என்ன நடந்தாலும் நன்றி
Sat Aug 08, 2015 6:20 pm
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. I தெச 5:18.
அமெரிக்காவில் உள்ள சிக்காகோவில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட தச்சு ஆசாரி ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம் இது. சீனாவிலுள்ள அனாதைக் குழந்தைகளின் இல்லத்திற்கு சிக்காகோவிலுள்ள ஒரு திருச்சபையிலிருந்து துணிமணிகள் மற்றும் போர்வைகளை சேகரித்து அனுப்பினார்கள்.
அதைப் பத்திரமாக கப்பல்களில் அனுப்புவதற்க்காக பலகைப் பெட்டிகளை இலவசமாக செய்து கொடுப்பதற்க்காக சென்றார் தச்சு ஆசாரி. தனது சட்டைப்பையில் சமீபத்தில் தான் அதிக விலை கொடுத்து வாங்கியிருந்த கண்ணாடியை வைத்துத்திருந்தார். ஒரு பெட்டியில் துணிகளை மடித்து வைத்து ஆணியை அடித்துக்கொண்டிருந்தபோது, அவரது சட்டைப் பையிலிருந்த கண்ணாடி நழுவி பெட்டிக்குள் விழுந்து விட்டது.
அதைக்கவனிக்காத ஆசாரி வீடு வந்து சேர்ந்த பின்புதான், கண்ணாடியை பெட்டிக்குள் தவற விட்டதை அறிந்துகொண்டார். விலையுயர்ந்த கண்ணாடியை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்றுசொல்லி ஆலயத்திற்கு விரைந்தோடினார். அதற்குள் பெட்டிகள் அனைத்தும் கப்பலுக்கு அனுப்பப்பட்டு விட்டது.
நொந்து போன ஆசாரி, “ஆண்டவரே, மிகுந்த உண்மையோடு என்னுடைய நேரத்தையும் பணத்தையும் செலவழித்து உம்முடைய வேலையைச் செய்தேனே. ஆனால் எனக்கு சமபவித்ததைப் பாரும்” என்று புலம்பினார். இனி இப்படிப்பட்ட கண்ணாடியை தனது வாழ்க்கையிலேயே வாங்க முடியாதே என்று சொல்லி சொல்லி சோர்ந்து போனார்.
சிலமாதங்கள் கழித்து சீனாவிலிருந்து அனாதைக் குழந்தைகளைப் பராமரிக்கும் மிஷனரி அமைப்பின் இயக்குனர் அமெரிக்காவிற்கு வந்திருந்தார். தங்கள் பிள்ளைகளுக்கு உதவிய, சிக்காகோவில் உள்ள திருச்சபைக்கு நன்றி செலுத்தும் வகையில் அந்த ஆலயத்தின் ஞாயிற்றுக் கிழமை ஆராதனைக்கு செய்தியளிக்கச் சென்றார். அந்த ஆராதனைக்கு கண்ணாடியைத் தவறவிட்ட ஆசாரியும் சென்றிருந்தார்.
அனாதைக் குழந்தைகள் மீது அக்கறை உள்ளவர்களாக அவர்களைத் தாங்கிய அனைவருக்கும் நன்றி கூறினார் அந்த மிஷனரி அமைப்பின் இயக்குனர். “எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் அனுப்பியிருந்த கண்ணாடிக்காக நான் மிகுந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன். கம்யூனிஸ்ட் கட்சியினர் திடிரென்று எங்கள் அனாதை இல்லத்திற்குள் நுழைந்து எல்லா பொருட்களையும் அடித்து நொறுக்கினர். அப்பொழுது எனது மேஜையிலிருந்த கண்ணாடியும் உடைந்து விட்டது. அன்றிலிருந்து நான் எதையும் சரிவர பார்க்க முடியாமல் கஷ்டப்பட்டேன். புதிய கண்ணாடி வாங்குவதற்கு போதிய வசதி இல்லாத காரணத்தால் பாரத்தோடு நாங்கள் ஜெபித்து வந்தோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் அனுப்பியிருந்த நன்கொடைப் பெட்டியில் இந்த கண்ணாடி இருந்தது. மேலும் அந்த கண்ணாடி எனக்காகவே செய்யப்படது போல எனது பார்வைக் குறைபாட்டைச் சரிபடுத்துவதாகவும் இருந்தது” என்று சாட்சி கூறினார்.
பின் வரிசையிலிருந்து அதைக் கேட்டுக்கொண்டிருந்த தச்சு ஆசாரியின் கண்களிலிருந்து கண்ணீர் பாய்ந்தோடியது. என்னுடைய எஜமான் என்னுடையதை வாங்கி என்னிலும் அதிகத் தேவையுள்ளவர்களுக்கு அதைக் கொடுத்திருக்கின்றார் என்று சொல்லி அவர் தேவனை மகிமைப்படுத்தினார்.
எல்லாவற்றிலேயும் தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டுமென்பதை நாம் நன்கு அறிந்திருந்தாதாலும், போராட்டங்கள் வரும் பொழுது, ஏன் ஆண்டவரே இதை அனுமதித்தீர் என்று தேவனிடம் கேட்போம். இந்த நாளிலிருந்து எல்லாவற்றிலேயும் தேவனுக்கு நன்றி செலுத்த முயற்சி செய்யுங்கள். அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. ஆமேன். அல்லேலுயா.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|