காவி மயமாகும் கல்வி
Thu Jul 21, 2016 8:37 am
1986 ஆம் ஆண்டுக் கோத்தாரி கமிஷனால் பரிந்துரைக்கப்பட்ட முதல் புதிய கல்விக் கொள்கை (New Education Policy – NEP), நாடாளுமன்றத்தில் பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பரந்த நோக்குடன் பல தரப்பட்ட சமூகத்தினரின் தேவைகளையும் உள்ளடக்கி, உருவாக்கப்பட்ட இக்கல்வி கொள்கைக்கான, கோத்தாரி கமிஷனின் பரிந்துரைகளும் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் இயற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. கல்வியாளர்களால் ஆய்ந்து உருவாக்கப்பட்டு நாடாலுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட கோத்தாரி கமிசனின் கல்விக் கொள்கையை, ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட அறிவியலறிவே இல்லாத சிலரைக் கொண்ட மாற்றப்போகின்றது பா.ஜ.க அரசு. கல்வியைக் காவி மயமாக்கி, ஆர்.எஸ்.எஸ் இன் அரசியல் குறிக்கோளை அடைவதற்கு, பா.ஜ.க அரசு முழு வீச்சில் தனது செயல்திட்டங்களை முடுக்கி விட்டிருக்கிறது.
2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், NCERT என்றழைக்கப்படும் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய ஆணையத்தின் இயக்குனராகப் பதவியேற்ற பர்வின் சின்கிளேயர் என்ற பெண்மணி, தற்போது பா.ஜ.க அரசால், பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய பதவிக்காலம் இன்னும் முடிவடையவில்லை. அதே நேரத்தில், வரலாற்று ஆராய்ச்சிக்கான இந்திய ஆணையத்தின் (ICHR) நிர்வாகத் தலைவராக, சுதர்சன் ராவ் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். சுதர்சன் ராவ் என்பவர் கடந்த 40 வருடங்களாக வரலாற்றுப் பிரிவில் குறிப்பிடத்தக்க அளவு எதுவும் செய்து விடவில்லை என்றும், கடந்த 30 ஆண்டுகளாக வரலாற்றுத்துறையில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து அறிவற்றவராக இருக்கிறார் என்றும் அதே துறையின் முன்னாள் செயலராக இருந்த வெங்கட சுப்ரமணியம் தெரிவிக்கிறார்.
அப்படியென்ன சுதர்சன் ராவின் சிறப்பு என்று கொஞ்சம் உற்று நோக்கினால், அவர் ஒரு தீவிர இந்துத்துவவாதியாகவும் சாதிப் பற்றாளராகவும் இருக்கிறார் என்று தெரிய வருகிறது. “அகிலப் பாரதிய இதிஹாஸ் சங்கலன் யோஜனா” என்ற அமைப்பின் ஆந்திர மாநிலப் பிரிவின் தலைவராக இருக்கிறார் என்பது கூடுதல் தகுதி. இந்த அ.பா.இ.ச.யோ அமைப்பு, 1978 ஆர்.எஸ்.எஸ் தலைவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. அமைப்பின் நோக்கம் ஒன்று தான். வரலாற்றை இந்துத்துவப் பேனா கொண்டு எழுதுவதும், சமஸ்கிருதத்தைத் தூக்கிப் பிடிப்பதுமே ஆகும். மேலும் சுதர்சன், தன்னுடைய வலைதளத்தில், இந்திய வரலாற்றில் சாதி பெரிதும் பயன்பட்டே வந்திருக்கிறது என்றும் சாதியால் எந்தத் தொல்லைகளும் இல்லை என்றும் எழுதி சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறார். வெகுசன ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்களில், ராமரும் சீதையும் வாழ்ந்ததற்கான ஆவணங்கள் வரலாறு நெடுகிலும் இருந்ததாகவும், அவர்களுடைய இருப்பை நிரூபிக்க வேண்டிய அவசியல் இல்லை என்றும் சில கருத்துகளை முன் வைத்திருக்கிறார். மேலும் ராமாயணமும் மகாபாரதமும் புராணக் கதைகள் அல்ல. “வரலாற்றில் நடந்த சம்பவங்கள்” என்று தனது வரலாற்று அறிவை பறைசாற்றியிருக்கிறார். ஆகவே கல்வித்துறையில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள், தங்களின் கொள்கைகளுக்குத் தோதானவர்களாக, ஆர்.எஸ்.எஸ் இன் சொற்படி நடப்பவர்களாக இருத்தல் வேண்டும் என்று பா.ஜ.க அரசு விரும்புகிறது. பர்வின் சின்கிளேயரின் நீக்கமும், சுதர்சன் ராவின் பதவியேற்றலும் ஆர்.எஸ்.எஸ் இன் செயல் திட்டங்களின் ஒரு பகுதியாகத் தான் நடந்திருக்கிறது என்பதை அறிகிறோம்.
[img(620.7777799999999px,693.7777799999999px)]http://www.visai.in/wp-content/uploads/2015/02/Sanskrit-Translation-of-Mein-Kampf-915x1024.jpg[/img]
சமஸ்கிருதத் திணிப்பு
700 கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில், 6 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு, கட்டாயச் சமஸ்கிருதத் திணிப்பு என்கிற அறிவிப்பு, கடந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. விருப்பப் பாடமான ஜெர்மானிய மொழிக்கு பதிலாக, இனி சமஸ்கிருதமே பயிற்றுவிக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானியின் தலைமையில் நடந்தேறிய கேந்திரிய வித்தியாலயா சங்கதன் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி, மத்திய பல்கலைக் கழகங்களில் இனி சமஸ்கிருத மொழிக்கான ஒரு துறை தனியாக நிறுவப்படும் என்றும் இரானி நாடாளுமன்றத்தில் அறிவிக்கிறார். மக்களின் வரிப்பணத்தில் செத்த மொழிக்கு அலங்காரம் செய்கின்றார்கள்.
சமஸ்கிருதம் இன்று ஒரு பேச்சுமொழி இல்லை, குறைந்தபட்சம், இலக்கியத்திற்கான மொழியும் கிடையாது, ஏனென்றால் சமஸ்கிருதத்தில் இங்கு இலக்கியமும் கிடையாது. சமஸ்கிருதம் கற்பதால், மாணவர்களுக்கு எந்த வகையிலும் பயன்படப் போவதில்லை, கோயிலில் மணியாட்டுவதைத் தவிர. அப்படியிருக்கும் போது பா.ஜ.க அரசு சமஸ்கிருதத்தைத் தூக்கி பிடிப்பதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? இந்துத்துவத்தைப் பரப்புவதைத் தவிர.
பா.ஜ.க அரசு கல்வி நிலையங்களில் சமஸ்கிருதத்தைக் கட்டாயமாக்கித் திணிப்பதோடு மட்டுமல்லாமல், அனைத்து பள்ளிகளிலும் சமஸ்கிருத வாரவிழாவாகக் கொண்டாடச் சொல்கிறது. இதுவரை ஆசிரியர் தினம் என்று கொண்டாடப்பட்டு வந்த நாளை, “குரு உத்சவ்” வாக மாற்றுவதும், கிறித்துப் பிறந்த நாளை, நல்லாட்சி தினமாகவும், வாஜ்பாய் பிறந்த நாளை கொண்டாடவும் வலியுறுத்துகிறது. இவை எல்லாம் கல்வியைப் பல நூறு ஆண்டுகள் பின்படுத்தும் முயற்சியே அன்றி வேறல்ல. மாறாக, சங்க பரிவாரங்களின் அரசியலை, வெறுப்புணர்வை, பள்ளிக் குழந்தைகளிடம் திணிக்கும் முயற்சிகளாகத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். கல்வி என்ற பெயரில் அவர்கள் நம் குழந்தைகளின் தலையில் இந்துத்துவத்தைத் திணிப்பதன் மூலம், நம் குழந்தைகளை அறிவியல் தெரியாத முட்டாள்களாகவும், திரிசூலத்தைக் கையில் எடுத்துக் கொண்டு திரியப்போகும் வன்முறையாளர்களாகவும் மாற்றுகின்றார்கள்.
யார் இந்தத் தினாநாத் பாத்ரா?
தினாநாத் பாத்ரா என்ற ஒரு முதியவரைப் பற்றி நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். பின்னாளில், நம் குழந்தைகள் இவருடைய கற்பனைக் கதைகளை, வரலாற்றுப் பாடமாகவோ அறிவியல் பாடமாகவோ படித்து விடக் கூடிய அபாயத்தை எதிர் நோக்கியிருக்கிறோம்.
பாத்ரா, என்கிற இந்த 84 வயது முதியவர், ஆர்.எஸ்.எஸ் அமைத்த முதல் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியராக இருந்தவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீவிர பிரச்சாரகர். அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக் கழகத்தின் மதத்துறை பேராசிரியராக இருந்த வெண்டி டோனிகரின், இந்து மதம் குறித்து எழுதப்பட்ட நூலை பென்குவின் பதிப்பகம் வெளியிட்டிருந்தது. இந்நூல் இந்துக்களை அவமதிக்கிறது என வழக்கு தொடுத்து, அந்நூலின் அனைத்து பிரதிகளையும் இந்தியாவிலிருந்து திரும்பப் பெற வைத்தவர் பாத்ரா.
தற்போது “தேஜோமாய்ப் பாரத்” என்று ஆறு பாட நூல்களைப் பாத்ரா எழுதியுள்ளார். குஜராத் அரசு இந்தப் புத்தகங்களைக் குஜராத் பாடத்திட்டத்தில் சேர்த்திருக்கிறது. அறிவியல் கருத்துகள் என்ற பெயரில் பல புராண கட்டுக்கதைகளைப் பாத்ரா எழுதியிருக்கிறார். அதில், முனிவர் துவய்பயன் என்பவரால் காந்தாரியின் உடலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட சதைப் பிண்டங்கள், நூறு கூறுகளாக்கி நெய்யில் ஊற வைத்து பாதுகாத்ததாகவும், அச்சதைக் கூறுகளிலிருந்து 100 கெளரவர்கள் பிறந்ததாகவும் ஒரு கதை நீள்கிறது. மேலும் புராண காலத்திலேயே தொலைக்காட்சிப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாகவும் நிறுவுகிறார் பாத்ரா. எப்படியென்றால், திவ்ய திருஷ்டியின் மூலம் முனிவர்கள், குரு சேத்ரப் போர்க்களக் காட்சிகளை, குருடரான திருத ராட்டிரருக்கு ஒளிபரப்பினார்களாம். இன்னும் விமானங்கள், அணு ஆயுதங்கள் என்று பாத்ராவின் எல்லையில்லாத கற்பனை விரிந்து கொண்டே செல்கிறது. மேலும் வங்கதேசம், இலங்கை, திபெத், நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை இந்தியாவுடன் இணைத்து “அகண்ட பாரத” வரைபடம் வரைய வேண்டும் என்று ஒரு புத்தகத்தில் பாத்ரா குறிப்பிடுகிறார்.
இதில் ஒர் அவலம் என்னவென்றால், இந்த நூல்கள் அனைத்திற்கும் இந்தியப் பிரதமர் .மோடி தான் முகவுரை எழுதியிருக்கிறார். அது மட்டுமின்றி, அறிவியல் மாநாடுகளில், மரபணு சோதனைகள் (காந்தாரியின் சதை), பிள்ளையார் தலை மாற்றப்பட்ட நெகிழி அறுவை சிகிச்சை (Plastic Surgery) குறித்து மோடி பேசிய கருத்துகள் யாவும், அவரது குருநாதர் பாத்ராவின் கருத்துகளே.
1999 ஆம் ஆண்டு, பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற போது, பாத்ரா தலைமையில் வரலாற்றை இந்துத்துவப் பார்வையில் எழுதுவதெனத் தீர்மானிக்கப்பட்டது. தற்போது குஜராத் பள்ளிகளில் பாத்ராவின் புத்தகங்களை, பாடத்திட்டமாகச் சேர்த்த பிறகு, இந்தியா முழுவதும் இதே “குஜராத் மாடலை” பின்பற்ற விரும்புகிறது பா.ஜ.க அரசு. ஸ்மிருதி இரானி கூடப் பாத்ராவிடம் அவரது நூல்களை தேசிய அளவிலான பாடத்திட்டத்தில் இணைக்க இருப்பதாக ஒப்புதல் தெரிவித்திருக்கிறாராம்.
பாத்ராவின் புத்தகங்களுக்குக் கடும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. பரோடாவில், உள்ளூர் காங்கிரஸ் இப்புத்தகங்களை எதிர்த்து தீயிலிட்டுப் பொசுக்கியிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியுயார்க் டைம்ஸ் இதழ், பாத்ராவின் புத்தகங்கள் பள்ளி மாணவர்களுக்குப் பாடமாக்கப்படுவதைக் கண்டித்து, “False Teachings for India’s Students” என்றொரு கட்டுரை எழுதி கேலி செய்துள்ளது. இது பற்றி ஒபாமாவிடம் கேட்க மோடி மறந்து விட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாக்பூரில் நடந்த “வித்வத் பரிசத்” என்கிற கூட்டத்தில் மோகன் பகவத் பேசுகிறார். “கல்வித் துறையில் கரசேவகர்கள் ஆற்ற வேண்டிய பணிகள்” என்ற தலைப்பில், கல்வித்துறையில் நாம் விரும்பும் மாற்றங்களைச் செய்ய இதுவே சரியான தருணம் என்றும் அந்நியர் படையெடுப்பால் 1200 ஆண்டுகளாக மாசடைந்த நம்முடைய கல்வித் திட்டத்தைக் கைப்பற்றி, இந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைப் புகுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். இந்தப் பின்னணியிலிருந்து பார்க்கும் போது, சங்க பரிவாரங்களின் இந்து ராஷ்டிரத்தைக் கட்டியமைப்பதில், இந்து இந்தி இந்தியா என்ற அவர்களின் ஒற்றை மைய சித்தாந்தங்களை வென்றெடுப்பதில், கல்வியை எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இலக்காக அவர்கள் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. இந்த இலக்குகளை அடைதலுக்கு, கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்களைக் கோல்வால்கர் தொடங்கி, தற்போது மோகன் பகவத் வரை ஒரே நேர்கோட்டில் வலியுறுத்துகின்றனர். சுருங்கக் கூறினால், மார்க்சிய, மெக்காலே பாதிப்புகளோடு கூடிய இந்தியக் கல்வித் திட்டத்தை முழுமையாக ஓரங்கட்டி விட்டு, சங்க பரிவாரக் கல்வியைத் திணிப்பதே இவர்களின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது. நாமும் கல்வியில் மாற்றம் கோருகின்றோம் மெக்காலேவின் குமாஸ்தா கல்விக்குப் பதிலாக அறிவியல் பூர்வமான, யதார்த்த வாழ்க்கைக்குப் பயன்படும் கல்வி. ஒரு விவசாயி வேளான்பல்கலைகழகத்தில் கற்பிக்க வேண்டிய கல்வி.
மதம் அரசியலிலிருந்தும் அரசின் கட்டுப்பாட்டிலிருந்தும் தனியே பிரித்தெடுக்கப்பட வேண்டும். மதம் என்பது தனிநபர் நம்பிக்கைகள், விருப்பு வெறுப்புகள் சார்ந்த ஒரு விடயம் என்பது மதச்சார்பின்மை குறித்த நவீன சித்தாந்தமாக இருக்க முடியும். ஆனால் தற்போது இந்துப் பெரும்பான்மை வாதம், அரசியலில் மட்டுமின்றி, ஒரு நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் கல்வியிலும் ஆழமாக வேரூன்றத் தொடங்கியுள்ளது.
“சீர்திருத்தம்” “மாற்றம்” “வளர்ச்சி” என்ற பெயரில் தான் அத்தனை பிற்போக்குத்தனங்களும் அரங்கேறுகின்றன. பிரிவினையைப் போதிக்கும், ஏற்றத்தாழ்வை விதைக்கும் இந்துத்துவக் கொள்கைகளை, புராண கட்டுக்கதைகளை அறிவியல் கருத்துகளாகவும், வரலாற்று ஆய்வுகளாகவும் குழந்தைகளின் மனதில் நஞ்சேற்றுவதற்கு, ஒரு சூழ்ச்சித் திறம் மிக்க நயவஞ்சகம் தேவைப்படுகிறது. அது இந்துத்துவச் சங்க பரிவாரங்களுக்குக் கை வந்த கலையாக இருக்கிறது.
–அ.மு.செய்யது -இளந்தமிழகம் இயக்கம்.
நன்றி – கேலிசித்திர கலைஞர்கள், டைம்ஸ் ஆஃப் இந்தியா
Re: காவி மயமாகும் கல்வி
Thu Jul 21, 2016 8:57 am
ஆமாம் குருநாதரே,
உங்க குல பாஞ்சாலி, கிருஷ்ணன் தசரதன் னோட அம்புட்டு பெண்டாட்டிகளையும் பாடம எடுத்தா இந்தா நன்னா இருக்கும் ஒய்
நீ யும் நானும்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|