பயணம், வழிச்செலுத்தல் செயலிகள்
Wed Jul 22, 2015 6:49 am
10. பயணம், வழிச்செலுத்தல் செயலிகள்
(Travel, Navigation Apps)
பயணங்களுக்குப் பயன்படும் செயலிகள் குறித்து இந்த வாரம் காணலாம்.
பொதுவாக நமது பயணங்களை 1) பேருந்து, ரெயில், விமானப் பயணங்களுக்கு பயணச்சீட்டு, முன்பதிவு செய்தல், 2) ஆட்டோ, டாக்சி ஏற்பாடு செய்தல், 3) நிலப்பட வழிச்செலுத்தல் (Map Navigation) எனப் பலவாறாக வகைப்படுத்தலாம். இவற்றுள் பலரும் பயன்படுத்தும் முக்கியமான சில செயலிகளைப் பற்றி இங்குப் பார்ப்போம்.
தமிழகத்தில் உள்ள ஆம்னி பஸ்களை பல்வேறு தனியார் நிறுவனங்கள் இயக்குகின்றன. அதில் பேருந்து முன்பதிவுக்கென ஆண்டிராய்டு செயலியை ஒரு நிறுவனம் மட்டுமே வெளியிட்டுள்ளது. இதுதவிர இந்தியாவில் வேறு பேருந்து நிறுவனங்கள் செயலிகள் வெளியிட்டுள்ளதாக தகவல் இல்லை.
மற்றபடி அனைத்து நிறுவனப் பேருந்துகளுக்கும் பயண முன்பதிவுக்கான பொதுப்படையான செயலிகள் நிறைய உள்ளன. பேருந்துப் பயணங் களுக்கென உள்ள செயலிகளுள் ரெட் பஸ், டிக்கெட் கூஸ் ஆகியவை பலராலும் பயன்படுத்தப்படுகின்றன.
ரெயில்களின் கால அட்டவணை, முன்பதிவு, பி.என்.ஆர் விசாரணை, நிகழ்நேர ரெயில் பயணிக்கும் தகவல்கள் ஆகியவற்றை வழங்குகின்ற தனியாரின் செயலிகள் ஏராளமாக உள்ளன. இந்திய ரெயில்வேயின் அதிகாரபூர்வ அமைப்பான ஐ.ஆர்.சி.டீ.சி. அனைத்துவகைச் செல்பேசிகளிலும் செயல்படக்கூடிய 'ஐஆர்சிடீசி கனெக்ட்' (IRCTC Connect) என்னும் செயலியை வெளியிட்டுள்ளது. கால அட்டவணை, பயணச்சீட்டு முன்பதிவு, ரத்து செய்தல் ஆகிய வசதிகளுடன், வரப்போகும் பயணத்தை நினைவுறுத்தல் வசதியும் இதில் உள்ளது.
ஏர்இந்தியா மற்றும் பல்வேறு தனியார் விமான நிறுவனங்கள் பயண முன்பதிவுக்கென தத்தம் சொந்தச் செயலிகளை வெளியிட்டுள்ளன. ஆனால், பெரும்பாலானோர் எந்த விமானத்துக்கு வேண்டுமானாலும் முன்பதிவு செய்யக்கூடிய பொதுவான செயலி களைத்தான் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் யாத்ரா, கிளியர் ட்ரிப், மேக் மை ட்ரிப், இக்சிகோ, கோஇபிபோ ஆகிய செயலிகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவை பேருந்துப் பயண முன்பதிவு, தங்கும் விடுதி முன்பதிவு ஆகிய வசதிகளையும் வழங்குகின்றன.
கால் டாக்சி நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவைக்காக தற்போது செயலிகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. உங்கள் செல்பேசியில் கால் டாக்சி நிறுவனச் செயலியை நிறுவி, உங்கள் தொலைபேசி எண், முகவரி போன்ற தகவல்களைப் பதிய வேண்டும். உங்கள் கணக்கில் முன்வைப்பாகக் கொஞ்சம் பணமும் போட்டு வைத்துக் கொள்ளலாம்.
அந்நிறுவனத்தில் இணைந்துள்ள டாக்சி டிரைவர்களின் செல்பேசிகளிலும் அந்நிறுவனச் செயலி இருக்கும். டிரைவர்கள் சவாரி வர விரும்பும்போது செயலியை இயக்கினால் போதும். ஆனால் ஒருநாளைக்கு இத்தனை மணிநேரம் இயக்கி வைத்திருக்க வேண்டும் என ஒப்பந்தம் இருக்கும்.
உங்கள் செல்பேசியில் செயலியை இயக்கி, உங்கள் இருப்பிடத்துக்கு அருகில் காத்திருக்கும் அனைத்து டாக்சிகளையும் 'மேப்'பில் காண முடியும். உங்கள் பயண விருப்பத்தைத் தெரிவித்தால், அது அருகிலுள்ள டாக்சி டிரைவரின் செல்பேசிக்குச் செல்லும். உங்கள் இருப்பிடம் அவருடைய செல்பேசி மேப்பில் தெரியும்.
உடனே அவர் உங்களைத் தொடர்பு கொள்வார். நீங்கள் 'ஓகே' சொன்னதும் டாக்சி வந்து நிற்கும். எல்லாம் சில நிமிடங்களில் முடிந்துவிடும். பயணம் முடிந்ததும் உங்கள் கணக் கிலிருந்து பணம் கழிக்கப்பட்டுவிடும். பேரம் பேசுதல், சில்லரைப் பிரச்சினை எதுவும் இல்லை.
சில நாட்கள் கழித்து செல்ல வேண்டிய பயணத்துக்கு கூட முன்பதிவும் செய்யலாம். உங்கள் உறவினர், நண்பருக்காகவும் நீங்கள் பதிவு செய்யலாம். அவர்களின் பயணம் முடிந்தபின் அச்செய்தி உங்கள் செல்பேசிக்கு வரும். பணம் உங்கள் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும். பயணம் முடிந்தபிறகு பயணம் பற்றியோ, டிரைவர் பற்றியோ புகார் இருந்தால் செயலி வழியாகவே தெரிவிக்கலாம். பாராட்டு இருப்பினும் தெரிவிக்கலாம்.
கால் டாக்சி அழைப்பு, முன்பதிவு, முகவரி அறிதல், பயணக் கட்டணம் செலுத்துதல், பின்னூட்டம் அனைத்தும் செல்பேசிச் செயலி மூலமாகவே நடைபெற்று முடிந்துவிடும். கால் டாக்சி நிறுவனத்தைத் தொடர்புகொள்ள வேண்டிய அவசியமே இல்லை.
இத்தகு செயலிகள் ஜி.பீ.எஸ். அடிப்படையில் செயல்படுகின்றன. செல்பேசியில் இணைய இணைப்பு அவசியம் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் செயலிவழிக் கால்டாக்சி சேவை சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, தஞ்சை, சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, திண்டுக்கல், ஓசூர், புதுவை ஆகிய நகரங்களுக்கு வந்துவிட்டது.
இதிலுள்ள ஒரே சிக்கல் இணைய இணைப்புப் பல இடங்களில் சரியாகக் கிடைப்பதில்லை என்பதுதான். செயலிவழி கால்டாக்சி சேவையை பல்வேறு தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன. சில கால்ஆட்டோ சேவையையும் தருகின்றன.
பல்வேறு கால்டாக்சி நிறு-வனங்களின் சேவைகளையும் ஒருங்கிணைத்துத் தரும் பொதுவான செயலிகளும் உள்ளன. அவற்றுள் டாக்சிபிக்சி, ஜஸ்ட் கேப் இட், டாக்சி கேப் ஹயர் இண்டியா ஆகிய வற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
மேலை நாடுகளில், நகரில் குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லவோ அல்லது நகர்விட்டு நகர் செல்லவோ, யாரும் யாரிடமும் வழி கேட்ப தில்லை. கேட்பதற்குச் சாலையில், தெருவில் யாரும் இருக்கவும் மாட்டார்கள். கேட்க ஆளிருந்தாலும் அவர்களுக்கு வழிசொல்லத் தெரியாது.
காரில் மாட்டியுள்ள ஜிபீஎஸ் சாதனத்தில் போகும் இடத்தைச் சொல்லிவிட்டால் போதும். தொலைவு, உத்தேசப் பயண நேரம், வழித் தடம், மாற்று வழித்தடங்கள் ஆகியவற்றை அறியலாம். எந்தச் சாலையில் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும், எங்கு திரும்ப வேண்டும் என்ற விவரங்களை நிலப்படத்தில் காட்டிக்கொண்டும், சொல்லிக்கொண்டும் வரும். போகும் வழியில் பெட்ரோல் பங்க், உணவு விடுதி, தங்கும் விடுதி, கடைகள், பொதுக் கழிப்பறை வசதி எங்குள்ளது என்ற விவரங்களையும் அறியலாம்.
இதுவரை நீங்கள் போயிராத பெருநகரங்களில்கூட, யாரையும் வழிகேட்காமல் ஜிபீஎஸ் சாதனத்தின் உதவியுடன் எங்கும் நீங்களே போக முடியும். இப்போது செல்பேசிச் செயலிகளிலும் இவ்வசதிகள் வந்துவிட்டன. உலகம் முழுவதிலும் எந்த நாட்டிலும், எந்த நகரத்திலும் வழித்தடம் அறிய நிலப்படச் செயலிகள்
(Map Apps) உதவு கின்றன.
நிலப்படச் செயலிகளில் இருவகை உள்ளன:
1) நிகழ்நிலை நிலப்படம் (OnLine Map) ,
2) அகல்நிலை நிலப்படம் (OffLine Map).
நிகழ்நிலை நிலப்படத்தில் இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட இடத்துக்கான வழித்தடம் அறிய முடியும். நடந்து, காரில், பேருந்தில் செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் அறியலாம்.
அகல்நிலைப் படத்தில் இவற்றை அறிய இணைய இணைப்புத் தேவையில்லை. குறிப்பிட்ட நாடு அல்லது மாநிலத்தின் நிலப் படத்தை முன்கூட்டியே பதிவிறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில், உங்கள் செல்பேசியில் சிக்னல் கிடைக்கவில்லை என்றாலும் அகல்நிலை நிலப்படத்தில் தொலைவு, வழித்தடம், மாற்று வழித்தடங்கள், பயண நேரம் அனைத்தையும் அறிய முடியும்.
நிகழ்நிலை நிலப்படத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்ற செயலி 'கூகுள் மேப்ஸ்' ஆகும். அண்மையில் பார்வையிட்ட இடத்தைச் சுற்றி 26 ச.கி.மீ வரையுள்ள நிலப்பரப்பை தற்காலிகமாகப் பதிவிறக்கி வைத்துக்கொள்ளும் வசதியுள்ளது. எனினும் இரு இடங்களுக்கு இடையிலான வழித்தடம் அறிய இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
பதிவிறக்கிய அகல்நிலைப் படங்கள் 30 நாட்கள் மட்டுமே இருக்கும். ஆண்ட்ராய்டு செயலியில் குரல் மூலமாகவும் இடங் களைத் தேடி அறியலாம். நிகழ்நிலை நிலப்படச் செயலிகளில் வேறு குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை ஆப்பிளின் மேப்ஸ், மைக்ரோசாப்ட்டின் பிங் மேப்ஸ் ஆகும்.
அகல்நிலை நிலப்படங்களில் மிகவும் செல்வாக்குப் பெற்றது நோக்கியா நிறுவனத்தின் ஹியர் மேப்ஸ் (HERE Maps) ஆகும். முதலில் நோக்கியா செல்பேசிகளில் மட்டுமே இருந்தது. 2014-ல் ஆண்ட்ராய்டிலும், 2015-ல் ஆப்பிளிலும் அறிமுகம் ஆனது. குறிப்பிட்ட நாடு முழுமைக்கும் அல்லது குறிப்பிட்ட மாநிலத்துக்கு மட்டும் நிலப்படத்தை பதிவிறக்கி நிரந்தரமாக வைத்துக் கொள்ளலாம்.
இணைய இணைப்பு, செல்பேசி இணைப்பு இல்லா விடினும், இடம் தேடல், தொலைவு, வழித்தடம், பயண நேரம் ஆகியவற்றை அறியலாம். ஆப்பிள், ஆண்ட்ராய்டு செல்பேசிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இன்னொரு அகல்நிலை நிலப்படச் செயலி மேப்ஸ்.மீ(maps.me) என்பதாகும்.
மேலை நாடுகளுக்கு இருக்கும் அளவுக்குப் பயணங்களுக்கும், வழிச்செலுத்தலுக்கும் இந்தியாவுக்கென மேம்பட்ட செயலிகள் இல்லை என்றே சொல்லலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|