறிக்கப்பட்டு உள்ளார். பெருமாள் ஆணாகவும் சித்தரிக்கப்பட்டு உள்ளார் பெண்ணாகவும் சித்தரிக்கப்பட்டு உள்ளார்.
ஒருவராக இருக்கின்ற கடவுளே மூவராக அதாவது மூவொருவராக விளங்குகின்றார். இதை பின்வரும் பாடல்களில் அறிந்து கொள்ளலாம்.
திருவாசகம்
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க

வைணவ அடியார்களின் பின்வரும் பாடலடிகளும் இதற்குச் சான்றாய் உள்ளன.
நம்மாழ்.திருவாய்: 3-6-2
மூவராகிய மூர்த்தியை

திருவாய் 1-9-1
உடம்பு உருவில் மூன்றொன்றாய் மூர்த்தி வேறாய உலகுய்ய நின்றவன்

திருமங்கை 3-1—10
மூவராகிய ஒருவனை

திருமங்கை 4-1-2
யாவருமா யாவையும் யெழில் வேதப் பொருள்களுமாய் ‘மூவருமாய் முதலாய மூர்த்தி

திருமங்கை 6-6-6
தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த், தயங்கொனிசேர மூவுலகும் தானாய் வானாய்த், தன்னாலே தன்னுருவில் மூர்த்தி மூன்றாய், தானாய னாயினான் சரணென் றுய்வீர்.

சிவஞானசித்தியார் 1:38
அருவமோ உரூவாரூபம் ஆனதோ அன்றிநின்ற, உருவமோ உரைக்கும் கர்த்தா வடிவெனக் குணர்திங்கென்னின், அருவமும் உரூவாரூபம் ஆனதும் அன்றிநின்ற, உருவமும் மூன்றும் சொன்ன ஒருவனுக் குள்ளலாமே.

மேலும் நாம் இதுவரை கண்ட விடயங்கள் அனைத்திலும் தந்தை தாய் மகன் ஆகிய மூன்று கடவுள்களை வழிபடும் பழக்கம் இருப்பதை கண்டு இருக்கின்றோம். இந்தப் பழக்கங்கள் கிறிஸ்தவம் கூறும் மூவொரு கடவுள் கோட்பாட்டினை ஒத்து இருப்பதையும் நாம் காணுகின்றோம். இதற்குக் காரணம் தோமாவினால் இயேசுகிறிஸ்து குறித்ததான நற்செய்தி இந்தியாவில் விதைக்கப்பட்டிருந்ததே ஆகும். அதனால் தான் கிறிஸ்தவத்திற்கு முன்னர் மூவொருமைக் கோட்பாடே இந்தியாவிற்குள் இல்லை.
மனிதன் உருவாக்கிய பொய்யான கதைகளை நம்பாமல் சத்தியத்தை நோக்கி இன்றே மனந்திரும்புங்கள்.
தொடர்ந்தும் என்னுடன் இணைந்திருங்கள்.
இது சத்தியத்தை அறிந்துகொள்ள ஓர் அருமையான தேடல். நீங்கள் அறிந்திராத தகவல்கள் ஆதாரங்களுடன் வர இருக்கின்றன.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
இயேசுகிறிஸ்து உங்களை நேசிக்கின்றார்.
ஆமென் ..


(இயேசுவே வழி, சத்தியம், ஜீவன்!)
WEB SITE http://www.jesusmaycometoday.com/
Sponsored content

இறைவன் இருக்கின்றாரா? அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவரா?  Empty Re: இறைவன் இருக்கின்றாரா? அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவரா?

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum