பட்டாவை கவனிக்க வேண்டும்...
Sat Aug 20, 2016 12:00 pm
வீட்டு மனை அல்லது வீடு வாங்கும்போது அந்த நிலத்தின் பட்டா மற்றும் எப்.எம்.பி என அழைக்கப்படும் புல வரைபட நகல் ஆகியவை மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அரசு பதிவேடுகளாகும். குறிப்பிட்ட ஒரு மனை அல்லது வீடு வாங்கும்போது பெறப்படும் அதன் பட்டாவை பத்திரமாக வைத்து கொள்கிறோம். மறுபடியும் பல வருடங்கள் கழித்து விற்பனை அல்லது வேறு காரணங்களுக்காக தேவை என்ற நிலையில்தான் பட்டாவை வெளியில் எடுக்கிறோம்.
இடைப்பட்ட காலத்தில் பட்டா சம்பந்தமாக என்ன விதமான மாற்றங்கள் நடந்துள்ளன என்பது பற்றி நமக்கு எவ்விதமான தகவலும் தெரிய வருவதில்லை. பல நேரங்களில் குறிப்பிட்ட ஏரியாவானது புதியதாக சப்டிவிஷன் செய்யப்படும்போது எப்.எம்.பி எனப்படும் புல வரைபடம் மற்றும் பட்டா எண்கள் ஆகியவற்றில் அதற்கேற்றவாறு மாற்றங்கள் ஏற்பட்டு விடும்.
அவ்வாறு மாற்றப்பட்ட சப்டிவிஷன்களுக்கான புதிய பட்டாவானது சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும். அந்த விஷயமானது தெரிய வரும் போது மட்டுமே நமது இடத்திற்கான பட்டாவின் விபரங்களோடு, புதிய சப்டிவிஷன்களின் மாற்றத்தையும் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ள இயலும். புதியதாக சப்டிவிஷன் செய்யப்படும்போது நம்முடைய பட்டாவின் புல எண்கள் மற்றும் வரைபடத்தோடு பல்வேறு புதிய சர்வே எண்களும் புதிய நபர்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும். திருத்தியமைக்கப்பட்ட பட்டா விபரங்களில் நமது சரியான பெயர், புல எண்கள் மற்றும் அதன் வரைபடம் ஆகியவை சரியாக இருக்கிறதா..? என்பதை நாம்தான் கவனித்துக்கொள்ள வேண்டும்.
வீடு அல்லது இடத்தை விற்பனை செய்யும்போது பட்டாவின் அவசியம் முக்கியமானது. அதனால் வருடத்திற்கு ஒரு முறையாவது நம்முடைய காலிமனை இருக்கும் இடத்தின் பட்டா மற்றும் புல அளவுகள் சரியான அளவில் உள்ளனவா..? பெயர் அல்லது எண்களில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா..? என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும். மனையை விற்பனை செய்ய முயலும் போது பத்திரத்தில் இருக்கும் அளவுகளோடு பட்டாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவுகளும் சரியாக இருக்க வேண்டும் என்று மனையை வாங்குபவர்கள் எதிர்பார்ப்பார்கள். அதனால் சப்டிவிஷன் என்ற மாறுதலுக்கு நிலங்கள் உள்ளாகும் போது நமது நிலத்திற்கான விஷயங்களையும் ஒப்பிட்டு சரி செய்து கொள்வது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|