ஜெபமே ஜெயம்
Fri Feb 12, 2016 9:12 am
ஜெபமே ஜெயம் – 1 :
ஒரு தனிப்பட்ட மனிதனி்ன் வெற்றி என்பது அவனது முழு பிரயாசத்தில் தான் அமைந்துள்ளது.
உதாரணமாக ஒரு ஓட்ட பந்தய வீரனை எடுத்துக்கொள்வோம். அவன் உலகத்திலேயே சிறந்த வீரனாக விளங்க வேண்டுமென்றால், அவன் எவ்வளவாய் பிரயாசப்படுகிறான். அவன் அதிகாலையிலேயே எழுந்திருக்கிறான், ஆயத்தமாகிறான், ஓடிப்பழகக் கூடிய இடத்திற்கு செல்லுகிறான். அங்குள்ள ஆசிரியரோடு நான் சிறந்த ஓட்ட வீரனாவதற்கு எந்த எந்த காரியங்களை செய்ய வேண்டும்? எப்படி ஓட வேண்டும்? எவைகளையெல்லாம் களைந்து போட வேண்டும்? என்று ஆலோசனை கேட்கிறான். அந்த ஆசிரியர் சொல்லுகிறது போலவே அவன் கேட்டு அவைகளை ஏற்றுக்கொண்டு அவைகளை தன் வாழ்க்கையில் நடைமுறையில் கடைபிடிக்கிறான். அப்பொழுது அவன் உலகத்திலேயே மிக சிறந்த ஓட்ட வீரனாக மாறி பெரிய வெற்றியை பெறுகிறான்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,நாமும் வாழ்க்கை என்ற ஓட்டத்திலே ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த ஓட்டத்திலே நமக்கு அநேக தோல்விகள்,நஷ்டங்கள், கவலைகள், சோர்வுகள், இன்னும் பலவிதமான போராட்டங்கள் போன்ற கசப்பான அனுபவங்கள் தான் நம்மை பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஏன் நம்முடைய வாழ்க்கை என்ற ஓட்டத்திலே பின்னடைவுகள். அதற்காக நாம் சரியாக ஆயத்தமாகவில்லை.
பாருங்கள் ஓட்ட வீரர் அதிகாலையிலேயே வந்து ஆயத்தமாகிறான். நாமும் அதிகாலையிலேயே எழுந்திருக்க பழக வேண்டும். “அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.” என்று சாலமோன் ஞானி நீதிமொழிகள் 8: 17ல் கூறுகிறார்.
மாற்கு 1:35ல் வாசிக்கிறோம், “இயேசு கிறிஸ்து அதிகாலையில் இருட்டோடே எழுந்து புறப்பட்டு” என்று எழுதப்பட்டுள்ளது. ஆகவே அதிகாலை என்பது சூரிய கதிர்களின் ஒளி தெரிவதற்கு முன்பே, வானம் இருட்டாக இருக்கும்போதே நாம் எழுந்திருக்க வேண்டும். எழுந்து புறப்பட வேண்டும். விளையாட்டு வீரன் ஓட ஆயத்தமாகி புறப்படுகிறான். இயேசுவும் எழுந்து புறப்படுகிறார். அதுபோல நாமும் அதிகாலையில் எழுந்து ஜெபிக்க ஆயத்தமாக வேண்டும். சிலபேர் எழுந்து அப்படியே படுக்கையில் முகங்குப்புற விழுந்து ஜெபிக்க ஆரம்பிப்பார்கள். அப்படியே தூங்கி விடுவார்கள். பின்பு, என்னால் ஜெபிக்க இயலவில்லை என்று சொல்லுகிறார்கள். ஏனென்றால், ஆயத்தம் இல்லை. ஆகவே, அதிகாலையில் இருட்டோடே எழுந்து ஆயத்தமாக வேண்டும்.
அடுத்ததாக, விளையாட்டு வீரன் வீட்டிலேயே அங்கும், இங்கும் ஓடவில்லை. அவன் அதற்கென்று நியமிக்கப்பட்ட இடத்திற்கு Groundக்கு செல்கிறான். இயேசு கிறிஸ்துவும் மாற்கு 1:35ல் “அதிகாலையில் இருட்டோடே எழுந்து வனாந்திரமான ஓர் இடத்திற்கு சென்றார்.” அதுபோல நாமும் அதிகாலையில் இருட்டோடே எழுந்து ஆயத்தமாகி முகத்தை கழுவி, தூக்கத்தை போக்கிவிட்டு,ஜெபிக்கும்படியாக ஒரு இடத்தை தெரிந்து கொண்டு(வீட்டிலேயானாலும் சரி), அந்த இடத்திலேயே சென்று அல்லது ஒரு அறையில் ஜெபிக்கலாம். அப்படி ஜெபிக்க ஆயத்தப்பட்டு படுக்கையை விட்டு எழுந்து அப்புறம் போய் ஜெபிக்கும்போது நாம் உற்சாகமாக ஜெபிக்கலாம். தூக்கம் நம்மை ஆட்கொள்ளாது.
சரி. அடுத்து அந்த விளையாட்டு வீரன் ஒரே ஒரு தரம் ஓடிவிட்டு வந்து விடுவது கிடையாது. விளையாட்டு மைதானம் சென்றதும், வேண்டாத ஆடைகளையெல்லாம் களைந்து விட்டு அதிகநேரம் ஓடி,ஓடி பயிற்சி எடுக்கிறான். அதுபோல, நாமும் ஜெபிக்க இடத்திற்கு சென்றவுடன் இயேசப்பாவிடம் நமது பாவங்களையெல்லாம் அறிக்கைசெய்து விட்டுவிட்டு அதிக நேரம் நம்மை அர்ப்பணித்து ஜெபிக்க வேண்டும்.
அடுத்ததாக, அந்த வீரன் ஏதாவது ஒருநாள் சென்று பயிற்சி எடுப்பதில்லை. தினசரி பயிற்சியை தொடருவான். காலையிலும் சரி, மாலையிலும் சரி, மற்றும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் தன்னுடைய பயிற்சியை செய்து கொண்டே இருப்பான். அப்போதுதான் அவன் வெற்றியை பெற்றுக்கொள்ள ஆயத்தமாகின்றான்.
அதுபோலத்தான் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கிறிஸ்தவ வாழ்க்கையின் வெற்றியின் இரகசியமும் உள்ளது. ஆனால், நாமோ என்றாவது ஒருநாள் ஜெபிப்பது. சங். 50:15ல் “ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன்” என்று கூறியதுபோல இக்கட்டு, சோதனை, வேதனை, இழப்பு வரும்போது மாத்திரம் ஜெபிக்கிறோம். அதனால் நமது ஜெபத்திற்கு பதில் கிடைக்கவில்லை. என்ன கிறிஸ்தவ வாழ்க்கை என்று சொல்லுகிறோம். ஏனென்றால், வேதம் சொல்கிறது நீதி. 1:23-33 வரை உள்ள வசனங்களை தெளிவாக,நிதானமாக வாசித்துப் பார்ப்பீர்களாகில் “என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளிவிட்டீர்கள். ஆகவே, ஆபத்து உங்களுக்கு சூறாவளியைப்போல வரும்போது, அதிகாலையில் என்னை நோக்கி கூப்பிட்டாலும் மறு உத்தரவு கொடுக்கமாட்டேன்” என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
ஆகவே, அருமையானவர்களே நம் வாழ்க்கையின் வெற்றியின் இரகசியம் நம் கையில்தான் இருக்கிறது. ஏதாவது ஒருநாள் ஜெபிக்காதபடி, ஆபத்துக்காலத்தில் மட்டும் ஜெபிக்காதபடி,தினசரி நாம் ஜெபிக்கும்படியாக அழைக்கப்படுகிறோம். அதுமாத்திரமல்ல, நமது அருமை ஆண்டவர் இயேசு கிறிஸ்து மாற்கு 1:35ன் படி “அதிகாலையிலும்” மத்தேயு 14:23ன் படி “சாயங்கால வேலையிலும்”,லூக்கா 6:12ன் படி “இராமுழுவதும்” ஜெபித்து நமக்கு மாதிரியை வைத்து சென்றுள்ளது போல நாமும் அதிகாலையிலும், சாயங்காலத்திலும்,இராவேளையிலும், மற்றும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இயேசப்பாவோடு (பேசி்க் கொண்டே) ஜெபித்துக்கொண்டே இருந்தால் பாவம் நம்மை அனுகாது. தோல்வி நம்மை மேற்கொள்ளாது. ஜெயமான வாழ்க்கையை இம்மையிலும், மறுமையிலும் பெற்றுக்கொள்ளலாம்.
ஜெபிப்போம்! ஜெயம் பெறுவோம்!
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!
ரா. ஜீவா மனோகர்.
Re: ஜெபமே ஜெயம்
Fri Feb 12, 2016 9:13 am
ஜெபமே ஜெயம் -2 :
தொடர்ந்து நாம் நம்முடைய வாழ்க்கையில் ஜெயத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வழியை அறிந்து கொள்வோமென்றால், நலமாயிருக்குமென்று தேவ ஆவியானவரால் ஏவப்பட்டு ஜெபத்தைக் குறித்தே ஆராய்ந்து பார்க்கும்படியாய் விளங்கிக் கொள்ளும்படியாய் இந்த செய்திக்குள்ளும் கடந்து செல்லுகிறேன்.
கடந்த செய்தியில் ஒரு ஓட்ட வீரன் தான் ஜெயத்தை பெற்றுக்கொள்வதற்கு எப்படி, ஆயத்தமாகி, பயிற்சி எடுத்து வெற்றியை பெருகின்றானோ, அப்படியே நாமும் ஜெபிக்க ஆயத்தமாகி பிரயாசப்பட்டு ஜெபித்து ஜெயத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பார்த்தோம்.
இந்த செய்தியிலும் இன்னும் ஜெபத்தைக் குறித்தே நாம் தியானிக்கும்படியாக அழைக்கப்படுகிறோம். 1தெசலோனிக்கேயர் 5:17ல் “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” என்றும், எபேசியர் 6:18ல் “எந்த சமயத்திலும் ஜெபம் பண்ணுங்கள்” என்றும் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால், ஜெபம் என்பது இடைவிடாமல் எப்பொழுதும் ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும். இடைவிடாமல் என்றால், வேறு வேலை பார்க்காமல் எப்பொழுதும் முழங்காலில் நின்று ஜெபிப்பது அல்ல. நாம் காலை, மாலை மற்றும் எந்த நேரமோ ஜெபத்திற்கென்று ஒதுக்கிவிட்டு, மீதி நேரங்களில் நாம் வேலை பார்க்கும்போது, பிரயாணப்படும்போது இயேசப்பா பிரயாணத்தில் என்னோடுகூட இருங்க என்றும், வேலை பார்க்கும் போதும் என்னோடுகூட இருங்க என்றும், தூங்கும்போது என்னோடு கூட தங்கி இருங்க என்றும் நாம் சொல்லி ஜெபிக்கும்போது பிரயாணத்தில் கூடவே இருந்து பாதுகாப்பார். வேலை செய்யும் போது கூடவே இருந்து பெலன் தருவார். தூங்கும்போது கூடவே இருந்து பயம், கெட்ட சொப்பணங்கள் போன்றவைகள் இல்லாமல் நல்ல தூக்கத்தை தருவார்.
இதுபோன்று எந்த நேரமும் என்கூடவே இருங்க, நான் எப்பொழுதும் உங்களிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று சொன்னால், கூடவே இயேசப்பா இருப்பாங்க. நாம் அவரோடே பேசிக் கொண்டு எல்லா காரியங்களையும் செய்யலாம். செய்யும் காரியங்களுக்கு ஆலோசனைகளையும் கொடுத்து, வெற்றியையும் கொடுப்பார். ஜெபம் என்பது இயேசப்பாவிடம் பேசிக்கொண்டே இருப்பது. நாம் சாதாரணமாக யாராவது ஒரு நபரோடு சேர்ந்து பிரயாணப்பட்டாலோ, அல்லது வேலை செய்தாலோ நாம் எப்படி கூட இருக்கும் மட்டும் பேசிக் கொண்டே வேலை செய்கிறோம். பிரயாணப்படுகிறோம்.
தற்காலத்தில் அநேகர் கையில் செல்போன் இருக்கின்றது. அதன்மூலமாக வேலைபார்க்கும் போதானாலும் சரி, வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தாலும் சரி,மற்றும் எந்த நேரத்தினாலும் சரி, அதை வைத்து அடுத்த நபரோடு பேசிக்கொண்டே தமது காரியங்களை செய்வது போல, வாகனங்களை ஓட்டுவது போல, நாமும் நமது தேவைகளை, நமது காரியங்களை இன்னும் நமது எல்லா சுழ்நிலைகளையும் இயேசப்பாவோடு சொல்லி பேசிக் கொண்டே நாம் நமது வேலையை செய்யலாம். பிரயாணப்படலாம். எந்த காரியங்களையும் செய்யலாம்.
சுமார் 5 வயது நிரம்பிய சிறுவர்கள் இரண்டுபேர் விளையாடுவதற்காக ஓரிடத்தில் வந்தார்கள். அவர்களை நான் கவனித்துக் கொண்டே இருந்தேன். அந்த இரண்டு சிறுவர்களும் சுமார் 2மணி நேரமாக ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாருங்கள் ஒரு கவலையும் இல்லாத சிறு பிள்ளைகளுக்கே பேசுவதற்கு காரியங்கள் இருந்தால், உலகத்தில் பலவிதமான பாரங்களை சுமந்து கொண்டு தவிக்கிற நாம் பார சுமையை அகற்றிவிடுகிற இயேசப்பாவிடம் எவ்வளவு நேரமானாலும் பேசிக் கொண்டே இருக்கலாம். அதுதான் ஜெபம்.
சரி. இப்படி இடைவிடாமல் பேசிக் கொண்டே இருப்பதால், நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கின்றன என்றால்,முக்கியமாக நாம் பாவத்திற்கு விலகி ஜீவிக்க முடியும். யோசேப்பை போல கர்த்தர் என் கூட இருக்கிறார். நான் அவரோடே பேசுகிறேன். அவரும் என்னோடே பேசுகிறார். ஆகவே, இந்த பாவத்தை செய்ய மாட்டேன் என்ற ஒரு பயம், பாதுகாப்பு வந்துவிடும். மாத்திரமல்ல, மற்ற நபர்களை குறித்து மற்றவர்களிடம் புறங்கூறுவது போன்ற மற்றவர்களுடைய காரியங்களிலே தலையிடாமல் காத்துக் கொள்வார்.
மாத்திரமல்ல, இயேசப்பாவோடு எப்போதும் பேசிக் கொண்டே இருக்கும்போது, எந்த ஆபத்து வந்தாலும் எதிர்ப்பான சுழ்நிலைகள் வந்தாலும், பாதுகாத்து விடுதலை கொடுப்பார். தானியேல் 6:28ல் “தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது” என்று வாசிக்கிறோம். ஏனென்றால், தானியேல் எந்த நேரத்திலும் தேவனோடு பேசிக் கொண்டே இருந்த படியால் எதிர்ப்பான சூழ்நிலைகள் வந்தபோதிலும், ஆபத்தான சிங்ககெபி கிடைத்த போதும் அவனுக்கு எல்லாவற்றிலும் ஜெயம் கிடைத்தது.
ஆகவே, யோசேப்பைப் போல சோதனையில் ஜெயம் பெறவும், தானியேல் போல பிசாசின் எதிர்ப்பு சூழ்ச்சிகளில் ஜெயம் பெறவும் நாம் இடைவிடாமல் எந்த சமயத்திலும் ஜெபிப்போமாக! ஜெயம் பெறுவோமாக!
ரா. ஜீவா மனோகர்.
Re: ஜெபமே ஜெயம்
Fri Feb 12, 2016 9:15 am
ஜெபமே ஜெயம் – 3 :
பிரியமானவர்களே, நமது ஐக்கியத்தில் உள்ள சென்னையைச் சேர்ந்த அன்பான ஒரு சகோதரர் தனது லட்டரில், “ஜெபிக்க தெரிந்தவன் வாழ்க்கையில் ஜெயிக்க தெரிந்தவன்” என்று அருமையாக குறிப்பிட்டுள்ளார். ஆம். பிரியமானவர்களே ஒரு மனிதன் ஜெயமான வாழ்க்கைக்குள்ளே பிரவேசிக்க வேண்டுமென்றால், அவன் ஜெபம் என்ற திறவுகோலை உபயோகப்படுத்தி திறந்தால்தான் ஜெயமான வாழ்க்கைக்குள்ளே பிரவேசிக்க முடியும்.
பரிசுத்த வேதாகமத்திலே வெளிப்படுத்தின விஷேசத்தில் ஜெயம் கொள்கிறவர்கள் பெற்றுக் கொள்ள கூடிய அநேக ஆசீர்வாதங்களை குறித்து எழுதப்பட்டுள்ளது. ஜெயங்கொள்ளுகிறவர்கள் தான் பரலோகத்திற்குள்ளே பிரவேசிக்க முடியும். அப்படியென்றால், ஜெபிக்கிறவர்கள் தான் பரலோகத்திற்குள் செல்ல முடியும். வெளி. 21:7ல் வேதம் சொல்லுகின்றது “ஜெயம் கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்”.
அப்படியென்றால், ஜெபிக்கிற மனுஷன்தான் தன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான். இது நிச்சயம்.
சிலபேர் சொல்லுவார்கள், நானும் தினசரி ஜெபிக்கிறேன் பிரதர். ஆனால், என் வாழ்க்கையில் ஜெயமே இல்லை. மேலும், அநேக காரியங்களில் நான் பதிலையோ அல்லது நன்மைகளையோ பெற்றுக் கொள்ளாமலேயே இருக்கிறேன். இதற்கு என்ன காரணம் என்று அநேகர் கேட்கிறார்கள். இன்னும் ஒரு சிலபேர் ஜெபித்து ஜெபித்து என்ன பயன் என்று சொல்லி சோர்ந்து போய் ஜெபத்தையே விட்டு விடுகிறார்கள்.
உண்மைதான் இன்று அநேகருடைய ஜெபத்திற்கு பதிலே கிடைக்காமல் போய் விடுகிறது. அவர்கள் மணிக்கனக்காக ஜெபித்தாலும் சரி, விழித்திருந்து ஜெபித்தாலும் சரி, மேலும் எப்படி ஜெபித்தாலும் அந்த ஜெபத்திற்கு பதில் கிடைக்காமல் போய் விடுகின்றது. இதற்கு காரணம் என்னவென்று வேதத்தின் மூலம் பார்ப்போமென்றால், அநேக காரியங்களை வேதம் நமக்கு போதிக்கின்றது. அவைகளையெல்லாம் நாம் ஒரே நேரத்தில் தியானித்து விட முடியாது. ஆகவே, பரிசுத்த ஆவியானவருடைய ஒத்தாசையோடு நமது ஜெபத்திற்கு பதில் கிடைக்காத காரணத்தை ஒவ்வொரு இதழ்களிலும் ஒன்றோ அல்லது இரண்டோ காரியங்களை ஆராய்ந்து அவைகளை நம்முடைய ஜெப ஜீவியத்தில் சரிப்படுத்திக் கொண்டு நாம் ஜெபித்து ஜெயத்தை பெறுவோமாக. வேதம் சொல்கிறது, யாக்கோபு 4:3ல் “ நீங்கள் விண்ணப்பம் பண்ணியும் உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்க வேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியால் பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்” என்று அருமையாக அப்போஸ்தலனாகிய யாக்கோபு தனது நிருபத்தில் எழுதியுள்ளார்.
ஆம். நாம் இந்த உலகத்தின் மேன்மைக்காக மாத்திரம் அல்லது நமது சுயத்திற்காக மாத்திரம் தகாதவிதமாய் ஜெபிக்கிறபடியால் நமது ஜெபத்திற்கு பதில் பெற்றுக்கொள்ள முடியாது என்று வேதத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் 1கொரி. 15:19ல் பரிசுத்த பவுல் “இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால் எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்” என்று எச்சரித்துள்ளார்.
லூக்கா 23:39 முதல் 43 வரை உள்ள வசனங்களில் இரண்டு கள்ளர்களின் ஜெபத்தை பார்க்க முடிகிறது. அதில் ஒருவன் தான் குற்றவாளி. பாவி என்று உணராமலும், ஒத்துக்கொள்ளாமலும் அழிந்து போகின்ற உலகத்தின் சுய விடுதலைக்காக, நன்மைக்காக தகாதவிதமாய் இயேசுவிடம் கேட்டது மாத்திரமல்ல பரிகாசம் செய்து இகழ்ந்தான் என்று வேதத்தில் வாசிக்கிறோம். அதனால் அவனுடைய ஜெபம் கேட்கப்படவில்லை.
இன்னொரு கள்ளன் தான் ஒரு குற்றவாளி, பாவி என்று உணர்ந்து ஒத்துக்கொண்டு, அழிந்து போகின்ற உலகத்தின் சுய விடுதலைக்காக, நன்மைக்காக ஜெபிக்காமல் என்றும் அழியாத நித்திய ராஜ்ஜியத்தின் ஆசீர்வாதத்திற்காக தாழ்மையோடு ஆண்டவரே... அடியேனை நினைத்தருளும் என்று ஒரு வாஞ்சையோடும்,அர்ப்பணிப்போடும் ஜெபித்தான். உடனே அவனுடைய ஜெபம் கேட்கப்பட்டு பதில் கிடைத்தது. பரதீசியின் வாழ்வையும் பெற்றுக் கொண்டான்.
ஆகவே பிரியமானவர்களே, பரதீசியின் மேன்மையை பெற்றுக்கொண்ட கள்ளனைப் போல நாமும் நமது குறைகள், குற்றங்களை உணர்ந்து ஆண்டவரிடம் நம்மை தாழ்த்தி அர்ப்பணித்து அறிக்கையிட்டு மத். 6:33ன் படி, முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தின் மேன்மைக்காக ஜெபிப்போம் என்றால் தேவராஜ்ஜியத்தின் மேன்மையும் கூடவே இவ்வுலகத்தில் நம்முடைய தேவைகளையும் கர்த்தர் நமக்கு கொடுத்து நம்மை ஆசீர்வதிப்பார்.
இவ்விதமாய் ஜெபிப்போம்!
கர்த்தரிடமிருந்து ஜெயத்தை பெற்றுக்கொள்வோமாக!
ரா. ஜீவா மனோகர்.
Re: ஜெபமே ஜெயம்
Fri Feb 12, 2016 9:17 am
ஜெபமே ஜெயம் – 4 :
ஜெபமே ஜெயம் பகுதியில் நாம் தொடர்ந்து ஜெபத்தைக் குறித்தே தியானிக்கும்படி அழைக்கப்படுகின்றோம்.
கடந்த செய்தியில் ஏன் நமது ஜெபத்திற்கு பதில் கிடைக்காமல் போகின்றது என்பதற்கு அநேக காரணங்கள் உண்டு. அதில் ஒரு காரணம் தகாத விதமாய் நாம் ஜெபிப்பதினால் நமது ஜெபத்திற்கு பதில் கிடைக்கவில்லை என்பதை நாம் தியானித்தோம்.
இந்த செய்தியில் நாம் ஜெபிக்கின்ற ஜெபத்திற்கு ஏன் பதில் கிடைக்கவில்லை என்பதற்குரிய அடுத்த காரணத்தை நாம் சற்று தியானித்து நம்முடைய வாழ்க்கையில் உள்ள குறைகளை சரி செய்து நாம் ஜெபிக்கின்ற ஜெபத்திற்கு பதிலை பெற்றுக் கொள்வோமாக.
ஏரேமியா 33:3ல் “என்னை நோக்கிக் கூப்பிடு்; அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து,” என்றும் நீதிமொழிகள் 8:17 “அதிகாலையில் என்னை தேடுகிறவர்கள் என்னை கண்டடைவார்கள்” என்றும் வேதத்தில் நாம் வாசிக்கிறோம்.
ஆனால் பாருங்கள். மேலே குறிப்பிடப்பட்ட வசனங்களுக்கு எதிர் மாறாக அதே வேத புத்தகத்தில், நீதிமொழிகள் 1:28ல் “அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறு உத்தரவு கொடுக்க மாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்! என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த வேத வசனத்தின்படி தான் நமது ஜெபத்தி்ற்கும் மறுஉத்தரவு கிடைக்காமல் போகின்றது. அதிகாலையிலே தேடினாலும் தேவனை காண முடியவில்லை. இதுதான் நம்முடைய ஜெபத்தின் இன்றைய நிலை. இது ஏனென்று வேதம் சொல்கிறது என்றால் நீதிமொழிகள் 1:29,30ல் அவர்கள் அறிவை வெறுத்தார்கள். கர்த்தருக்கு பயப்படுகிற பயம் இல்லை. என் ஆலோசனைகளை விரும்பவில்லை. என் கடிந்து கொள்ளுதலை அசட்டை பண்ணினார்கள் என்பதாக சொல்கிறது.
ஆம் நாம் எவ்வளவோ வேத வசனங்களை வாசிக்கிறோம். அல்லது கேட்கிறோம். ஆனால், அந்த வேதவசனத்தின் படி நமது நடக்கை இருக்கின்றதா? இன்னும் அநேக ஊழியக்காரர்கள் மூலம் கர்த்தருடைய ஆலோசனையை பெறுகின்றோம். அந்த ஆலோசனையின்படி முழுமையாக நடக்கின்றோமா என்று பார்ப்போமென்றால் அதுவும் கிடையாது. மட்டுமல்ல சில தீர்க்கதரிசிகளின் மூலம், அல்லது பிரசங்கியார்களின் மூலம் அல்லது வேதவசனங்களின் மூலம் நாம் எச்சரிப்பின் சத்தத்தை, கடிந்து கொள்ளுதலை கேட்கிறோம். ஆனால், அந்த எச்சரிப்பின் சத்தத்திற்கு கீழ்படிவதோ, செவி சாய்ப்பதோ கிடையாது.
உதாரணமாக கர்த்தருடைய பரிசுத்த ஆலயமாக இருக்கிற நமது சரீரத்தை கெடுக்கக்கூடிய குடி, புகை பிடித்தல், பாக்குப் போடுதல், கஞ்சா, போதை ஊசிப் போடுதல், போன்றவைகளிலிருந்து விலகு என்றால் அந்த உபதேசத்திற்கு செவி சாய்ப்பதில்லை.
இன்னும் அதி முக்கியமாக எல்லோரையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கின்ற இந்த சினிமா, தொடர் நாடகங்கள், நமது சிந்தனைகளையும், இருதயத்தையும் கெடுக்கிறது. மாம்ச இச்சை வெறிகளை தூண்டுகிறது. இதை விட்டு விலக நமக்கு மனமில்லை.
ஒரு நாள் நானும் ஒரு பாஸ்டரும் T.V.S வண்டியில் ஒரு கிராமத்திற்கு செல்லும்போது நான்கு வாலிப சகோதரிகள் எதிரே வந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களை கடந்து செல்லும் போது, அதில் ஒரு வாலிப சகோதரி தனது இரண்டு கைகளையும் போட்டோ எடுப்பது போல, தனது கண்களிலே வைத்து கேலி செய்தார்கள். முதலில் அவர்களை கடந்து சென்று விட்டோம். சற்று தூரம் போனபின்பு திரும்பி வந்து, அந்த நான்கு சகோதரிகளையும் அழைத்தோம். அவர்களும் முன்னே அறிமுகமாகதவர்களே. பழக்கமில்லாதவர்களே என்று கொஞ்சம் கூட பயமி்ல்லாமல் நாங்கள் அழைத்தும் அருகில் வந்தார்கள். உடனே நான் இறங்கி, ஆமாம். நாங்கள் கடந்து போகும்போது போட்டோ எடுப்பது போல நடித்தீர்களே ஏன்? என்று கேட்டேன். அப்போது அந்த சகோதரி தைரியமாக சினிமாவில் கதாநாயகனின் ஒரு காட்சி உண்டு அதன்படி நடித்தேன் என்றார்.
பாருங்கள் எத்தனையாய் சினிமா வாலிப சகோதர, சகோதரிகளையும் மாத்திரமல்ல, அநேக குடும்பஸ்தர்களையும் கெடுத்து வைத்திருக்கிறது. இவ்விதமாய் நமது பரிசுத்த வாழ்க்கையையும் கர்த்தருடைய நேரத்தையும் கெடுக்கக்கூடிய சினிமா, நாடகங்கள் போன்றவற்றை விட்டுவிட்டு பரிசுத்தமாக வாழ வேண்டும். வேதம் இதற்கு ஒரு பெயர் சொல்லுகிறது. இது பரஸ்திரி என்று. தேன்கூடு போல ஒழுகும் நடைகள் மாறி, மாறி விகாரப்படும் சிலவேளை வெளியிலிருப்பான், சிலவேளை வீதியிலிருப்பான் என்று.
ஆகவே இப்படியாப்பட்ட ஆலோசனைகளுக்கு கடிந்து கொள்ளுதலுக்கு செவி சாய்த்து கர்த்தருக்கு பயந்து அவருடைய வேதத்தில் தியானமாயிருந்து அதன்படி நடக்கிற மனுஷனுக்கு சங்.91:15ன் படி அவன் என்னை நோக்கி கூப்பிடுவான். நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச் செய்வேன். ஆபத்தில் நானே அவனோடிருந்து அவனைத் தப்புவித்து அவனை கனப்படுத்துவேன்”. என்ற வார்த்தையின் படி கர்த்தர் நமக்கு உதவி செய்து நம்மை வழி நடத்துவார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாமும் நமது வாழ்க்கையில் இந்த எச்சரிப்பின் சத்தத்திற்கு செவிசாய்த்து கீழ்ப்படிந்து எல்லா தீய பழக்கத்தையும் விட்டுவிட்டு நம் ஆண்டவரிடம் ஜெபிப்போம். ஜெயத்தை பெற்றுக் கொள்வோம்.
ரா. ஜீவா மனோகர்.
Re: ஜெபமே ஜெயம்
Fri Feb 12, 2016 9:18 am
ஜெபமே ஜெயம் – 5
என்ன சென்ற செய்தியில் வாசித்ததுபோல சரீரத்தை கெடுக்கக்கூடிய குடி, புகைத்தல், பாக்குப்போடுதல், போன்ற தீய பழக்கத்தையும், சினிமா, தொடர் நாடகங்கள் பார்த்தல், போன்ற காரியத்தையும் விட்டுவிட்டு ஜெபித்தீர்களா? ஜெயம் பெற்றுக் கொண்டீர்களா?
என்ன இவைகளை விட்டுவிட மிகவும் கஷ்டமாக இருக்கிறதா? விட்டுவிட்டு ஜெபித்தால் தான் இயேசப்பா பதில் கொடுப்பாங்க. இல்லையென்றால், எத்தனை நாள் ஜெபித்தாலும், எவ்வளவு ஊழியக்காரர்கள் ஜெபித்தாலும் பதிலே கிடைக்காது.
இன்னும் வேதத்திலே விட்டுவிட வேண்டிய அநேக காரியங்களை குறித்து சொல்லப்பட்டுள்ளது.
நீதி. 28:29 “வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அவருவருப்பானது.” அந்த ஜெபம் கேட்கப்படாது.
உபா. 18:10,11,12 ஆகிய வசனங்களின் மூலம் கர்த்தர் நமக்கு உரைக்கிறது என்னவென்றால், குறி சொல்லுகிறவன், நாள் பார்க்கிறவன், அஞ்சானம் பார்க்கிறவன்,சூனியக்காரன், மந்திரவாதி, சன்னத்தக்காரன், மாயவித்தைக்காரன், செத்தவர்களிடத்தில் குறி கேட்கிறவன், இவர்கள் கர்த்தருக்கு அவருவருப்பானவர்கள். 14ம் வசனத்தில் இவர்கள் சொல்லுவதை நீ கேட்டு அவைகளை பின்பற்றினால்,அப்படி செய்தால் கர்த்தர் உத்தரவு கொடார்.
இன்றைய கிறிஸ்தவ வாழ்க்கையில் கிறிஸ்தவர்களாகிய நாம் ஒரு காரியத்தை செய்யும் போது, அல்லது ஒரு நல்ல காரியத்தை நடத்தும் போது அதற்கு முன்னே தேவசமுகத்தில் அந்த காரியத்தை கொண்டு சென்று அதற்காக பாரத்தோடு, உபவாசித்து ஜெபித்து, வேதவசனங்களை வாசித்துப் பார்த்து கர்த்தருடைய வழி நடத்துதலை தெரிந்து கொள்ளாமல், உடனே நல்லநாள் பார்க்கிறவனையும், குறி சொல்கிறவனையும், இன்னும் பல சூனியங்கள் செய்கிறவனையும் பார்த்து அவனிடத்தில் ஆலோசனை கேட்டு அதன்படி செய்கிறோம். அதிலே இந்த காரியம் கர்த்தரால் வந்தது. கர்த்தர் நமக்கு பெரிய காரியங்கள் செய்திருக்கிறார் என்று தலைப்பு கொடுத்து விடுகிறோம்.
பின்பு நாட்கள் கடந்து சென்று அந்த காரியத்தில் தோல்வியை சந்திக்கும்போது, என்ன கர்த்தர் என்னை கைவிட்டு விட்டார். ஒரு உதவியும் செய்யவி்ல்லை. என் கூப்பிடுதலுக்கு செவி கொடுக்கவி்ல்லை. என்றெல்லாம் சொல்லி விடுகிறோம்.
இன்னும் சிலபேர் செத்தவர்களிடம் குறிகேட்பது போல, மரித்துப் போன முன்னோர்களின் படங்களை வைத்துக் கொணடு அதற்கு மாலைப் போட்டு பூஜை செய்து கனப்படுத்துவது தேவையில்லை. இவர்கள் எங்களை வாழ வைத்த தெய்வம் அல்லது இவர்களின் நல்ஆசியுடன் என்றெல்லாம் சொல்லி அவர்களை கனப்படுத்துகிறோம். தேவையில்லை. மரித்துப் போன அவர்களால் நம்மை ஆசீர்வதிக்கவே முடியாது. அப்போது கர்த்தருடைய ஆசியும், ஆசீர்வாதமும் நமக்கு இல்லாமல் போய்விடும். கேட்டால் பெற்றோரை கனம் பண்ண வேண்டாமா என்பார்கள். உண்மைதான் கனம் பண்ணதான் வேண்டும். எப்படியென்றால், நமது முன்னோர்களோ,அல்லது பெற்றோர்களோ கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து, கிறிஸ்துவைப் பின்பற்றக் கூடிய நல்ல வழியில் வாழ்ந்து நம்மை விட்டு கடந்து சென்றிருப்பார்களேயானால், அவர்கள் விட்டுச் சென்ற அந்த கிறிஸ்துவுக்குள் நடக்க கூடிய நல்வழியை பின்பற்றி நடந்தால்தான் நாம் அவர்களை கனப்படுத்த முடியும். அவர்கள் பெயரை காப்பாற்ற முடியும். அப்படியில்லாமல், போட்டோவுக்கு மாலை போட்டு விட்டு நம் இஷ்டப்படி நடந்தால் நமது பெற்றோர்களை கனப்படுத்தவே முடியாது.
ஆகவே, வேத வசனங்களை ஏற்றுக் கொண்டு அதை இரவும் பகலும் தியானித்து வசனம் சொல்லுகிறபடி நாம் நமது காரியங்களை செய்தால், நாம் செய்வதெல்லாம் வாய்க்கும். கேட்கிறதெல்லாம் பெற்றுக் கொள்ளலாம்.
ஆகவே வேதவசனத்தைக் கேட்டு அதன்படி நடந்து ஜெபித்து ஜெயத்தை பெற்றுக் கொள்வோமாக.
ரா. ஜீவா மனோகர்.
Re: ஜெபமே ஜெயம்
Fri Feb 12, 2016 9:19 am
ஜெபமே ஜெயம் – 6
ஜெபம் என்பது இயேசுவோடு பேசுவது, அவரிடம் கேட்பது.
“கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்” மத். 7:7
“என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்” யோவான் 14:14
என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார்.
நாமும் தினசரி இயேசுவிடம் கேட்கிறோம், ஜெபிக்கின்றோம். ஆனால், நாம் நமது வாழ்க்கையில் முழுமையான ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள முடியவில்லை. ஏன் பெற்றுக் கொள்ள முடியவில்லை. “நீங்கள் என் நாமத்தினாலே பிதாவை கேட்டுக் கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய் கனி கொடுக்கும் படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும் படிக்கும் நான் உங்களை ஏற்படுத்தினேன்.” யோவான் 15:16 என்று இயேசு கூறுகிறார்.
அப்படியென்றால் நாம் ஜெபத்திலே கேட்பவைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் கனி கொடுக்க வேண்டும், கனி கொடுக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
யோவான் 15:4,5 ஆகிய வசனங்களில் இயேசு சொல்கிறார், நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால் கனி கொடுக்க மாட்டீர்கள்.” ஒருவன் என்னிலும், என் வார்த்தைகள் அவனிலும் நிலைத்திருந்தால் அவன் மிகுந்த கனிகளை கொடுப்பான்.
1. நாம் அவரில் நிலைத்திருந்தால் மிகுந்த கனிகளை கொடுக்க முடியும். நாம் அவரில் நிலைத்திருக்கிறோம் என்பதை எப்படி அறிந்து கொள்ள முடியும். வேதம் சொல்லுகிறது, 1 யோவான் 2:6 ”அவருக்குள் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவன் அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்.” அப்படியென்றால், இயேசு இந்த உலகத்தில் ஜீவிக்கும்போது எப்படி நடந்தாரோ, அப்படியே நாமும் நடக்க வேண்டும்.
1பேதுரு 1:15ல் “உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல, நீங்களும் உங்கள் நடத்தைகளெல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள்” என்று சொல்லுகிறது. அப்படியென்றால், நாம் அவரில் நிலைத்திருக்கின்றோம் என்று சொல்ல வேண்டுமென்றால் நமது நடக்கைகள் எல்லாவற்றிலும், அதாவது நமது பார்வை, சிந்தை, செயல்கள், நடக்கைகள் எல்லாவற்றிலும் நாம் பரிசுத்தமாய் காணப்பட வேண்டும். ஏனென்றால், ”அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை” என்று 1யோவான் 3:6ல் வேதம் சொல்லுகிறது. அவருடைய கட்டளைகளைக் கைகொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான். அப்படியென்றால், நான் இயேசு கிறிஸ்துவில் நிலைத்திருக்கிறேன் என்று சொல்ல வேண்டுமென்றால், நாம் எந்த பாவமும் செய்யாமல் இருந்து அவருடைய கற்பனைகளை கைகொள்ள வேண்டும்.
2. இயேசு : நான் அவனில் நிலைத்திருந்தால் மிகுந்த கனிகளை கொடுப்பான். யோவான் 15:5. அவர் நம்மில் நிலைத்திருக்கிறார் என்பதை நாம் எப்படி அறிய முடியும். 1யோவான் 4:12ல் “நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்.” அப்படியென்றால், நாம் மற்றவர்களிடத்தில் அன்பு செலுத்தவில்லையென்றால், நிச்சயமாக இயேசு நம்மில் இல்லை. எப்படி அன்பு செலுத்த வேண்டுமாம்.
ரோமர் 12:9ல் “உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக” என்றும்,1யோவான் 3:18ல் கிரியையினாலும், உண்மையினாலும் அன்புகூரக் கடவோம் என்றும் வேதம் சொல்லுகிறது. மேலும், 1யோவான் 4:20ல் தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனைப் பகைத்தால் அவன் பொய்யன் என்று சொல்லுகிறது. ஆகவே, இயேசு கிறிஸ்து நம்மில் நிலைத்திருக்கிறார் என்று சொல்ல வேண்டுமென்றால், நாம் நமது சகோதரர்களிடமும், மற்றவர்களிடமும் மாயமற்ற, உண்மையான அன்பை கிரியையினால் வெளிப்படுத்த வேண்டும்.
அவர் நம்மில் நிலைத்திருக்கின்றார் என்பதை எப்படி அறியலாம்? 1யோவான் 3:24ல் அவர் நமக்கு தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம். அப்படியென்றால், பரிசுத்த ஆவியானவர் நம் இருதயத்தில் ஊற்றப்பட்டால்தான் இயேசு நம்மில் நிலைத்திருக்கின்றார் என்பதை உறுதிப்படுத்த முடியும். அந்த பரிசுத்த ஆவியினால் தான் தேவ அன்பு நம் இருதயங்களில் ஊற்றப்படுகிறது. (ரோமர் 5:5)
சீஷர்கள் பரிசுத்த ஆவியை பெற்றபின்பு தேவ அன்பு அவர்களில் ஊற்றப்பட்டது. எல்லாரிடமும் அன்பு செலுத்தி, சுவிசேஷத்தை அறிவித்து திரளான ஆத்துமாக்களை கனிகளாக பெற்றுக் கொண்டார்கள். அதனால்தான் அவர்கள் ஜெபித்த உடனே சப்பாணி நடந்தான், வியாதி சுகமானது, இன்னும் அநேக அற்புதங்கள்.
ஆகவே, நாமும் கனி கொடுக்கிற வாழ்க்கை வாழ்ந்து நமது ஜெபத்திற்கு உடனே பதிலை பெற்றுக் கொள்ளுவோமாக.
ரா. ஜீவா மனோகர்.
Re: ஜெபமே ஜெயம்
Fri Feb 12, 2016 9:21 am
ஜெபமே ஜெயம் – 7
இந்த செய்தியிலும் யோவான் 15:16ன் படி நீங்கள் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்கு கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய் கனி கொடுக்கும்படி உங்களை ஏற்படுத்தினேன் என்று இயேசு கூறினாரே அதையே தொடர்ந்து சிந்திப்போம்.
நாம் ஜெபத்திலே கேட்பவைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால், நிச்சயமாக கனி கொடுக்கத்தான் வேண்டும். கனி கொடுக்க வேண்டுமென்றால், நாம் என்ன செய்ய வேண்டும்.
2பேதுரு 1:8ல் வேதம் சொல்லுகிறது இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், கனியற்றவர்களுமாயிருக்க வொட்டாது. எவைகள் நம்மை கனியற்றவர்களாயிருக்க வொட்டாது என்று பார்ப்போம்.
2பேதுரு 1:5,6,7 ஆகிய வசனங்களை நாம் வாசித்துப் பார்ப்போமென்றால், அவைகளில் எட்டுக் காரியங்களை குறி்த்து சொல்லப்பட்டிருக்கிறது. இவைகளை சுருக்கமாக நாம் தியானிப்போம்.
1. விசுவாசம்.
முதலாவது நமக்கு இருக்க வேண்டியது கிறிஸ்துவின் மேல் அசைக்கப்படாத விசுவாசம். மத்தேயு 21:21ல் இயேசு கூறியது போல சந்தேகப்படாத விசுவாசம் தேவை. தானி. 3:17ல் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ விசுவாசத்தோடு கூறியது போல விசுவாசம் நமக்குத் தேவை
2. தைரியம்
தானியேல் 6:10ல் வாசிக்கிறோம். தானியேலுக்கு விரோதமாய் சட்டம் இயற்றப்பட்ட போதிலும் தைரியமாய் தான் முன்பு செய்து வந்தபடியே ஜெபித்து வந்தான். எந்த சுழ்நிலையிலும் தேவன் என்னை கைவிடமாட்டார் என்ற தைரியம். நமக்கு எதிராக சட்டங்கள், சுழ்நிலைகள் வந்தாலும் கிறிஸ்து என்னை கைவிடமாட்டார் என்ற தைரியம் நமக்கு வேண்டும்.
3. ஞானம்
லூக்கா 2:40,52ம் வசனங்களில் வாசித்துப் பார்த்தால் இயேசு கிறிஸ்து ஞானத்தினால் நிறைந்து ஞானத்தில் விருத்தியடைந்தார். அப்படியாப்பட்ட ஞானம் நமக்குத் தேவை. நீதி. 1:7 கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். ஆகவே, கர்த்தருக்கு பயப்படுகிற பயம் எப்பொழுதும் நம்மில் இருந்து ஞானத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
4. இச்சையடக்கம்
பாவம் நிறைந்த இந்த உலகத்தில் இச்சையடக்கம் நமக்கு மிகமிக அவசியம்.
ஆதி. 39:9-13 வரை உள்ள வசனங்களில் யோசேப்பு பாவத்தின் இச்சைக்கு ஓடி தன்னை பரிசுத்தமாய் காத்துக் கொண்டது போல நாமும் உலகத்தின் இச்சைகளுக்கு விலகியோடி பரிசுத்தத்தை காத்துக் கொள்ள வேண்டும்.
5. பொறுமை
பொறுமை நமக்கு மிகமிக அவசியம். எண. 20:8-12 வரை உள்ள வசனங்களை வாசித்துப் பார்க்கும்போது மோசே தேவ சத்தத்தை கேட்டும் ஜனங்களின் கலகத்ததினாலே, கலகக்காரர்களே கேளுங்கள் என்று பொறுமை இழந்து கன்மலையை பார்த்து பேசுவதற்கு பதிலாக அடித்துவிட்டார். ஆகவே கானான் செல்லும் தகுதியையே இழந்துவிட்டார். ஆனால், யோபு பொறுமையோடு இருந்தபடியால் இரட்டிப்பான நன்மையை பெற்றுக் கொண்டார்.
6. தேவபக்தி
ஆபிரகாம் வாழ்க்கையை எடுத்துக்கொள்வோமென்றால், ஆதி 12:7 முதல் கர்த்தர் ஆபிரகாமோடு எப்போதெல்லாம் பேசுகின்றாரோ, அப்போதெல்லாம் கர்த்தருக்கென்று பலிபீடம் கட்டி பலியிட்டு தேவனை தொழுது கொள்வது வழக்கம். அதுபோல எல்லா சுழ்நிலையிலும் நாம் தேவபக்தியோடு இருக்க வேண்டும்.
7. சகோதர சிநேகம்
ஆதி 13:8,9ல் ஆபிரகாமுடைய சகோதர சிநேகத்தை குறித்தும், ஆதி 18:20 முதல் பார்ப்போமென்றால், தன் சகோதரனுக்காக ஆபிரகாம் திறப்பிலே நிற்கிறதை குறித்தும் வாசிக்கிறோம். மேலும் 1யோவான் 2:9ல் ஒளியில் இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனை பகைக்கிறவன் இன்னும் இருளில் இருக்கிறான் என்றும் சகோதர சிநேகத்தைக் குறித்து சொல்லப்பட்டிருக்கின்றது.
8. அன்பு
எல்லாவற்றிலும் மேலான அன்பு நமக்கு இருக்க வேண்டும். 1கொரி 13ம் அதிகாரம் முழுவதும் அன்பைக் குறித்து அழகாக சொல்லப்பட்டுள்ளது. அன்பு இல்லாமல் நாம் எந்த பாஷைகளை பேசினாலும், விசுவாசம் இருந்தாலும், சரீரத்தை சுட்டெரிக்க கொடுத்தாலும் அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை. நமது சத்துருக்களிடத்திலும், எதிராளிகளிடத்திலும், நமக்கு தீங்கு செய்பவர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்று இயேசு சொல்லுகிறார்.
ஆகவே, இந்த எட்டு குணநலன்களும் நமக்கு இருந்து பெருகினால் நாம் கனியற்றவர்களாய் இருக்க மாட்டோம். நிறைய கனிகளை கொடுப்போம். அப்படி கனி கொடுக்கும் போது நாம் ஜெபத்திலே கேட்கிறவைகளை நிச்சயமாக பெற்றுக் கொள்வோம்.
இப்படியாப்பட்ட கிருபைகளை கர்த்தர் தாமே நமக்கு தந்தருளுவாராக. ஆமென்.
ரா. ஜீவா மனோகர்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|