இயேசுவே வழி
Wed Apr 08, 2015 5:55 pm
இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
'அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்'. - (யோவான் 14:6).
ஒஆப்ரிக்காவின் அடர்ந்த காட்டு பகுதிகளில் ஒருவர் சுவிசேஷ ஊழியம் செய்து வந்தார். தான் தங்கியிருந்த கூடாரத்தை விட்டு அங்கு வாழும் பழங்குடி மக்களை தேடி சென்றார். அங்கு அவர் தன் ஊழியங்களை நிறைவேற்றி மாலை நேரத்தில் தான் தங்கியிருக்கும் கூடாரத்திற்கு திரும்பி வரும்படி புறப்பட்டார். அது எவ்வித பாதையும் இல்லாத காட்டு பகுதியாய் இருந்தபடியால், எந்த வழியாக தன் கூடாரத்தை சென்றடைவது என்று அறியாத அவர் அலைந்து திரிந்தார்.
மிக ஆபத்தான அக்காட்டுப்பகுதியில் கடைசியாக ஒரு சிறு குடிசை அவர் கண்களில் பட்டது. அது அப்பழங்குடியினரில் ஒருவனது குடிசையாயிருந்தது. அவர் அவனை அணுகி, தன் கூடாரத்திற்கு போகும் வழியை அறிந்து கொள்ள அவன் தனக்கு உதவி செய்யக்கூடுமா என கேட்டார். உடனே அம்மனிதன் அவருக்கு உதவி செய்ய சம்மதித்தான்.
அந்த சுவிசேஷகர் அவனுக்கு தன் நன்றியை தெரிவித்து கொண்டு, 'சரி நான் எந்த வழியாக செல்ல வேண்டுமென்று கேட்டார். அம்மனிதன் நடந்து வாரும் என்று சொல்லிவிட்டு, அவருக்கு முன்பாக நடக்க தொடங்கினான. ஒரு மணி நேரம் நடந்த பின்னர் அச்சுவிசேஷகர் மிகவும் களைத்து போனார். அவருடைய இருதயத்தில் அம்மனிதனை பின்தொடர்ந்து சென்று கடைசியில் தன் கூடாரத்தை அடைவது நிச்சயம் தானா என்ற கேள்வி எழுந்தது.
எனவே அவர் அம்மனிதனை நோக்கி, 'இவ்வழியாகத்தான் போக வேண்டுமென்று உனக்கு நிச்சயமாக தெரியுமா? எந்த பாதையும் என் கண்களுக்கு புலப்படவில்லையே' என்று கேட்டார். அப்பழங்குடியான் அவரை பார்த்து, 'இவ்விடத்தில் பாதை ஒன்றுமில்லை. நான்தான் பாதை' என்று கூறினான். மிஷனெரி அவனை பின் தொடர்ந்து சென்று கடைசியில் காரிருள் சூழும் முன்பாக தன் கூடாரத்தை சென்றடைந்தார்.
அன்பானவர்களே,
நம்முடைய வாழ்க்கை பிரயாணமும் இப்படித்தான் காணப்படுகிறது. நாம் என்ன செய்கிறோம்? எப்படி வாழ்கிறோம், நம் வாழ்க்கை எப்படித்தான் முடியப்போகிறது என்ற நிச்சயமற்ற நிலையில், வழி தெரியாமல், அந்த சுவிசேஷகரை போல அலைந்து திரிகிறோம். சில வாலிபர்கள், தங்களுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக சினிமா நடிகர்களையும், அரசியல்வாதிகளையும், நம்பி தங்கள் வாழ்க்கையை அழித்து கொள்ளுகின்றனர். இவ்வுலக மனுஷர்களை நமக்கு வழிகாட்டியாக தெரிந்தெடுக்கும் போது அதின் முடிவு மிகவும் துக்ககரமானதாக இருக்கும்.
இந்த உலகத்தில் கடவுள்கள் என்று சொல்லி கொள்கிற ஒருவரும், நானே வழி என்றும், நானே சத்தியமும் ஜீவனும் என்று சொல்லவேயில்லை. இயேசுகிறிஸ்து மாத்திரமே சொன்னார், 'நானே வழி' என்று. அவரின் வழியாக மட்டுமே நாம் பிதாவை சேர முடியும். பரலோகத்திற்கு செல்ல வேறு எந்த வழியும் இல்லை, இல்லவே இல்லை. காலம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. கிறிஸ்துவை ஒரு சிறுபான்மையினரின் தெய்வமாக மாத்திரம் பார்த்து கொண்டிருக்கிற காலம் போய் கொண்டிருக்கிறது. உலகத்தில் வந்த எந்த மனிதனையும் இரட்சிக்க வல்லமையுள்ளது இயேசுகிறிஸ்துவின் நாமம் மட்டுமே.
'நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான் - (யோவான் 10:9) என்று இயேசுகிறிஸ்து கூறினார். நாம் நித்திய ஜீவனை பெற்று கொள்ள வாசலாகிய அவர் வழியாகவே கடந்து சென்று ஜீவ வழியாகிய அவருக்குள் நடந்து சென்றால் மட்டுமே நித்திய ஜீவனை நாம் பெற்று கொள்ள முடியும்.
உலகத்தில் பரலோகத்தை சென்றடைய பல வழிகள் கூறப்படுகின்றன. எல்லாவழிகளும் நம்மை கொண்டு சேர்க்க முடியாது. ஏற்கனவே நான் எழுதியிருக்கிற உதாரணத்தை திரும்பவும் இங்கு நினைவு கூர விரும்புகிறேன். நாம் சேலத்திற்கு பெங்களுரிலிருந்து செல்ல வேண்டுமென்றால், சேலத்திற்கு செல்லும் இரயில் வண்டியோ, பஸ்ஸிலோ தான் ஏற வேண்டும். அதைவிட்டு விட்டு, பாண்டிச்சேரி போகும் இரயிலில் ஏறினால், அது நம்மை பாண்டிச்சேரிக்குத்தான் கொண்டு செல்லும், ஒருக்காலும் சேலத்திற்கு கொண்டு செல்லாது. அதுப்போலத்தான், பரலோகத்திற்கு நானே வழி என்று சொன்ன இயேசுகிறிஸ்துவை பின்பற்றி சென்றாலொழிய வேறு எந்த வழியிலும் நாம் பரலோகத்திற்கு போய் சேரமுடியாது. கிறிஸ்தவம் ஒரு மதமல்ல, அதுவே வழி! அநேகர் கிறிஸ்துவை ஒரு அந்நிய கடவுளாக நினைப்பதால் அவர்களால் அவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
காலம் கடந்து கொண்டிருக்கிறது. வேதத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி கொண்டிருக்கிறது. வெளிப்படுத்தின விசேஷத்தில் 6ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு முத்திரையும் உடைக்கும்போதும், ஒவ்வொரு நிற குதிரைகள் வந்து உலகத்திற்கு நியாயத்தீர்ப்பை நடத்தும் காரியத்தை பார்க்கிறோம். சமீபத்தில் எகிப்தில் நடந்த மக்களின் புரட்சியின்போது, ஒரு மங்கின குதிரையின் மேல் ஒருவன் ஏறி மக்களினூடே கடந்து போவதை CNN Live News -ல் காணப்படுகிறது. அதை குறித்து ஏற்கனவே ஒரு ஆப்ரிக்க ஊழியர் (Dr. Owuor) தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார். அது நிறைவேறுவதை You Tube-ல் போட்டிருக்கிறார்கள். அதனுடைய You Tube Link இதோ!
https://www.youtube.com/watch?v=kEXMoCwHVTE
நாங்கள் அதை பார்த்த போது கர்த்தருடைய வருகைக்கு நாம் எத்தனை சமீபமாய் வந்திருக்கிறோம் என்பதை நினைத்து பார்த்தோம்.
கர்த்தரிடத்தில் மனம் திரும்புவோமா? கர்த்தரின் வருகை மிக சமீபம். நானே வழி என்று சொன்ன கர்த்தரை பற்றி கொண்டு, நித்திய ஜீவனுக்கு நேரே கடந்து செல்வோம். நித்திய ஜீவனை பற்றி கொள்வோம். ஆமென் அல்லேலூயா!
பாடல்:
"நானே வழி நானே சத்தியம்
நானே ஜீவன் மகனே - உனக்கு
என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை
என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை
..
நான் தருவேன் உனக்கு சமாதானம்
நான் தருவேன் உனக்கு சந்தோஷம்
கலங்காதே என் மகனே
கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்"
ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இநத புதிய மாதத்திற்குள் நாங்கள் காலடி எடுத்து வைக்க நீர் பாராட்டின கிருபைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். தகப்பனே, நாங்கள் உம்மை வந்தடைவதற்கு இயேசுகிறிஸ்துவே வழியாக இருப்பதற்காக உமக்கு நன்றி. வழியாகிய அவரையே பற்றி கொள்கிறோம். இயேசுகிறிஸ்துவையன்றி நித்திய ஜீவனை பெற்று கொள்ளவும், பரலோகம் செல்லவும் வேறு வழி இல்லை என்பதை அறிந்து, எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். என் பாவங்களை கிருபையாய் மன்னிப்பீராக. இயேசுகிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்று கொள்கிறேன். என்னை ஏற்று கொள்ளும். என் வாழ்வில் சமாதானம் சந்தோஷத்தினால் நிறைத்தருளும். கிறிஸ்துவின் வருகைக்கு என்னை ஆயத்தப்படுத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
நன்றி: சீயோன்புரம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|